Sunday, May 2, 2010

பண்பலையூர் படும்பாடு

(உலகம் 21ம் நூற்றாண்டிலே உருண்டுகொண்டிருந்தாலும் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வந்த 13 ம் நூற்றாண்டுச் சோழர்களின் தொடர்ச்சியான பரமபரையைப் போல வெளித்தொடர்பற்று இருக்கின்றது, இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன் எழுதப்பட்ட இந்தக் கற்பனைக் கதையிலே வரும் ஊரும். இதிலே வரும் எந்தவொரு பெயரையோ அல்லது வேறு சம்பவங்களையோ வேறு எவரது பெயருடனோ அல்லது சம்பவங்களுடனோ ஒப்பிட்டு நீங்களே செய்துகொள்ளும் சுய கற்பனைகளுக்கு நான் பொறுப்பாளியல்ல)


காற்றிலே கலந்து கணீரென்று வரும் மாயக்கைப் பிள்ளையாரின் மணியோசையும், கோணாந்தீவு மரியன்னை தேவாலயத்தின் மிருதுவான இறைகீதமும் பச்சைப் பசேலெனப் பரந்து விரிந்த வயல்களின் கண்ணுள்ள நெல்மணிகள் காற்றிலே சரசரக்கும் ஓசையுடனும் கடற்கரையிலே கரைவலை இழுக்கும் மீனவர்களின் "ஏலேலோ ஐலசா.."கோரசுடனும்(சேர்ந்து படித்தல்)இணைந்து அந்தவூரின் பெயர் பண்பலையூர் தான் என்பதைப் பறைசாற்றி நிற்கின்றன.


தொலைபேசிகளோ, தொலைக்காட்சிகளோ, வானொலிகளோ இவ்வூருக்குள் பாவனைக்கு வர வெட்கித்து ஓடினாலும், விக்கித்துப் போகாமல்,பிறர் சொக்கித்துப் போகும்படி இன்புற்றே வாழ்கின்றனர் இவ்வூர் மக்கள்.எப்போதாவது யாராவது ஒருவர் வீட்டில் தொலைக்காட்சி வாடகைக்குப் பிடித்துப் படம் போட்டாலொழிய அவர்களின் பொழுது போவதெல்லாம் ஊரிலே பிரசங்கங்கள்(சமய சொற்பொழிவு போன்றது) செய்யும் பேச்சாளர்களை நம்பித் தான்.





ஊர்ச்சனத்தின் பொழுதைப் போக்காட்டுவதற்கென்றே(போக்குவதற்கு) அவ்வூரிலே "பக்தி","நெற்றி", "ஊரியன்" என்று பிரசங்கத்துறையிலே பழம் தின்று கொட்டை போட்டவர்களுடன் "கசந்தம்" என்ற ஒரு புதுப் பிரசங்கியாரும் ஊரில் உள்ளனர். நால்வரும் தம் குரல்களை ஆண்குரல்,பெண்குரல் களில் மாற்றிக் கதைப்பதிலும் ஒருவரே ஒரேநேரத்தில் 2,3 குரல்களில் மாற்றி மாற்றி கதைத்து மிமிக்ரி செய்வதிலும் கெட்டிக்காரர்கள். ஊரின் நான்கு மூலைகளிலும் நால்வரும் தமக்கென்று மேடைகளைத் தனித்தனியே போட்டு நிகழ்ச்சிகளை வழங்கிவருவார்கள்.சில நிகழ்ச்சிகளுக்கு கச்சான் விற்க வந்த கச்சான்காரியே கல்குலேற்றரில்(கணிப்பான்)கணக்குப் பார்க்குமளவுக்கு கூட்டம் களைகட்டினாலும்,பல நிகழ்ச்சிகளில் பார்வையாளரேயற்றுப் பேச்சாளர் தனக்குத்தானே கைதட்டும் பரிதாபமும் அரங்கேறும்.


ஒவ்வொரு பேச்சாளர்களும் வெவ்வேறு நிகழ்ச்சிகளை வழங்கித், தாங்களே வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு பாத்திரங்களாக தங்களை உருவகித்து,அதற்குத்தக்கவாறு குரல்களை மாற்றி,தங்கள் காந்தக் குரலாலும்,வசீகரமான நிகழ்ச்சி செய்யும் பாணியினாலும்(Style) ஊர் மக்களைக் கவர முயலுவார்கள்.அதற்காக அவ்ர்களே பல உத்திகளையும் கையாளுவார்கள். நகர்ப் புறங்களிள், ஐந்து ரூபா SMS (குறுந்தகவல்)களை அதிகளவுக்கு நேயர்களை அனுப்பத்தூண்டி, அதன்மூலம் அந்தத் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு கிடைக்கும் இலாபத்தில் தாமும் ஒரு பங்கு போடத் துடிக்கும் வானொலிகளைப் போல் செய்ய வசதிவாய்ப்புக்களோ, தொழில்நுட்ப அறிவோ இல்லாத அந்த ஊரில் பேச்சாளர்களே பார்வையாளரிடம் கேள்விகளைக் கேட்பார்கள்.





அனைவருக்கும் விடைதெரிந்திருக்ககூடியதான "ஆனைக்குட்டி ஐயருக்கு எத்தனை கால்?","நடிகர் ரஜனிகாந் இன் பெயர் பின்வருவனவற்றுள் எது? முதலாம் விடை விஜயகாந், இரண்டாம் விடை ரஜனிகாந், மூன்றாம் விடை லக்ஷ்மிகாந் ,நான்காம் விடை சிறிகாந் என்பது போன்ற கேள்விகளைத் தெரிந்தெடுத்துக் கேட்பார்கள். விடை தெரிந்தவர்கள் ஒரு துண்டிலே எழுதிப் பேச்சாளரிடம் கையளிக்க வேண்டு.சனமும் விழுந்தடித்துக் கொண்டு ஒரு கடதாசித் துண்டிலே அத்ற்குரிய விடையை எழுதிப் பேச்சளரிடம் கையளிக்கும்.அவரும் எல்லாத் துண்டுகளையும் எண்ணிவிட்டு,"ஆம்,எங்களுக்கு 89 துண்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.அனுப்பிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்." என்று வந்த மொத்தச் சனமே 39 தான் என்பதை மறந்து உளறித்தள்ளி விடுவார். சரியான விடை எழுதிய ஐந்து அதிர்ஷ்டசாலிகளுக்கு அயலூருக்கு வண்டிலில் இலவசமாக சென்று வருவதற்கான அனுமதியை, ஏதோ இந்தியா போவதற்கு விமானப் பயணச்சீட்டுக் கொடுப்பது போல ஒரு கர்வத்தோடு அறிவிப்பார்.


மேலும் பக்தி, தாங்கள் அடிக்கடி தான் தான் "தமிழ் மொழியின் பக்தி" என்றும்,"LMVR இன் தரப்படுத்தலில் தான் தான் முதலில் இருப்பதாகவும்" பீற்றிக்கொள்ள, ஊரியனோ,தான் கருத்துக்கணிப்பில் தெரிவு செய்யப்படமாட்டேன் என்பகை முதலே தெரிந்து கொண்டோ என்னவோ "கருத்துக் கணிப்பெல்லாம் வெறும் குருட்டுக் கணிப்பு.உங்கள் கணிப்புத் தான் குன்(Gun) கணிப்பு" என்று சனத்தைப் பார்த்து வடிவேலு பாணியில் கூறுவார்.அத்துடன் நிகழ்ச்சிகளின் இடையிடையே இந்த, இந்தப் பொருட்களை வாங்க நாடவேண்டிய ஒரே இடம் என ஊரிலுள்ள "மின்னிக் கண்ணன் கடை", "விக்கிப்பாப்பா கடை", "ஜம்பண்ணா கடை" போன்றவற்றின் விளம்பரங்களையும் அந்தந்தப் பேச்சாளர்கள் விளம்பரப் படுத்துவார்கள்.


அதிகாலை வேளைகளில் கூடுதலாக எல்லாப் பேச்சாளர்களது நிகழ்ச்சிகளுக்கும் கூட்டம் களைகட்டியிருக்கும்.வேலைக்குச் செல்ல ஆயத்தமாகும் ஆடவர்,பெண்டிருடன்,பள்ளி செல்லத் துள்ளி நிற்கும் சிறுவர்களுமென அனைவரும் காலைச் சாப்பாட்டுக்களுடன் வந்து மேடை முன்னமர்ந்து நிகழ்சிகளைப் பார்த்து அதிலே லயித்தவாறே சாப்பிடுக் கொண்டிருப்பர்.பேச்சாளர் "நெற்றி" காலையில் "ஒடியல்" என்ற நிகழ்ச்சியை "டோஷன்" என்ற புனை பெயரில் வழங்குவார்.அவரின் பேச்சும்,அதிலுள்ள கம்பீரமும்,அச்சரம் பிசகாத உச்சரிப்பும்,ஆங்கிலம் கலக்காத தமிழும் ஒரு "அட" போட வைக்கும்.ஆனால் அவர் தான் ஜோக் சொல்கிறேன் என்று சொல்லி, ஒரு சப்பையான,சொதப்பல் ஜோக் ஒன்றைச் சொல்லி,அதற்குத்தானே சிரிப்பது போல் மிமிக்ரியும் செய்ய சனமெல்லாம் தம் தலையை மோதிக்கொள்ள ஒரு சுவரைத்தேடி ஓடிக்கொண்டிருக்கும்.ஆனாலும் மற்றைய பேச்சாளார்களைப் போல், புதிய,குத்துப் பாடல்களை மட்டும் பாடினால் தான் சனம் நிகழ்ச்சியைப் பார்க்க வரும் என்ற குறுகிய நோக்கத்தை விடுத்து, பல அரிய ,இளைய சந்ததி கேட்கத்தவறிய, கேட்கவேண்டிய அரிய பாடல்களைத் தேடித் தேர்ந்தெடுத்துத் தருவதில் நெற்றிக்கு நிகர் நெற்றி தான்.அதிலும், டோஸன் தன் ஒடியல் நிகழ்ச்சியில் துணிந்து செய்யும் அந்த முயற்சியைச் சனமும் பாராட்டத் தவறுவதில்லை.


பக்தி,விடியற்காலையில் "ஊசியா" என்ற பெயரில் பெண்குரலிலும், "சனா" என்ற பெயரில் ஆண்குரலிலும் கதைக்கின்ற "சுணக்கம் தாயகம்" என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார்.பக்தியின் இருவேறுபட்ட பாத்திரக் குரல்களிலும் வந்து விழும் வார்த்தைகள் கணீரென்று காதை வந்தடையும்.கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கும்.உலக நடப்புக்களை, சனா என்ற ஆண்குரலின் மூலம் பக்தி கூறுவார்.பின்னர் அதே பக்தியே ஊசியா சனா பெயரில் சனாவின் பேச்சின் இடையிடையே,"ஆ.. சனா..O.K,..ரிக்க்ட்..m.. Yes.."ஆங்கிலமும் கலந்து கதைப்பார்.


மற்ற மேடையிலே ஊரியன், ஊரியராகங்கள் என்ற நிகழ்ச்சியை வழங்கிக்கொண்டிருப்பார்.ஒருவரை எழுப்பி, "நான் 50000 இற்கும் குறைவான ஒரு இலக்கத்தை நினைத்துள்ளேன்.நீங்கள் அந்த இலக்கத்தை விட சிறிய ஒரு எண்வரை சொல்லலாம்.நீங்கள் சொல்லுமளவு தொகை உங்களுக்குப் பரிசாக வழங்கப்படும்.அதை தாண்டினால் உங்களுக்கு பரிசு இல்லை" என்று நிகழ்ச்சிய வழங்கிக் கொண்டிருப்பார்.சனமும் ஆர்வதுடன் பங்குபற்றிக் கொண்டிருக்கும்.


அதன்பின் நெற்றியார்,10 மணிமுதல் ஒருமணி வரை,"பினோத பியூகம்" என்ற நிகழ்ச்சியை,"பிமல்" என்ற ஆண்குரலிலும்,"மைதேகி" என்ற பெண்குரலிலுமாய் மாறிமாறி வழங்குவார்.மாட்டுச் சாணம்,ஆட்டுப் புழுக்கை,யானை இலத்தி என்பது போல ஏதாவது 5 குப்பைகளைத் தெரிந்தெடுத்து,அதிலே எது நல்லது என்று கேட்டு சனத்தை அறுப்பார்.பக்தியாரோ,"பக்தி எக்ஸ்பிரஸ்" என்ற நிகழ்ச்சியை,"நயானா" என்ற புனை பெயரில் ஒரு பெண்குரலில் வந்து,"கீ..க்கீ ,கீ.." என்று கத்திக் கத்தியே சனத்தின் காதெல்லாம் இரத்தம் வராதகுறையாக செய்துவிடுவார்.ஆனால் ஊரியனின் "விசைச் சமர்" நிகழ்ச்சி ஓரளவு பரவாயில்லாமல் இருக்கும்.ஆனால் "பிக்னேஸ்" என்ற பெயரில் அவர் படுத்தும் அட்டகாசம் சனத்தைப் போதும்போதும் என்றாக்கிவிடும்.


மதியச் சாப்பாட்டின் பின்னர் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு மீண்டும், ஒரளவு சனம் களைகட்டும்.ஊரியன்,"சும்மாளம்" என்றும், நெற்றி, "பெற்றது பையளவு" என்றவாறும், பக்தி, "தலை பாயுதே" என்ற பெயரிலும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவார்கள்.உலக நடப்புக்களை கொஞ்சமாவது அறிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தான் அந்த நேர நிகழ்ச்சிகளுக்கு சனம் கூடுதலாக கூடும்.ஆனால் அவர்களோ அத்திபூத்தாற் போல் ஒரிரு விடயங்களைக் கூறிவிட்டு,சிம்புவுடன் நயனதாரா படுத்தார்,பிரபுதேவாவுடன் எழும்பினார் என்று ஐந்து சததிற்கும் பிரயோசனமில்லாத கதைகளைக் கதைத்து, சனத்தின் எதிர்பார்ப்பையும்,பொன்னான நேரத்தையும் மண்ணாக்கிவிடுவார்கள்.





நயந்தாரா யாருடனும் படுத்தாலென்ன,விட்டாலென்ன நீங்கள் பிரயோசனமான தகவல்களைத் தரலாம் தானேயென்று சனம் ஆதங்கப் பட்டுக் கொள்ளும்.தொடர்ந்து சினிமா புராணம் படிக்காமல் வேணுமென்றால் நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்காக இடையிடையே ஒன்றிரண்டை இணைத்துக் கொள்ளலாம் தானே என்று சனம் அறிவுரை கூறினாலும் அதைக் காதில் போடுவதாய் இவர்கள் இல்லை.தங்களுக்கு உலகநடப்புத் தெரியதென்றோ அல்லது இவர்கள் தங்களுக்கு உலக நடப்புத் தெரியாததாலோ அவ்ற்றை நிகழ்ச்சியில் இணைப்பதில்லை என்ற சனத்தின் கேள்வியும் யோசிக்கவைக்கத்தான் செய்கிறது.


மாலையில் வேலை சென்றவர்கள் வீடு மீண்டு,தேநீர் அருந்தியவாறே,இளைப்பாறிக் கொண்டே பேச்சாளர்களின் மாலைநேர நிகழ்ச்சிகளை ரசிக்கத் தொடங்குவார்கள்.பக்தி,"ஹலோ பக்தி" என்ற பெயரில் "விராஜ்" மற்றும் "பவிதா" என்ற ஆண் பெண் குரல்க்ளிலும், ஊரியன்,"என்றென்றும் பன்னகை" என்ற நிகழ்ச்சியை "தவா" மற்றும் "" என்ற ஆண் பெண் குரலிலும் மாறி மாறிச் செய்து கொண்டிருக்க நெற்றி, "பந்துரு" என்ற ஆண்குரலில் தனித்தவில் வாசித்துக் கொண்டிருப்பார்.


மற்றப் பக்கம் கசந்தம், கசந்தம் குட்டி என்ற பெயரில் இந்த மூன்று பேரையும் வைச்சு அறு அறு என்று அறுத்தெடுத்துக் கொண்டிருப்பார்.சில சனம், "கேட்க நல்லாத்தான் இருக்குது உங்கட பகிடிகளூம், உந்த வானொலிகளூக்கை நடக்கிற கூத்துகளூம்.ஆனால் நீங்களும் முந்தி அதுகளூக்குள்ளதானே இருந்தையள் " எண்டு இடக்கு முடக்கா கேள்வி கேட்கையுக்கை மட்டும் அவற்றை முஞ்சை ஏதோ ஒரு படத்திலை செந்திலைப் பாத்து , கவுண்ட மணி, "அடேய் கோமுட்டித் தலையா இது தாண்டா மான்றில்(mantle) இதிலையிருந்து தான் பளீச்செண்டு வெளிச்சம் வருது.... ,இதுக்குத் தான் ஒரு ஆல் இன் ஆல் அழகு ரஜா தேவை எண்டு சொல்லுறது" எண்டெலாம் லெக்சர் அடிச்சுக் கொண்டிருக்க, "இதிலேருந்து எப்பிடின்னே வெளிச்சம் வரும் எண்டு .." மான்றிலைப் புடுங்கி கொண்டு செந்தில் கேட்கேக்கை கவுண்டற்றை முகம் மாறுமே அப்பிடி மாறிப் போகும் கசந்தம் குட்டியின்றை மூஞ்சை. எண்டாலும் "அக்கக்காய் அக்..ஆ" எண்டு சிரிச்சு ஒரு மாதிரி சிரிச்சு மழுப்பிப் போடுவார்.


பக்தி ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்கும் "அன்னையர்க்காக..","மண்ணின் மைந்தர்கள்",”பக்தி சூப்பர் ஸ்டார்” போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் தரமானதும்,அவசியமானதும் என்பது சனத்தின் கருத்து.ஆனால் ஞாயிறு பகலில்,"சொங்கி டைம்" என்ற சொங்கி நிகழ்ச்சியை,சொங்கிப் பெயரொன்றில்,நிகழ்த்துவார்.குப்புற விழுந்தும் மீசையில மண் ஒட்டவில்லை என்பது போலதான்,பெரிய Style(பாணி) ஆகத் தொடங்குறன் என்று தொடங்கி பிசுபிசுத்துப் போன பிறகும் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து வைத்திருக்கிறார்கள் என்று சனம் கைதட்டிச் சிரிக்கும்.


அத்தோடு வார நாட்களில்,"பிலாச் சோறு" என்ற நல்லதொரு நிகழ்ச்சியினிடையே "பாயா" என்ற பெயரில் வழங்கும் பக்தி, தான் ஏதோ மெத்த படித்த மேதாவி என்று நினைத்துக் கொண்டு, தான் சொல்வதெல்லாத்தையும் சனம் கேட்கும் என்றதொரு நினைப்பிலே அலட்டலோடை அவிக்க வெளிக்கிட்டால் சனமெல்லாம் விட்டுவிட்டுப் போய் வீடுகளுக்கை படுக்க வெளிக்கிடும்.


என்னதான் ஒரு சில குறைகள் இருந்தாலும் அந்தப் பேச்சளர்களின் திறமைகளையும், அவர்களின் பேச்சாற்றல்களையும் சனம் ரசிக்கின்றது,அதிலே லயித்து சிரிக்கின்றது,பொழுதை போக்காட்டுகின்றது.அந்தவகையில் அவர்களின் பணி போற்றுதற்குரியதென்பதே சனதின் கருத்து.

Sunday, April 18, 2010

புறக்கணிக்கப் பட்டும் புறக்கணிப்பின் வலியுணராப் புண்ணாக்குகள் நாங்கள்

ஈழத்தின் இனப் பிரச்சினை முற்றி, முறுகி, பொங்கி எழுந்து, பெரும் போராட்டமாகி, உச்சத்தைத் தொட்ட பின்னர் அடக்கப் பட்டிருந்தாலும் அதற்கான அடிப்படைக் காரணம், மொழி ரீதியான, இன ரீதியான புறக்கணிப்புத் தான் என்பதை எவரும் மறுதலித்து விட முடியாது.அறுபது ஆண்டுகளாய் ஆழமாக்ப் புரையோடிப் போன பிரச்சினையின் ஆணிவேர் எதுவென்று அறுதியிட்டுத் தெரிந்திருந்தும் அதற்கான தீர்வை முன்வைத்து, அம்மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து, ஆற்றாமைகளை,ஆதங்கங்களைக் களைவதை விட்டுவிட்டு இப்போதும் இசைந்து கொடுக்காமல் இடாம்பிகமாகப் பேசிக் கொண்டிருந்தால் இன்னுமொரு அறுபது ஆண்டுகள் பின்னோக்கி நாடு செல்வதைத் தடுக்கமுடியாது என்றெல்லாம் ஐ.நா செயலாளரென்ன ஆண்டவனே வந்து சொன்னாலும் ஒரு பிரயோசனுமுமில்லை என்பது ஓராம் ஆண்டு படிக்கும் பிள்ளைக்கே தெரிந்த உண்மையெனப்தால் நாம் அதை விட்டு விட்டு சொல்ல வந்த விடயத்திற்குச் செல்வோம்.



எந்தவொரு பெரும்பான்மையினமும் ஒரு சிறுபான்மையினத்தின் உணர்வுகளை மதிக்காமல்,அவர்களை அடக்கி, ஆள நினைக்கும் போது ஏற்படுகின்ற அந்த வலி,வேதனை,,குமுறலை வார்த்தையில் வடிக்க முடியாது.அதன் போது ஏற்படுகின்ற கோபம் கொடூர்மானது.கொன்று உயிரைத் தின்றிடவும் தயங்காது.உலகில் ஏற்பட்ட பிரச்சினைகளில் பெரும்பாலானாவை புரட்சிகளாகட்டும், முதலாளி, தொழிலாளி பிரச்சினையாகட்டும் ஆளும் வர்க்கம் -மக்கள் புரட்சியாகட்டும் சுதந்திரப் போராட்டங்களாகட்டும் எதோவொரு வகையில் பெரும்பான்மை, சிறுபான்மை சம்பந்தப் பட்டதாகவே இருக்கின்றன.



அதனை நாங்கள் அனுபவித்திருக்கின்றோம்.எங்கள் மொழி, எங்கள் கலாசாரம் மதிக்கப் படாத போது,எம்மவனுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்படாத போது, எம் நிலங்கள் பறிக்கப் பட்ட போது, எம் கலாசராம் இரவோடு இரவாக வழித்துத் துடைக்கப் பட்டு அழிக்கப் பட்ட போது, வரலாறு மாற்றி எழுதப்பட்ட போது எம் நெஞ்சில் ஏற்பட்ட வலியை, வேதனையை அனுபவித்து உணர்ந்திருக்கின்றோம். ஆக பெரும்பான்மையினமும் சிறுபான்மையினமும் ஒன்றாக ஒரு சமுதாயத்தில் உள்ள போது சிறுபான்மையினருக்கு ஏற்படக்கூடுய வலிகள் மற்றைய எல்லாரையும் விட எங்களுக்கு அதிகமாக தெரியும்.தெரிந்திருக்க வேண்டும்.



இங்கே பெரும் பான்மையினம், சிறுபான்மையினம் என்பது இரு இனங்களாகத் தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.ஒரு வளர்ச்சியடைந்த பிரதேசமும் வளர்ச்சி குன்றிய பிரதேசமுமாகவும்,பிரபல நகரப் பாடசாலையாகவும், பின்தங்கிய கிராமப் பாடசாலையாகவும், வசதியான ஒரு ஊரும் வறுமை மிகுந்த இன்னுமொரு ஊராகவும், உயர்ந்த சாதியாகவும் தாழ்ந்த சாதியாகவும்,ஆண் சமுதாயமாகவும் பெண் சமுதாயமுமாகவும் ஏன் படித்த ஒருவனாகவும் படிக்காத இன்னுமொருவனாகவும் அல்லது வேலை செய்யும் ஒருவனாகவும் வேலையற்று இருக்கும் இன்னொருவனாகவும் இருக்கலாம். மேற்சொன்ன சோடிகளில் ஒன்றிலிருந்து மற்றையது ஆளுமையிலோ, அதிகாரத்திலோ,கல்வியிலோ,வசதியிலோ,பிரபலத்திலோ ஒன்று உயர்ந்து,பெரும்பான்மையாகி,அது சொல்வதை மற்றையது கேட்கும் படியாய்,அல்லது கேட்க வைக்கச் செய்கிறது.மற்றையதுஅடங்கிப், பதுங்க வேண்டியதால்,நெஞ்சு பொருமி,உள்ளுக்குள் விம்மி,அழுகின்றது.



எனக்கு விளங்காத ஒன்று இது தான்.இவ்வளவு பட்டும் எங்களுக்கு ஏன் இன்னும் புத்தி வரவில்லை என்பதே? மிகச் சிறிய இனமான ஈழத் தமிழினம் மிகப் பெரிய இழப்பினை சந்தித்துள்ளது அதன் போராட்டத்திலே.ஆனாலும் அதெல்லாம் மறந்து,இங்கு பிறந்தவர்கள் தான் எல்லாவற்றுக்கும் தலைப்பாகை கட்ட வேண்டும்,இவர்கள் தான் கலாசாரத்தின், தமிழின் காவலர்கள்.இந்த இடத்தில் பிறந்தவர்களுக்கு என்னடா தமிழ்ப் பற்று போன்ற கதைகள் மற்றவர்களுடைய மனங்களில் ஏற்படுத்தப் போகும் வலியை நாம் அறிய மாட்டோமா?அல்லது உணர மறுக்கின்றோமா? அல்லது உணார்ந்தும் ஊமைகள் போல் இருக்கின்றோமா?



ஒரு பிரபலமான பாடசாலையிலிருந்து வந்தவர்கள்,சிறு பாடசாலையிலிருந்து வந்தவர்களை நக்கலடிப்பது,அவர்களை வம்புக்கு அழைப்பது,ஏதோ தாங்கள் மட்டும் தான் கொம்புகள் போல் கதைப்பது அவர்களை தனித்தனியே ,தம்முள் சிறு சிறு குழுவாகச் சேர்ந்தியங்கவே தூண்டும் என்பதை நாம் மறந்து விடுகின்றோம். நாங்கள் பாடசாலைகளில் படிக்கின்ற காலங்களிலெல்லாம் எம் பாடசாலை ஆசிரியர்கள், எம் மண்ணில் பெரும் பான்மை இந்துக்களிடையெ சிறுபான்மையாக வாழ்ந்து கொண்டிருந்த கிறிஸ்தவர்களைப் பார்த்து "சோத்துக் கிறீஸ்தவம்" என்று கூறி எள்ளி நகையாடியிருக்கின்றோம்.ஆசிரியர்கள் போனால் பிறகு கூட நாங்கள் அவர்களை அவ்வாறு பரிகாசித்து வம்புக்கிழுத்திருக்கின்றோம்.அவர்கள் சோத்துக்கும் மதம் மாறினாலென்ன மாறாவிட்டால் தானென்னெ ? என்று எம் பாட்டிலிருந்திராமல் அவர்களின் மத ரீதியான உணர்வுகளைத் தீண்டிப் பார்த்திருக்கிறோமே என்பது இப்போது தான் உறைக்கிறது.




ஒரு தாழ்ந்த சாதிப் பையனை,அவனின் சாதியின் பெயரால் கோவில்களிலும் பொது வைபவங்களிலும் தள்ளி வைக்கும் போது அவனுக்கு ஏற்படும் மன நிலையை எம்மால் உணரமுடியாதுள்ளது என்றால் அதை நம்புவது சற்றுக் கடினமாகவுள்ளது.ஒரு படிக்காதவனைப் பார்த்து அவன் படிப்பப் பற்றி எள்ளி நகையாடும் போதோ அல்லது வேலை எடுக்காதவனின் இயலாமையப் பரிகாசிக்கும் போதோ அல்லது ஒரு வானொலி, வானொலி உலா நிகழ்ச்சிகள் நடாத்தச் செல்லும் போது ஒரு பிரதேசம் புறக்கணிக்கப் படுகின்ற போதோ ஏற்படுகின்ற வலி எங்களுக்கு நாங்கள் புறக்கணிக்கப் பட்ட போது, படுகின்ற போது ஏற்படாததா?



ஏன் பெண்கள் அது செய்யக் கூடாது,இப்படித்தான் இருக்க வேண்டும், அப்பிடித் தான் உடுத்த வேண்டும் என ஆணாதிக்கம் ஆணையிடும் போது,பெண்மையானவள் தான் தனது தேவைகளை சுயநிர்ணயம் செய்ய முடியாமையை உணர்வதை எங்களால் உணரமுடியதுள்ளது என்று கூறீனால் அது வேடிக்கை தானன்றி வேறொன்றுமில்லை.உள்ளக சுயநிர்ணய உரிமையை வழங்காத நாம் அவள் வெளியக சுயநிர்ணய உரிமைக்காய் விவாகரத்து கோரினால் மறுப்பது எதனால்?



அது மட்டுமல்லாது இன்று பல்கலைக் கழகங்களில் சென்ற மாணவர்களிடையேயும் பிரதேச வாதம்,பாடசாலைப் பாகுபாடு என்பன தாராளமாகவே உள்ளது.புதிதாக வரும் கனிஸ்ட மாணவர்களை ராகிங் செய்யும் போது, மாணவத் தலைவர் தெரிவின் போது பக்கச் சார்பான ,பல சில்லறை அரசியல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.சில பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள் ஒன்றாக, ஒற்றுமையாகத் திரிந்தால் வேறு விதமாக அர்த்தம் கற்பிக்கப் படுகின்றது.அவர்கள் எவ்வாறு இருந்தாலென்ன, நாம் வந்த வேலையைப் பார்ப்போம் என்றில்லை.இருக்கிற மிச்ச சொச்சமும் ஒற்றுமையில்லாமல் குழிபறிப்புக்களும்,முதுகில் குத்தல்களும் தொடரவேசெய்கின்றன.படிக்க வந்த நோக்கம் மறந்து,கல்வியின் குறிக்கோள் துறந்து,நெறி பிறழ்ந்து,வஞ்சனைத் திட்டங்கள் தீட்டவே வகுப்பறைகள் பயன்படுகின்றன.வருடங்களூம் அதிலேயே உருள்கின்றன.பாஸ் அவுட் பண்ணினவர்களுடன் கூடக் கொன்சல்ற் பண்ணி பக்காப் பிளான்கள் படைக்கப் படுகின்றன.



சில பிரதேசத்து மாணவர்களது சில திறமைகள்,சில பண்புகள்,சில பெரும்பான்மையான இயலவாளிகளினால் பரிகாசிக்கப் பட்டு,மழுங்கடிக்கப்படுகின்றன.ஓரங்கட்டப் படுகின்றன.ஒளித்து மறைக்கப் படுகின்றன. இப்படிச் சின்ன சின்ன விடயங்களில் கூட இவ்வளவு பட்டும் நாம் திருந்தாமலிருக்கிறோம் என்பதாலோ எங்களுக்கு இன்னமும் விடுதலை கிடக்கவில்லை என்று கூட எண்ணத் தோன்றுகின்றது.



ஈழத்துக் காந்தியான தந்தை செல்வநாயகத்திடம் ஒரு முறை ஒரு செய்தியாளர் "இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள வடக்குக் கிழக்குக்கு தீர்வு கிடைத்தால் நீங்கள் சார்ந்த கிறீஸ்தவர்கள் அதிலே சமமாக மதிக்கப் படுவார்களா ?" என்று கேட்ட கேள்விக்கு "சுதந்திரம் கிடைக்கட்டும் பார்ப்போம்" என்றொரு மழுப்பல் பதிலைக் கூறித் தப்பி விட்டார் தந்தை.உண்மையில் சுதந்திரம் கிடைத்திருந்தால் கூட நாங்களே "நான் பெரியவன் ..நீ சின்னவன்" என்று கூறி ஆள் ஆளுக்குப் இப்போது தமிழ்க்கட்சிகள் பிரிந்து நிற்தைப் போல பிரிந்து நின்று கொண்டு தீவுக் கூட்டங்களாய் தனித்தனியாய் பிரிந்து நின்றிருப்போமோ என்று கூட எண்ணத் தலைப் படுகின்றது.



வடக்கு- கிழக்கு தனித்தனி மாகாணாமாகி ,மாவட்டமாகி, பிரதேசமாகி, ஊராகி, ஊரில் உள்ள றோட்டாகி றோட்டுக்கொரு தலைவர்மார் உருவாகியிருப்பார்கள்.இன்றைய சினிமாவில் ரௌடிகள் இடங்களைப் பிரித்துக் கொண்டு இது எங்க ஏரியா உள்ள வராதே"" என்று கூறுவது போல் கூறிக் கொண்டிருந்திருப்போம்.சிலவேளைகளில் அதற்குள்ளும் எட்டப்பர்கள் புகுந்தால் றோட்டும் உடைந்து வீட்டோடு வந்து நிற்கும். எவ்வளவு பட்டாலும் நாங்கள் திருந்த மாட்டோம்.வரலாற முழுக்க எட்டப்பர்களையும் சகுனிகளையும் நிறையவே கண்ட இனம் எங்கள் இனம்.ஆண்டாண்டு காலமாக ஆண்டு வந்தது என்று கூறப்படும் எம்மினம் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு,அடிமைகள் போல் கொடுமைப் படுத்தப் படுவதற்கு நாங்களூம் ஒரு காரணம்.நாங்களூம் எங்கள் இனமும்.நினைக்கவே வெட்கமாக இருக்கின்றது.உண்மையில் எனது தலைப்பை புறக்கணிக்கப் பட்டும் புறக்கணிப்பின் வலியுணராப் பு---மக்கள் என்று மாற்றியிருந்தால் சரியாக இருக்குமோ என்று கூட நான் என்ணுகின்றேன்

Sunday, March 28, 2010

மாஸ்ரற்றை பிரம்பு

துள்ளித் திரிந்த பள்ளிப்பருவங்களில் நாம் செய்த கள்ளத்தனங்கள், மொள்ளமாரித்தனங்களுக்கெல்லாம் பள்ளி ஆசான்கள் நம்மையெல்லாம் நுள்ளி எடுத்திருந்திருப்பார்கள் என்பது வெள்ளிடைமலை.அனைவரும் அந்த வயதைக் கடந்து வந்தவர்கள் தான்.அந்த வயதில் எல்லோரும் குழப்படி செய்திருப்போம்.ஆசிரியர்களுக்குப் பயம் என்றாலும் ஆசிரியர்கள் அடிப்பார்க்ள் என்பதற்காக குழப்படி செய்யாமல் மாணவர்கள் விட்டதாகவும் இல்லை.ஆசிரியர்களும் தங்கள் பாட்டில் ஏதேதோ கத்தினாலும் அவர்கள் செல்லவிட்டு அவர்கள் சொன்னதற்கு எதிர்மாறாக கூத்துக்களெல்லாம் அரங்கேறியிருக்கும்.


தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்த குழப்படிகளை இப்போது நினைத்தால் சிலவேளைகளில் சிரிப்புத்தான் வரும்.அதே நேரம் வாங்கிய அடிகளும் ஞாபகம் வரும்.க.பொ.த.(சா/த) இற்கு முன்னர் நானும் பல பேரிடம் சரமாரியாக வாங்கிக் கட்டியிருந்தாலும் ஒரு சில அடிகள் செத்தாலும் மறக்காது.இப்போதும் அந்த அடிகள் வலிக்கும்.தற்போதும் அந்த அடிகள் 'பின்னுக்கு' புளிக்கும்.காலுக்கு கீழ் தழும்பு தெரிவது போல் இருக்கும்.அப்படியாக நான் வாங்கிய என் நெஞ்சம் மறக்காத அந்த அடிகளை மீட்டு உங்களுடன் பகிர்வதோடு உங்களையும் அந்த 'வசந்த காலங்களை' மீட்டிப் பார்க்கச் செய்வதே இந்தப் பகுதியின் நோக்கம்.




நாங்கள் ஒன்பதாம் ஆண்டளவில் கற்றுக் கொண்டிருந்த போது,எங்கள் உப அதிபராகக் கடமையாற்றியவரின் பட்டப்பெயர் புலிக்குட்டி.ஏன் அவர் அவ்வாறாக வழங்கப்படுகிறார் என்பதற்கு, நண்பர் கிருத்திகன் தனதொரு பதிவில் விரிவாக விளக்கம் கொடுத்திருந்தாலும் அதை வாசிக்காதவர்களுக்காக அந்த காரணத்தை இரத்தினச்சுருக்கமாகச் சொல்லிச் செல்லலாம் என்று நினைக்கின்றேன்.புலிக்கு உள்ளங்கால் கூடக் கறுப்புத் தானாம்.அந்த நிறமுடைய இவரின் தந்தையின் குட்டியாகிய இவரை புலிக்குட்டி என்றே பன்னெடுங்காலமாகப் பலரும் வழங்கி வந்தனர்.


நாங்கள் தரம் 9 இல் கற்றுக்கொண்டிருந்த போது பாடசாலைகளுக்கிடையான வன்பந்துப் போட்டி நடைபெறுவது வழக்கம்.15 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கிடையிலான ஆட்டம் ஒன்று எமது பாடசாலை மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.எதிரணிப் பாடசாலையை எனக்கு ஞாபகம் இல்லை.எமது வகுப்பு நண்பனும்,தற்போது மருத்துவபீடத்தில் கற்றுக் கொண்டிருப்பவனுமாகிய கலைமாறனும் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக அணியில் விளையாடுகின்றான்.(நண்பன் பால்குடியும் விளையாடியிருப்பார் என்று நினைக்கின்றேன்)எமது நண்பனின் துடுப்பாட்டத்தை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆவல் மிகுதி, எம்மில் கிளர்ந்தது.

எமது கல்லூரி மைதானம்,பாடசாலையிலுருந்து 70 - 80 m தூரத்தில் எமது சகோதர(ரி)ப் பாடசாலையை அண்மித்திருந்தது.ஆட்டத்தைக் காணச் செல்வதென்றால் பாட ஆசிரியரிடம் அனுமதி பெற்றுத்தான் செல்லவேண்டும் என்பது பாடசாலை விதிமுறை.ஆனால் அன்று எங்கள் 8ம் பாட ஆசிரியர் பாடசாலைக்கு சமுகம் தந்திருக்கவில்லை.அதனால் நாங்கள் அனைவரும் தன்னிச்சையாக,ஒற்றுமையாக முடிவெடுத்து மைதானத்துக்கு சென்றோம்.(எங்கள் வகுப்பு ஒற்றுமையைப் பற்றி சொல்லத் தேவையில்லை.என்னதான் எங்களுக்குள் அடிபட்டாலும்,வெளியே ஒரு அதிபரிடமோ, ஆசிரியரிடமோ அல்லது மாணவத் தலைவரினிடமோ எவனும் ஒருவனை ஒருவன் மாட்டி விட மாட்டான்.செம fit.அன்று பழகிய அந்த ஒற்றுமையினால் தான் நாம் இன்றும் நல்ல நண்பர்களாய் ஒற்றுமையாகவே இருக்கின்றோம்)


கடைசிப் பாடமென்ற படியால் பஸ்களில் பயணிக்கும் நெல்லியடி, கரவெட்டி, கரணவாய், உடுப்பிட்டி, தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை, துன்னாலை நண்பர்கள் புத்தகப் பைகளுடனேயே மைதானத்துக்குள் வந்திருந்தனர்.நாங்கள் எமது துவிச்சக்கரவண்டிகள் உள்ளே நின்ற காரணத்தினால் வெறுங்கையுடனையே சென்றிருந்தோம்.சென்று கலைமாறனின் ஆட்டத்தையும் கண்டு களித்துக் கொண்டிருந்தோம்.



இந்த நேரம் பார்த்து எங்கடை புலிக்குட்டி வன்னிப் பக்கம் போயிருக்குது(எங்களது கட்டடத் தொகுதியின் செல்லப்பெயர்- பெயரிலிருந்து அதிலுள்ளவர்கள் செய்யும் குழப்படிகளை சொல்லாமலே புரிந்துகொள்ள முடிகிறது தானே?)வகுப்பில் ஒருவரும் இல்லை.பக்கத்து வகுப்பிடம் விசாரித்திருக்கிறார்.திரும்பி அலுவலக்த்துக்கு வந்து, ஒரு 1 m நீளமும் ஒரு 1 இஞ்சி மொத்தமும் உள்ள பிரம்பொன்றையும் எடுத்துக் கொண்டு மைதானத்துக்கு வந்தார்.மைதானத்தின் பின்புறவாசலில் நின்று கொண்டு(அந்தப் பாதையால் தான் சகோதர(ரி)ப் பாடசாலையின் சகோதரிகள் பாடசாலை சென்றுவருவார்கள்)பிரம்பைக் காட்டியவாறே ஒன்றன்பின் ஒருவராக வரும்படி கர்ச்சித்தார்.


புலிக்குட்டியை சும்மா கண்டாலே பயம்.இதில தடியை வேறை ஆட்டி ஆட்டி கொண்டு வெருட்டுது.ஒருத்தனும் முன்னுக்குப் போகமாட்டேன்கிறான்.ஒருத்தனுக்குப் பின் ஒருத்தன் ஒளித்து வரிசையின் பின்பக்கம் செல்வதற்கே எல்லாரும் முண்டியடித்துக் கொண்டிருந்தாங்கள்.குட்டிக்கு இன்னும் கோபம் ஏறிட்டுது.வந்து ஒருத்தனை ஏதேச்சையாகப் பிடித்து ரோட்டிலை வைத்து ஒரு மூன்று,நாலு அடி விழுந்திருக்கும்.இப்பிடியே ஒவ்வொருத்தருக்கும் பரவலாக மூன்று, நாலு என்று விழுந்து கொண்டே வந்துது.


எனது முறையும் வந்தது.மூன்றே மூன்று அடி.சரிசமனான விசைப்பருமன்.சரியாக ஒரே இடத்தில் சரியான நேர இடைவெளியில் அவரது பிரம்பு எளிமை இசைஇயக்கம் ஆடிச் சென்றது.ஆனால் எனக்கோ சீவன் போய்வந்தது.(ஆள் தூயகணிதம், பிரயோககணிதம், பௌதீகம், இரசாயனம், தாவரவியல், விலங்கியல் என்று க.பொ.த.(உ.த)விஞ்ஞானத்திலில் எல்லாப் பரப்பையும் கரைத்துக் குடித்த மனிசன் என்றபடியால் எதைப் பாவித்து உந்த எளிமையிசை இயக்கத்தை நிகழ்த்தினாரோ என்று எனக்கு தெரியாது)அப்போது நேரம் 1.45 ஐ த் தாண்டியிருந்தபடியால் சகோதரப் பாடசாலையின் சகோதரிகள்,நண்பிகள்,எங்கள் கனவுக் கன்னிகள் எல்லாரும் எங்களைப் பார்த்து கொடுப்புக்குள்ளேயே சிரித்துக் கொண்டு சென்றார்கள்.


என்ன செய்வது வாங்கின அடிகளின் வலிகளை விடவா அந்த கொடுப்புச்சிரிப்புக்கள் வலிதானவை என்று நம்மை நாமே தேற்றிக் கொண்டோம்.இன்றைக்கும் அந்த அடிகள் எங்களை பின்னுக்குத் தடவிப் பார்க்கச் சொல்கிறது."அ..ஆ..அ ம்..ம்..மா "என்று கண்களைச் செருமிக் கொண்டே நுனிக்காலில் எழும்பி "அ..அ..ஆ.. ஐயோ சேர்.. இனி ..இப்பிடிச் செய்யமாட்டேன் " எனச் சொல்ல வைக்கிறது.இன்றல்ல கடைசிவரைக்கும் மறக்க முடியாதவை அந்த அடிகள்.தங்கள் அடி மூலம் எங்களைப் பண்படுத்திய அந்த ஆசிரியர்கள் இன்றும் எம்முன்னே வந்து போகிறார்கள்.அது தான் அந்த அடியின் வலிமை.பெருமை.திறமை.நன்றிகள் கோடி அந்த அடிகளுக்கும் அடித்துத் திருத்திய ஆசிரியர்களுக்கும்.

Sunday, March 21, 2010

சர்வதேசப் பாடசாலைகளின் சாதக பாதகங்கள்

இன்றைய காலகட்டங்களில் சர்வதேச பாடசாலைகள்(International School)களில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும், அந்தப் பாடசாலைகளின் எண்ணிக்கையும், அங்கு பிள்ளைகளைக் கற்கத்தூண்டும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றமை கண்கூடு.இந்தக் கல்வியை அவர்கள் நாடுவதன் காரணம் என்ன?அது சரியானவழிமுறைதானா?அதில் உள்ள சாதக, பாதக விடயங்களை அலசுவதே இந்தப் பதிவின் நோக்கம்.உங்கள் விமர்சனங்களை, நிச்சயமாக நான் திறந்தமனதுடன் வரவேற்கின்றேன்.



ஒருநாட்டிலே வாழும் வெளிநாட்டுப் பிரஜைகளின் பிள்ளைகளுக்கு வெளிநாட்டுப் பாடத்திட்டங்களைப் போதிப்பதற்காக இந்த சர்வதேசப் பாடசாலைகள் ஜப்பான்,சுவிற்சலாந்து,துருக்கி போன்ற நாடுகளில் 19 ம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் தோன்றின.இவ்வாறான பாடசாலைகளுக்கென்று பிரத்தியேகமான முறையில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.இலங்கையில் இருந்த வெளிநாட்டு இராஜதந்திர அலுவல்கள்,தூதரகங்களைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் கற்பதற்கென்று இலங்கையின் முதலாவது சர்வதேசப் பாடசாலை 1958 ம் ஆண்டு கொழும்பில் "ஓவெர்செஅ'ச் Cகில்ட்ரென் ஸ்சோல்" என்ற பெயரில் ஆரம்பிக்கப் பட்டது.


ஆரம்பத்தில் ஓரளவிற்கே இருந்த இப்பாடசாலைகள் 1980 இன் பின்னர் வந்த திறந்த பொருளாதாரக் கொள்கையினால் விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கின.தனியார் பாடசாலைகளுக்கும் சர்வதேசப் பாடசாலைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், தனியார் பாடசாலைகள் அரசாங்கப் பாடத்திட்டத்தைப் பின்பற்றிவரும் அதேவேளை சர்வதேசப் பாடசாலைகள் தத்தமது நாட்டுக்குரிய அல்லது பெரும்பாலும் அமெரிக்க, பிரித்தானியப் பாடத்திட்டங்களைப் பின்பற்றுகின்றன. ஆரம்ப காலங்களில் தலைநகரில் மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட சருவதேசப் பாடசாலைகள் இன்று மேல் மாகாணத்தில் 54 பாடசாலைகளாகவும்,மத்திய மாகாணத்தில் 16 ஆகவும்,வடமேல் மாகாணத்தில் 8 ஆகவும் காணப்படும் அதேவேளை வடக்கு,கிழக்குப் பிரதேசத்தில் ஒன்றாகவும் உள்ளது.




சர்வதேசப் பாடசாலைகள், 5 - 14 வயதுப் பிள்ளைகளுக்கான பாடசாலைகளை கல்வி அமைச்சின் அனுமதியின்றி அமைக்கமுடியாதென்ற இலங்கையில் உள்ள கல்விச் சட்டங்களை மீறியே 5- 14 மாணவர்களுக்காகவும் பாடசாலைகளை அமைத்துள்ளன.பெரும்பாலான பாடசாலைகள் ஆங்கில மொழியில் கற்பித்தாலும்,சில பாடசாலைகள் ரஷ்ய,பிரெஞ்சு மொழிகளிலும் கற்பிக்கின்றன. இலங்கைப் பாடசாலைகளின் நோக்கம் சிறந்த இல்ங்கைப் பிரசையையுருவாக்குதல் எனில்,பிரித்தானியப் பாடத்திட்டதுடன செயற்படும் சர்வதேசப் பாடசாலையாயின் சிறந்த பிரித்தனியப் பிரசையையுருவாக்குவதே அதனது நோக்கமாக இருக்கும்.அவ்வாறெனில் பிரித்தானிய சர்வதேசப் பாடசாலையொன்றினால் பிரித்தானிய கலாசாரங்களுடன் பிரித்தானியப் பிரசையாக உருவாக்கப்படும் ஒரு இலங்கை மாணவன் எவ்வாறு இலங்கை சமூகத்துடன் பொருதி வாழமுடியும் என்ற கேள்வி எழுவதைத் தடுக்கமுடியாது.ஏனெனில் பிரித்தானிய சர்வதேசப் பாடசாலையில் கற்கும் எல்லாரும் பிரித்தானியாவில் சென்று வாழப்போவதில்லை.அவ்வாறு சென்றாலும் அவர்கள் பிரித்தானிய சமூகத்தில் ஆங்கிலேயர்களாக ஏற்றுக் கொள்ளப் படப் போவதுமில்லை.இந்நிலையில் சர்வதேசப் பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்கள் இலங்கைப் பிரசையாகவோ அன்றி பிரித்தானியப் பிரசையாகவோ அன்றி எந்தவொரு அடையாளமுமின்றி அந்நியப்படுத்தப்படும் அபாயம் உள்ளது.




சுதந்திரத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட தாய்மொழிக் கல்விக்கொள்கை மத்திய,உயர் தரவர்க்கத்தினருக்கே கல்வி என்று இருந்த நிலையை மாற்றி,ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த சிறந்த,உயர் கல்வியை கிராமப் புறங்களுக்கும் விரிவு படுத்தப் பயன்பட்டது.தாய்மொழிக் கல்வியினால் மாணவர்களின் ஆங்கில அறிவிலே பாதிப்பு ஏற்படுவதாக வாதங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் கல்வித்துறையிலே சமூகநீதியையும் நியாயத்தையும் ஏற்படுத்த அது உதவியது என்றால் அதில் தப்பேதுமில்லை. ஆனால் இவற்றுக்கெல்லாம் ஆப்படிக்கும் வகையில் 1990 களில் ஏற்பட்ட பூகோளமயவாக்கம், இலங்கையில் அறிமுகப்படுத்தப் பட்ட தாராளமயமான பொருளாதாரக்கொள்கை, அதன் பயனாக எழுச்சியுற்ற தனியார் துறையின் அசுர வளர்ச்சி, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் ஆங்கிலமொழிக்களிக்கப்பட்ட முக்கியத்துவம், முன்னணி அரசாங்கப் பாடசாலைகளில் அனுமதி பெறுவதில் எழுந்த சிக்கல்கள், அரசாங்கப் பாடசாலைகளில் ஏற்பட்ட கல்வி, நிர்வாக சீர்கேடுகளினால் ஏற்பட்ட அரசாங்கப் பாடசாலைகளின் தராதர வீழ்ச்சி என்பன ஒருங்கு சேர்ந்து சர்வதேசப் பாடசாலைகளின் பால் மாணவர்களையும், பெற்றோர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது.



சர்வதேசப் பாடசாலைகளின் வளர்ச்சிக்கு தாராளமயமாக்கல் கொள்கையால் நன்மையடைந்த புதிய செல்வந்தவகுப்பினர் தாய்மொழிக் கல்வியைப் புறக்கணித்து,ஆங்கில கல்வியை நாடமுயன்றதும் அவர்களைப் பார்த்து சாதாரண மக்கள் வாயைப் பிளக்கத் தொடங்கியதுவும் காரணமாய் அமைந்தது.அதுமட்டுமலாது தாராளமயமாக்கலால் அதிகரித்த தனியார் மூலதனமும்,அந்நியச் செலாவாணிகளின் உள்வருகையும் வர்த்தகம்,கைத்தொழில்,சுகாதாரம் போன்ற துறைகளிலும் கால்பதித்திருந்த தனியாரை கல்வித்துறையிலும் முதலிடத் தூண்டியது.இதனாலும் சர்வதேசப் பாடசாலைகளின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு தோன்றியது.




சர்வதேசப் பாடசாலைகளில் செல்வந்தவகுப்பினர் ஆங்கிலத்தில் கற்பதால் அவர்களுக்கு தனியார் வேலைவாய்ப்புக்கள் அதிகளவில் கிடைக்க ஏதுவாயமைகின்றது.சர்வதேசப் பாடசாலைகளில் வசூலிக்கப்படும் உயர்ந்த கட்டணத்தையும் பெற்றோர் செலுத்தத் தயாராயிருப்பது அவர்களுக்கு தங்கள் பிள்ளைகளை ஆங்கிலத்தில் கற்பிக்க வேண்டும் என்பதில் அவர்கள் எவ்வளவு அவாவோடு உள்ளனர் என்பதையும் இந்தப் பாடசாலைகளில் கற்பது கௌரவமானது என்ற அவர்களின் சிந்தனையோட்டத்தையும் காட்டிநிற்கின்றது.அத்தோடு பிரபல அரசாங்கப் பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க முயன்று தோற்றுப் போன சம்பவங்களும் அதனால் ஏற்பட்ட மனத் தாக்கங்கள்,"கௌரவக் குறைச்சல்கள்" போன்றனவற்றோடு சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் கற்பதற்கு இவை ஒர் ஆரம்பமாக இவை அமையும் என்ற கருத்தோட்டமும் அமைகின்றது.


தாய்மொழியில் கிடைக்காத அரிய நூல்கள், சஞ்சிகைகள், கற்றல் சாதனங்கள் ஆங்கிலமொழிக் கல்வியில் கிடைக்கின்றன என்ற அவர்களின் வாதமும் மறுதலிக்கப் படமுடியாத ஒன்று.35 சதவீதமான வேலைவாய்ப்புக்கள் ஆங்கில மொழியில் செயற்படும் தனியார்துறையாரிடம் உள்ளதால் ஆங்கில மொழிக்கல்வியில் இயல்பாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு ஈர்ப்பு ஏற்படுகின்றமை தவிர்க்கமுடியாததாகிறது.அதற்காக இலங்கையில் உள்ள 40 இலட்சம் மாணவர்களுக்கும் ஆங்கிலமொழிக் கல்வியை வழங்கினால் அவர்கள் அனைவருக்கும் தனியார்துறை வேலைவாய்ப்பை வழங்குமா என்று குண்டக்க மண்டக்க கேள்வியெல்லாம் கேட்கப் படாது. பூகோளமாக்கப்பட்ட உலகில் ஆங்கிலமே விஞ்ஞான மொழி, இராஜதந்திரமொழி, வர்த்தக மொழி, சர்வதேசத் தொடர்பாடல் மொழி, அறிவு உலகின் எல்லாப் பகுதிகளுக்கும் ஆங்கில மொழியிலேயே வழங்கப்படுகின்றது.ஆக்வே எதிலும் தவிர்க்கமுடியாத ஆங்கிலத்தைக் கற்கவேண்டியதுவும் அதை பெறுவதற்கு சிறந்த வழியாக சர்வதேசப் பாடசாலைகளைக் கருதியதுவும் ஒரு காரணமாக அமைகின்றது.



அத்தோடு இலங்கைப் பல்கலைக் கழகங்களிலும் காலம் தாழ்த்தியே மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்ற்மை, பட்டம் பெறும் போது 25- 26 வயதைத் தொட்டுவிடுகின்றமை, கஸ்ரப்பட்டு அனுமதி பெற்றாலும் சிரேஷ்ட மாணவர்களின் "வதை" எனப் பல பிரச்சினைகள் உள்ளமையினால்,இவற்றைத் தவிர்ப்பதற்குமாய்ப் பலர் சர்வதேசப் படசாலைகளின் இலண்டன் க.பொ.த.(சா/த) மற்றும் (உ/த) போன்றவற்றைக் கற்கின்றனர். மேலே உள்ள பல காரணங்களுக்காக அவர்கள் சர்வதேசப் பாடசாலைகளைத் தெரிவு செய்தாலும் அதிலே உள்ள சமூக ரீதியான பாதகங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஓவர் சீரியஸ் பதிவாய்ப் போச்சுதோ எண்டு இப்பத் தான் யோசிக்கிறன்

Sunday, March 7, 2010

எங்கன்ரை ஊருக்கு கறண்ட் வந்த கதை

இதென்னடா இது அவனவன் சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் ரொக்கட் அனுப்பிற காலத்திலை வந்து நிண்டு கொண்டு கறண்டைக் கண்டு பிடிச்சாலும் பரவாயில்லை, கறண்ட் ஊருக்கை வந்ததையே ஒரு கதையெண்டு கதைக்க வந்திட்டானென்று நினைக்காதையுங்கோ.நாங்களாவது பரவாயில்லை உதையெண்டாலும் கதைக்கிறம்.இண்டைக்கும் கறண்டைக் காணாமல் குப்பி விளக்கிலை படிச்சுக் கொண்டிருக்கிற எங்கடை தம்பி,தங்கச்சிமார் எத்தினை பேர் இருக்கிறார்கள்.கறண்ட் வேண்டாம்.ஆண்டாண்டு காலமாய் ஆண்டு ஆண்டு வந்த எங்கன்றை சந்ததை அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தி,கஞ்சிக்கும் காத்திருக்கிற நிலைமைக்கு மாற்றிவிட்டார்கள்.அந்த தம்பியோ,தங்கச்சியோ நாளைக்கு இதைவிடப் புதுமியாய் கதை சொல்லும் போது நாங்களும் கேட்டு நிற்போம்.



எண்பதுகளில் இனப்பிரச்சினை முனைப்புப் பெறமுன்னர்,எமது ஊர்களிலெல்லாம் இலக்சபானாவில் இருந்து இருபத்து மணித்தியாலக் கறண்ட் இருந்ததாம்.எங்கள் தோட்டங்களுக்கெல்லாம் இரவிலே லைற்(light) வெளிச்சதிலை மோட்டர் பூட்டித் தான் தண்ணி மாறுகின்றனாங்கள் என்று எங்களின் மாமாமார்,ஊரின் அண்ணாமார் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறோம்.அதன்பிறகு இனப்பிரச்சினை முனைப்புப் பெற்றதன் பின்னர் கற்ண்ட் எங்களெல்லாருக்கும் 'கட்' பண்ணப்பட்டது.



அதனால் வீதிகளில் சும்மா நின்ற ரயின் தண்டவாளத்தைப் போன்ற இரும்பாலான கறண்ட் கம்பங்களை எல்லாரும் ஆளுக்காள் பிரட்டி,தேவையான அளவுகளில் வெட்டி வேலிகளூக்கு பொறுப்பான தூணாகவும்,ஆடு மாடு கட்ட கம்பியாகவும் என்று பல வேறு வழிகளில் பயன்படுத்தினார்கள்.வேலியின் மேலும் கீழும் கறண்ட் கம்பியை இழுத்துக்கட்டிய பின் மூரியை(பனம் மட்டை)அதிலே வரிந்தார்கள்.


கறண்ட் போஸ்ற்(post) இலிருந்த கப்பியைக் கழட்டி கிணத்திலே தண்ணி அள்ளப் பாவித்தார்கள்.ஏற்க்னவே கிணத்திலே கப்பி இருந்தவர்களூம்,துலா வைத்திருந்தவர்கள் கூட ஏன் ஓசியிலை கிடக்கிறதை சும்மா ஆரும் அள்ளிக் கொண்டு போகவிடுவானெனென்று மிஞ்சின கொஞ்ச நஞ்ச கப்பிகளையும் கொண்டு போய் வெங்காயக் கொட்டிலின் மூலைக் கைமரங்களிலே பவுத்திரமாகத் தூக்கி வைத்தார்கள்.இப்பிடி கறண்ட் ச்ப்ளை(supply) நிண்ட கையோடையே எங்கடை சனம் ஊரில நேற்று வரை கறண்ட் இருந்ததெண்டதுக்கு ஒரு சாட்சியமும் விடாமல் வழிச்சுத் துடைச்சு எல்லாத்தையும் கலட்டி,புடுங்கி எடுத்துக் கொண்டுத்துகள்.




நாங்களெல்லாம் பிறந்து 13, 14 வருசமாக கறண்டைக் கண்ணாலை கண்டது கூட இல்லை.கறண்ட் எப்பிடியிருக்கும், என்ன செய்யும் எண்டு கூடத் தெரியாத நாங்கள் கறண்டுடன் கற்பனையில் விளையாடினோம்.எங்கண்ரை வீட்டின் வெளி விறாந்தையோடிருந்த சுவிட்சை மேசைக்கு மேலை ஏறி மேல்நோக்கியோ, கீழ் நோக்கியோ போடுறது சரியென்று கூடத் தெரியாமல் ஏதாவது ஒரு பக்கம் தட்டிப் போட்டு "ஆ .... கறண்ட் .. வந்திட்டுதாம்..." எண்டு ஊரிலை எங்களைமாதிரி இருந்த எங்கடை வயசையொத்த குஞ்சு குருமனெல்லாம் விளையாடுவோம்.



வீட்டை கனகாலம் கறண்ட் இல்லாமல் இருந்ததால் பாவிக்காமல் பழுதாய்ப் போன ஒரு ரேடியோவும் இந்தியன் ஆமி தூக்கி எறிந்ததால உடைந்து போயிருந்த ஒரு பெரிய "பொக்ஸ்" ரேடியோவையும் தூக்கி வைத்துக் கொண்டு,எங்கன்றை தலைகளை ரேடியோக்களுக்குப் பின்னால் ஒளித்துக் கொண்டு, நாங்களே பாட்டுப் படிச்சு,நாங்களே மகிழவேண்டிய சூழல் எங்களுக்கு.table fan ஐ எடுத்து அதன் முன் கவரைக் கழட்டி விட்டு நாங்களே கையாலை சுத்தி காத்து வாங்கி விளையாடினோம்.


சீலிங் fan இன் தகடுகள் எங்கள் தோட்டங்களின் வாய்க்கால்கள் உடைப்பெடுக்காமல் இருக்க மடைக்கு அணையாக வைக்கப் பயன்பட்டுது. இப்பிடி ஊரிலுள்ள அனைவரினதும் முந்திப் பாவித்த மின்சார சாதனங்கள் எல்லாம் அவற்றின் சம்சாரமான மின்சாரமில்லாமல் போனதால் தூக்கியெறியவேணடிய நிலைக்குப் பழுதாகிப் போயிருந்தாலும் எல்லாரும் கறண்ட் வந்தால் போட்டுப் பார்த்துட்ட்டுச் செய்வம் எண்டிட்டு வைச்சிருந்தார்கள்.இப்பிடியிருந்த எங்கடை ஊருக்கு கறண்ட் வந்தால் எப்ப்டியிருக்கும்.



யாழ்ப்பாணம் இராணுவத்திடம் வீழ்ந்து 1,2 வருடங்களின் பின்னர் எல்லா இடங்களூக்கெல்லாம் கறண்ட் வழங்கும் வேலைகள் முடுக்கி விடப்பட்டன.அந்த வேலைகள் தொடங்கப்பட்டு 1, 1 1/2 வருடங்களின் பின்னர் திடீரென்று ஒருநாள் இலங்கை மின்சார சபையின் கன்ரரிலே கொங்கீரீற்றாலை அரியப்பட்ட லைற் போஸ்ற்களை கொண்டு வந்து கிறேனாலை இறக்கினார்கள்.ஊரிலை உள்ள எல்லாருக்கும் மின்சாரம் பாய்ஞ்சது போல இருந்தது.



கொண்டு வந்து இறக்கிய மின்சார சபையின் ஊழியர்கள் எல்லாருக்கும் நல்ல மரியாதை.அவர்களுக்கு தேத்தண்ணீ, வடை,விசுக்கோத்து,கல்பணிஸ்,வாழைப்பழம் எண்டு எல்லாம் கொடுத்து உபசரித்தார்கள் ஊரவர்கள்.கவனிப்போ கவனிப்பு அப்படியொரு கவனிப்பு.அவர்கள் அவர்கள் வாழ்க்கையில் அதற்கு முன்னர் அப்படியொரு கவனிப்பை கண்டிருக்க மாட்டடார்கள்.சரி போஸ்றைப் போட்டு விட்டுப் போய்விட்டார்கள். போஸ்ற்றுகள் போட்ட போட்ட படியே போட்ட போட்ட இடத்திலே போட்ட போட்ட படியே மாதக்க் கணக்கிலே இழுபட்டன.



பிறகொருநாள் கொஞ்சப் பேர் வந்து போஸ்ற்றுகளை நடுவதற்கு கிடங்கு கிண்டினார்கள்.மீண்டும் பிரமாதமான் உபசரிப்பு அவர்களூக்கு.மறுபடியும் போய் விட்டார்கள்.மழை வந்து வெள்ளத்தால் நிரவுப் பட்டன கிடங்குகளெல்லாம்.மீண்டும் இடைவெளி.மீண்டும் காலம் கடந்து வந்து அந்தப் போஸ்ற்றுகளை நட்டு விட்டுவிட்டுப் போனார்கள்.நாட்கள் உருண்டன.


கறண்ட் கம்பியிழுக்க காலம் கனியவில்லையெண்டு எங்கள் காத்திருப்பை நீட்டி மேலும் பார்த்திருக்கச் செய்தார்கள்.ஒரு மாதிரி கறண்ட் கம்பி இழுக்கப் பட்டாலும் பிரதான வீதியிளுள்ளவர்களுக்கே முதலில் இணைப்பு வழங்கப்பட்டதால் துணை வீதியொன்றிலிருந்த எங்களுக்கு கைக்கெட்டிய கறண்ட் வாய்க்கெட்டாமல் போனது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.


இந்தக் கறண்ட் கூட ஒன்றும் இருபத்துமணித்தியாலமும் தொடர்ச்சியாக வருகின்ற கறண்ட் இல்லை.எங்களூருக்கும் எங்கள் அயலூர்கள் சில்வற்றுக்கும் சேர்த்து ஒரு ஜெனெரேற்றரை எங்களூரிலே பொருத்தி அதிலிருந்து எல்லா ஊர்களுக்கும் மின்சாரத்தை ஒன்றைவிட்ட ஒரு நாள் இரவு ஆறு மணியிலிருந்து பத்து மணி வரையும் காலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரையும் ஏதோ கறண்ட் என்ற பெயரில் காண்பித்தார்கள்.


பிரதான வீதியோடிருந்த சிவா அண்ணை என்பவரின் வீட்டிலிருந்து அவரின் வீட்டில் உள்ள ஒரு கோல்டரில்(holder) ஒரு அடப்ரரைக்(adapator) கொளுவி அதன் மற்ற முனையில் இன்னுமொரு அடப்ரரைக் கொளுவி எங்கள் வீட்டுக் ஹோல்டரிலே கொண்டு வந்து சொருகினோம்.எங்கள் வீட்டிலே லைற் எரிந்த அந்த அருமையான நேரம் இன்றும் என் கண் முன்னே நிற்கின்றது. நாங்க்ள் போட்ட கூச்சல்களூம்,துள்ளல்களூம் கும்மாளங்களும் பக்கத்து வீட்டுக் காரர்களுக்கெல்லாம் சொல்லாமலே காட்டிக் கொடுத்தது எங்கள் வீட்டிலே கறண்ட் வந்த சேதியை.


அடுத்த நாள் பள்ளிக் கூடத்திலும் ரியூசனிலும் காணூமிடமெங்கும் நண்பர்களிடமெல்லாரிடமும் எங்களுக்கு கறண்ட் வந்த சேதியை சொல்லி மகிழ்ந்ததையெ்ல்லாம் நினைக்க இன்று சிரிப்பாக இருக்கினறது.பின்னர் சிறிது காலத்தின் பின்னர் எங்களுக்கும் நேரடி இணைப்புக் கிடைத்தது.இணைப்புப் பெறாமல் பலர் சட்டவிரோதமாக கறண்ட் கம்பியிலேயே ஒரு கொக்கைத்தடியாலை பக்குவமாகக் வயரைக் கொழுவி direct ஆக கறண்ட் எடுக்கத் தொடங்கினதாலை இரவிலையெல்லாம பல்ப்(bulb) இன் இழை தணல் மாதிரி சிவப்பாத் தான் எரியும்.ஆகக் கூடின பவர் அதுக்கு அவ்வளவு தான்.வெளிச்சமே இருக்காது.ஏனாடா இதுக்கு கறண்டை தருவதை விட தராமலே இருந்திருக்கலாமே ஏன்று கூட யோசிக்கத் தோன்றும்.



ஒன்று இரண்டு வருடங்களின் பின்னர் 24 மணித்தியாலக் க்றண்டும் வந்தது.24 மணித்தியாலக் கறண்ட் வந்த செய்தி கேட்டு ரியூசனாலே சைக்கிளில் கூவிச் சென்று சுவிட்சைப் போட்டுப் பார்த்ததெல்லாம் பசுமரத்தாணி மாதிரி மனசிலை பதிஞ்சிருக்குது.ஆனாலும் இன்றுவரைக்கும் 24 மணித்தியாலம் என்று சொன்னாலும் கூட இரவிலே மின்னி மின்னி எரியும் அல்லது இரவிலே 'கட்' ப்ண்ணுப்படும்.


ஆனால் ஐஞ்சு நிமிசம் கறண்ட் போனாலே அஸ்ஸு, புஸ்ஸூ, ஐயோ என்று என்று a/c க்காகவும் serial பாக்கிற பொம்பிளையள் கத்திறதியும் பார்க்கேக்கை அவையெளெல்லாரையும் எங்கடை சன பட்ட, படுகிற கஸ்ரங்களையெல்லாம் கொண்டு போய்க் காட்ட வேணும் மாதிரிக் கிடக்குது.எங்கன்ரை எல்லாச்சனமும் எப்பதான் கறண்ட் மாதிரி எல்லா வசதியும் கிடைச்சு சுயமா சுதந்திரமா நிம்மதியா வாழுறது எண்டு தெரியாமல் கிடக்குது

Friday, February 12, 2010

தலைநகரின் கண்டறியாத கலியாண வீடுகள்

காதலர் தின சிறப்புப் பதிவாக காதலுக்கு அடுத்த நிலையான திருமணம் அல்லது கலியாணம் என்பது, இன்றைய அவசரமான,காசு கொட்டிக்கிடக்கும் உலகில் எவ்வாறு செய்யப்படுகின்றது அல்லது அது செய்யப்படுவதன் உண்மையான நோக்கத்தை அடைகின்றதா என்பது பற்றி அலசுவதே இந்தப் பதிவு.

எமது கலாசாரத்துக்குள்ளாக அமையின் பொதுவாகவே வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை தான் கிடைக்கப் போகும் ஆயிரம் காலத்துப் பயிரான திருமணங்களை,இன்றைய காலகட்டங்களில், தற்போதைய முறைகளில் செய்வதால்,திருமணச் சடங்குகளில் கிடைக்கவேண்டிய அந்த சின்னச்சின்ன சந்தோசங்கள் எங்களுக்குக் கிடக்கின்றனவா என்றால் இல்லை என்பதே பொதுவான கருத்து.ஊர்களில் சுற்றம்,முற்றம் மற்றும் ஊரவர் என எல்லா உறவுகளின் பங்குபற்றுதலுடன் குறைந்த செலவில் செய்யப்படும் திருமணங்களில் கிடைக்கும் சின்னசின்ன சந்தோசங்கள் தலைநகரில் காசைக் கொட்டிக் கொடுத்தும் கிடைப்பதில்லை என்ற ஆதங்கம் பலரிடம் உள்ளது.



ஊர்களிலெல்லாம் கலியாண வீடென்றால் பொன்னுருக்கலுக்கு(மணமகளின் தாலி செய்வதற்குரிய தங்கத்தை மணமகன் வீட்டில் உருக்கும் சம்பிரதாய சடங்கு)ஒன்று, இரண்டு நாட்களுக்கு முதல் தொடங்கி,கலியாணவீடு முடிந்து இரண்டு,மூன்று நாள் வரைக்கும் அந்த வீடும், ஊரும் திருவிழாக் கோலத்துடன் தான் காட்சியளிக்கும்.திருமணத்திற்கு இரண்டு,மூன்று வாரங்களுக்கு முதலேயே வீட்டை துப்பரவாக்கி,வர்ணம்(paint) தீட்டி மிகவும் அழகாக வைத்திருப்பார்கள்.


ஊர்ப் பெண்களெல்லாம் 2, 3 நாளுக்கு முதலிருந்தே பின்னேரப் பொழுதுகளில் அந்த திருமண வீடுகளுக்குச் சென்று தட்டை வடை, பயற்றம் பணியாரம், சீனி அரிதாரம், சிப்பி, சோகி, சில்லறைப் பலகாரம் உட்பட பலவேறு பலகாரங்களையும், இனிப்புக்கள், சிற்றுண்டிகளையும் செய்யத்தொடங்கிவிடுவார்கள்.பெடியளும் அப்பப்ப போய் உதவிகள் செய்தாலும் திருமணத்திற்கு முதல்நாள் செய்யும் சோடனை(டெcஒரடிஒன்) வேலைகளுக்குத் தான் பிரதானமாக செல்வாங்கள்.

ஊரில் உள்ள 30,40 பெடியளும் சிறுசிறு குழுவாகப் பிரிந்து ஒவ்வொரு சோடனை வேலைகளிலும் ஈடுபட்டுக் கொள்ளுவார்கள்.ஒரு படை மஞ்சள்,வெள்ளை நிறத் தாள்களை(டிச்சுஎ)எட்டாக,பதினாறாக மடித்து அதனை,நூலொன்றைப் பாவித்து வெட்டிக் கொண்டிருக்கும்.மறுபடையோ நூலொன்றினில் கோதுமை மாவினுள் நீரைவிட்டுக் காய்ச்சிய பசையொன்றினைப் பூசிக்கொண்டிருக்கும்.பிறிதொரு படை எட்டாக, பதினாறாக மடிக்கப்பட்டு, வெட்டப்பட்ட ரிஷுவை ஒவ்வொன்றாக கலைத்துக் கொடுத்துக் கொண்டிருக்க,இன்னும் சில அவற்றை பசை பூசப்பட்ட நூலினில் ஒட்டிக் கொண்டிருக்கும்.வேறு சிலர் வீட்டுக்குள் மணமக்களின் பெயர்களையும், நல்வரவு, திருமண வாழ்த்து, இரண்டு இணைக்கப்பட இதயங்களினைத் துளைத்துச் செல்லும் அம்பினை ஒத்த காதலின் சின்னத்தையும் ரெஜிபோமில் வேலைப்பாடுகளுடன் வெட்டி ஒட்டிக்கொண்டிருப்பார்கள்.



மற்றும் சிலர் திருமண வீட்டு வாசலில் கட்டுவதற்கு, வீட்டுக்கு பின்னாலிருக்கும் வளவினில் வளர்ந்து நிற்கும் வாழைகளிரண்டை வெட்டிக் கொண்டுவந்து, வீட்டு வாசலிலுள்ள தூணோடு சேர்த்துக் கட்டிக்கொண்டிருப்பார்கள்.பெரும்பாலும் குழை போட்டுப் பழுத்த வாழையையே கட்டினாலும் சிலவேளைகளில் அது கிடைக்காதவிடத்து சந்தையிலிருந்து வாங்கிக் கொண்டுவந்த,நன்கு மஞ்சள் நிறத்தில் பழுத்த வாழைக்குலையைத் தூக்கி,கட்டப்பட்ட அந்த வாழைதான் இந்தக்குலையைப் போட்டது போல இருக்குமாறு மிகச்சாமர்த்தியமாகக் கட்டி வாழைக்குலையை வாழை தாங்குவதற்காக, வாழையில் ஒரு பூவரசங் கட்டையை இணக்கிச்(செய்து)சொருகி அதில் வாழைக்குலையைத் தாங்கவிடுவார்கள்.மேலும் அழகை மெருகூட்டுவதற்காக தாங்கள் இளநீரைக்குடித்த பின்னர் வெறும் இளநீர்க் கோம்பைகளை வாழைக்குலையின் அடியிலே சொருகி விடுவார்கள்.

ஒட்டப்பட்ட ரிஷு காய்ந்த பின்னர் அதை ஏதாவது மரங்கள்,மின்கம்பங்களிடையே கட்டப்பட்ட கயிற்றுக்குக் குறுக்காக இரண்டு கயிறுகளையும் இணைக்கும் விதமாக கட்டுவார்கள்.திருமணத்திற்கென்று செய்த பலகாரங்களும் தேத்தண்ணியும் வேலைநடந்து கொண்டிருக்கும்போது பெடியளுக்குப் படைக்கப்படும்.பெடியளெல்லாருக்கும் இரவுச் சாப்பாடும் அங்கே தான்.சிலர் அதிகாலையில் வந்து பெண்களுக்கு சமையலின் போது சோற்று அண்டா,கறிக் கடாரம் என்பவற்றை இறக்கி ஏற்றுவதற்கு உதவி செய்வார்கள்.மற்ற எல்லாப் பெடியளும் திருமணநேரத்திற்கு முன்னரே வேட்டி கட்டி,பவுடர் போட்டு,தலையை மேவி இழுத்து என்று அப்பிடி இப்பிடியாக ஒருமாதிரி வெளிக்கிட்ட்டுப் போய் உதவி ஒத்தாசையாக இருப்பாங்கள்.

எப்ப தாலியைக் கட்டுவாங்கள்,எப்ப தாங்கள் ஒரு வெட்டு வெட்டலாம்(சாப்பிடுதல்) என்று வாறதுகள் தாலியைக் கட்டியவுடனேயே பந்தியில் சென்று குந்தியவுடன் ஒருவன் வாழையிலை வைக்க, மற்றவன் சோற்றைப் போட, கொஞ்சப்பேர் ஒவ்வொரு கறியாக வைக்க, பிறிதொருவன் அப்பளம், மிளகாய் வைக்க மேலுமொருவன் வடை பரிமாற, இன்னுமொருவன் தண்ணீரை டம்ளரில்(தண்ணீர் குவளை)ஊற்ற என்று எவரதும் நேரடி வழிகாட்டுதலின்றி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை மிகச் சுறுசுறுப்பாகச் செய்வாங்கள்."ஆ.. இஞ்சை ஐயாவுக்கு சோறு முடிஞ்சுது.. சோத்தை வை.. சோறு வைச்சாக்களைப் பாத்து கறியளை வை.." என்று காலில் சக்கரம் பூட்டியது மாதிரி ஓடித் திரிவாங்கள்.இரண்டு, மூன்று முறை சோத்தை போட்டுக் குழைச்சடிச்சு, அதற்குப் பிறகு பாயசத்தையும் விட்டு வைக்காமல் அதையும் விட்டு வழிச்சுத்துடைச்சு விட்டுச் சென்றவர்களின் வாழையிலைகளையெல்லாம் அள்ளி பந்தி நடந்த மண்டபத்தைக் கூட்டுவதோடு ஆம்பிளைப் பந்தி(ஆண்களின் சாப்பாட்டு வரிசை) முடிய அடுத்ததாக பொம்பிளைப் பந்தி ஆரம்பமாகும்.

தங்களுக்கு வேண்டப்பட்ட பெண்தோழிகளுக்கும்,"இது தேவையோ?", "அது தேவையோ?" என்று வழிந்து,வழிந்து கேட்டு,அவர்கள் ஒன்றும் கேட்காத போதும் தாங்களே 2,3 வடைகளைத்தூக்கி வாழையிலையில் சத்தம்போடாமல் வைத்துவிட்டு,அவர்கள் அந்த வடைகளைச் சாப்பிடுகிறார்களா அல்லது அவர்கள் அந்த வடைகளைச் சாப்பிடாமல் வாழையிலையோடு கொண்டு போய் எறிகின்றார்களா என்று எறியும்வரை பார்த்துக் கொண்டிருக்கும் தாராள மனப்பாங்குள்ளவர்களும் இருப்பார்கள்.இதன் பின்னர் படமெடுப்புக்கள்,பின்னேர திருமணப்பதிவு(Registration) என மிகுதி நிகழ்ச்சிகளும் களை கட்டும்.


இவ்வாறெல்லாம் எத்தனை சின்னச் சின்ன சந்தோசங்கள் எத்தனை இலட்சத்தைக் கொழும்பிலே கொட்டி,ஹோலிலே கலியாணத்தை முடித்தாலும் துளி மருந்துக்கும் கிடப்பதில்லை.இரவிலே ஒரு மண்டபத்திலே திருமணம் நடைபெறும்.அவனவன் தாலிகட்டி முடிந்த பின்னர் சரியாக சாப்பாட்டுக்கு ஐந்து நிமிஷத்துக்கு முதல் காரிலோ ஏதாவது வாகனத்திலோ வருவான்.Busy(வேளைப் பளு)ஆன ஆள் மாதிரி ஒரு இடத்திலும் இருக்காமல் அங்கையும் இங்கையும் ஓடித்திரிந்து 2,3 பேருடன் கதைப்பான்.தானே போட்டுச்(self Service) சாப்பிடுவான்.தம்பதியினருக்கு பரிசுப்பொருள்(Gift) கொடுப்பான்.சேர்ந்து நின்று படம் எடுப்பான்.மாப்பிளையிடம் சொல்லுவான்,"மச்சான் அவசரமாக ஒரு வேலை இருக்கு..நான் வாறன்.." என்று சொல்லிவிட்டு ஒரு 30,40 நிமிடத்தில் பறந்துவிடுவான்.இத்தனைக்கும் ஒரு தலைக்கு சாப்பாடுக்கு,இத்தனை ஆயிரம் என்று சொல்லி ஒரு 400,500 பேருக்கு என்று காசைக் கொட்டிக் கொடுக்கிறார்கள்.சாப்பாட்டுக்கு, மண்டபத்துக்கு, மணமகள்,மணமகன் அலங்காரம், மற்றும் இன்ன பிற செலவுகள் என்று காசை வாரிக் கொடுத்தும் அதற்குரிய பலாபலன் கிடைக்காமலையே திருமணங்கள் முடிவது உண்மையில் வேதனைக்குரியதே.

Thursday, February 4, 2010

மோதகமும் பல்லுக் கொழுக்கட்டையும்

(கலப்படமேயில்லாத கற்பனைக் கதையான இதிலே வரும் பெயர்களையோ, ஊர்களையோ அல்லது வேறு சம்பவங்களையோ உங்கள் மூளையை ஆட்டிக் கீட்டி,கசக்கிப் பிழிந்து யோசித்து, வேறு நபர்களுடனோ, இடங்களுடனோ அல்லது சம்பவங்களுடனோ சம்பந்தப்படுத்தி யோசித்தால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல)


இலந்தையூர் என்ற பெயருக்கேற்றாற் போல அந்த ஊரிலே, கணிசமானவளவு இலந்தை மரங்கள் பூத்துக்குலுங்கி, காய்த்து, சிறுவர்களிடம் கல்லெறியும் வாங்கிக் கொண்டிருக்கின்றன.வானம்பார்த்த பூமியான அந்த ஊரிலே கோடைகாலத்து கொதிக்கும் வெயிலின்,தகிக்கும் தணலைத் தாங்கித், தண்மையைத் தம்மூர் மக்களுக்காக வழங்கும் தியாகச் செம்மல்களாக ஊரின் நடுவேயுள்ள ஆலமரமும் வேறு சில பெருமரங்களும்.ஊரை தொழில்ரீதியாக எடுத்துப்பார்த்தால் பெரும் போகம் ,சிறுபோகம் என இரு போகங்களிலும் நெல்பயிரிடும் பெரும்பான்மை விவசாயிகளும், வியாபாரம் செய்யும் சிலரும்,உத்தியோகம் பார்க்கும் மிகுதியினருமாக அடங்கி விடுவார்கள்.


இயற்கையாலும், அரசாங்கங்களாலும், அரச உயரதிகாரிகளாலும், நிறுவனங்களாலும் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் அவ்வளவாகப் பூர்த்தி செய்யப்படாவிடாலும் அவர்கள் வாழ்க்கையும் ஏதோ ஓடுகிறது அல்லது ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது ஓட்டத் தம்மைப் பழக்கிக் கொண்டுவிட்டார்கள்.


என்னதான் இல்லாத போதும் எமது சமுதாயத்தில் வேரோடிச், சமூகத்தை செல்லரித்துக் கொண்டிருக்கும் சாதிப் பிரச்சினை மட்டும் இங்கும் இருக்கின்றது. உடையார், படையார், சடையார் என்று மூன்று சாதியினர் ஊரில் உள்ளனர்.இதில் பெரும்பான்மையாக உடையார் ஊரின் சனத்தொகையின் 70 - 75 % ஆக உள்ளனர். மிகுதியினரை எடுத்தால் படையார் 15 - 20 % உம் சடையார் அண்ணளவாக 10% உம் உள்ளனர்.படையார் ஊரின் வடக்கு மற்றும் கிழக்கின் கணிசமான இடங்களிலும், இலந்தையூரின் மத்தி மற்றும் மேற்குப் பகுதிகளிலும் செறிந்து வாழ,சடையார் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளிலும் வசிக்கின்றனர்.அந்தந்தப் பகுதிகளில் அவரவர் சாதிகளுக்குப் பிரத்தியேகமான சில தெய்வங்களின் கோவில்களும் உள்ளன. ஏனைய முழு இடங்களிலும் உடையார் தான் செறிந்து வாழ்(ஆள்)கின்றனர்.




யார் ஊருக்கு முதலில் வந்தது என்பதில் தொடங்கி பலவிடயங்களில் உடையாருக்கும் படையாருக்கும் இடையில் அடிக்கடி சண்டைகள் வரும்.ஆனால் நல்ல வேளையாக இதுவரைக்கும் உயிரிழப்புக்கள் வரை சென்றதில்லை.உடையார் அடிப்பார்கள்.பதிலுக்கு படையாரும் திருப்பி அடிப்பார்கள்.அடிவாங்கிய உடையார் மீண்டும் வந்து அடிப்பார்கள்.இவ்வாறு இவை நீண்டு கொண்டே செல்லும்.இதனாலும் உழைப்பதற்காகவும் படையாரில் பலர் அயலூருக்குப் பஞ்சம் பிழைக்கச் சென்றிருந்தனர்.


கடைசியாகவும் இதே போல் படையார் சாதிப் பெண்பிள்ளையொருத்தியுடன் உடையார் சாதிப் பெடியங்கள் சேட்டை விடப் போனபோது படையார் சாதிப் பெடியங்கள் அடித்துப் போட்டார்கள்.இதனால் இலந்தையூரின் அயலூர்க்காரர்களிடம் பொல்லுகள், கொட்டன்கள் போன்ற ஆயுதங்களையும் மற்றும் படையார் சாதிப் பெடியங்கள் எங்கேயெல்லாம் ஒளித்திருக்கிறார்கள் என்பது போன்ற புலனாய்வுத் தகவல்களையும் பெற்றுப், படையாருக்கு நல்ல சாத்துக் கொடுத்து விட்டார்கள் உடையார்கள்.படையாருக்கு எழும்பி நிற்கமுடியாத மரண அடிதான்.

*************************

உடையாரில் மயில்வாகனம் ராஜேந்திரன் அல்லது "ம.ராஜே"ந்திரன் அண்ணை, பொன்னையா சரத்குமார் அல்லது "பொன்.சரத்குமார்" அண்ணையும் "சுனில்" அண்ணை ஆகியோரும் படையாரில் "ஞானசம்பந்தமண்ணை", "கணேஷன்" அண்ணை,"தேவேந்திரன்" அண்ணை மற்றும் "பாலமுரளிதரன்" அண்ணையும்,சடையாரில் "ரவூ"சீலன் அண்ணையும் கொஞ்சம் செல்வாக்கானவர்கள் தான்.

***************************
கோயில்களில் விசேட பூசைகளின் போது அடியார்களுக்கு மோதகம்,பல்லுக் கொழுக்கட்டை என்பன வழங்கப்படுவதுண்டு.இந்த இரண்டு பிரசாதங்களையும் செய்வதில் உடையார் சாதியைச் சேர்ந்த ம.ராஜேந்திரன் அண்ணையும் பொன்.சரத்குமார் அண்ணையும் பெயர் போனவர்களாயினும் பல்லுக் கொழுக்கட்டை என்று வந்தால் ராஜேந்திரன் அண்ணையின் கைவரிசையும், மோதகம் என்று சொன்னால் சரத்குமாரின் மோதகத்தின் ருசியும் பேசப்படுபவை தான்.



மோதகமும் கொழுக்கட்டையும் வெளித்தோற்றத்தில் வேறுபட்டிருந்தபோதும் அவற்றினுள்ளே உள்ள "உள்ளுடன்"(மோதகம்,கொழுக்கட்டையினுள்ளே வைக்கப்படும் இனிப்புக் கலைவை)ஒன்றே.பயற்றை, குண்டுகளாலழிந்த பூமியிலிருந்து வரும் கந்தகப் புகையைப் போன்ற சுடுநீராவியைச் செலுத்தி உயிருடன் கொன்று(அவித்து),தேங்காயை 48,72 பல்குழல்களால்(திருவலகை)தாக்கிக் கொன்று, அந்த சடலங்களையும்(தேங்காய்ப்பூ),அவர்களின் இரத்தத்தைப் பிழிந்து(தேங்காய்ப்பால்) அதனுடன் சீனியும் சேர்த்து, சிறிது துவைத்தெடுத்துத் தான் உள்ளுடன் தயாரிக்கப்படும்.பின்னர் அரிசிமாவை எடுத்து, சுடுநீர் விட்டுக் குழைத்து, அதனை வட்டமாகத் தட்டி, அதனுள் உள்ளுடனை வைத்து,சற்று நீட்டாகத் தட்டி,அவை சந்திக்கும் இடத்தில் பல்லுப் போல் கையால் செய்வதை பல்லுக் கொழுக்கட்டையென்றும்,உருண்டையாக செய்வதை மோதகம் என்றும் அழைப்பார்கள்.

*****************************

ஒருமுறை ராஜேந்திரன் அண்ணை செய்கிற பல்லுக்கொழுக்கட்டையோ அல்லது சரத்குமார் அண்ணை செய்கிற மோதகமோ நல்லது என்று ஒரு கௌரவப் பிரச்சினையொன்று வந்துவிட்டது.தேவேந்திரம் அண்ணைக்கும்,பாலமுரளிதரன் அண்ணைக்கும் ராஜேந்திரன் அண்ணையின் பல்லுக்கொழுக்கட்டை பிடித்துப் போவதற்கு விசேடமாக ஒரு காரணமும் இல்லாவிட்டாலும் அவரின் செல்வாக்குக் காரணமாக தமது இருப்புக்கு ஏதேனும் அச்சுறுத்தல் வந்துவிடுமோ என்றும், அவர் வாங்கிக்கொடுக்கிற அரைப் போத்தல் கள்ளையும் பீடிக் கட்டையும் நன்றி உணர்வோடு நினைத்து, "ராசேந்திரம் அண்ணை உங்கடை பல்லுக் கொழுக்கட்டை தான் பெஸ்ட்" என்றனர்.



சுனில் அண்ணையும் ரவூசீலன் அண்ணையும் சரத்குமார் அண்ணையின் மோதகத்துக்கு ருசி கூட என்றனர்.கணேஷன் அண்ணைக்கும் ஞானசம்பந்தம் அண்ணைக்கும் மோதகமோ,பல்லுக்கொழுக்கட்டையோ நல்லது என்று முடிவெடுப்பதில் கொஞ்சம் சிக்கல்.இறுதியில் இவ்வளவு நாளும் பல்லுக்கொழுக்கட்டை சாப்பிட்டு அலுத்துவிட்டிருந்ததனாலும்,வெளியூரில் இருந்த படையார் சாதியினப் பெடியங்கள் இந்தமுறை மோதகத்தின்றை ருசியைப் பாருங்கோவன் என்று கடிதம் போட்டிருந்ததாலும் ஒரு "நம்பிக்கயான மாற்றமாக" மோதகம் நல்லது என்று சொல்லி சரத்குமாரண்ணையின் மோதகத்தை தூக்கிப் பிடிக்க ஆயத்தமாகினர்.

***************************

இப்பிடி ஆள் ஆளுக்கு கொஞ்சம் ஊரில் செல்வாக்கான தலைகளெல்லாம் அங்கும் இங்கும் பிரிந்து நின்றதால் ஊராருக்கு, மோதகமோ கொழுக்கட்டையோ நல்லது என்று தெரிவதில் குழப்பம்.இதனால் கட்டாக்காலி கால்நடைகள் வயலுக்குள் புகுந்து சேதாரம் விளைவித்த பிரச்சினை முதல் பக்கத்து வீட்டுக்காரனுடன் ஓடிய கந்தசாமி பெண்சாதியின் கேஸ் வரைக்கும் விசாரித்து தீர்ப்புச் சொல்லும் ஊரின் மணியகாரரான(பஞ்சாயத்து தலைவர் போன்ற ஒரு ஊர்த்த்லைவரின் பதவி) தயானந்தம் அண்ணை பஞ்சாயத்தைக் கூட்டினார்.




பஞ்சாயத்தும் கூடியாச்சுது.தயானந்தம் அண்ணை பட்டு வேட்டியை மடிச்சுக் கட்டிக் கொண்டு,வெற்றிலை பாக்கை மென்றபின்னர், வெள்ளிச் செம்பிலிருந்த தண்ணியை கொஞ்சம் ஊற்றி வாயைக் கொப்பளித்துக் கொண்டே, தோளில் இருந்த சால்வையை எடுத்து உதறி மீண்டும் போட்டுக் கொண்டு,"ஏனப்பா பதினெட்டுப்பட்டி சனமும் வந்தாச்சுதா? பிறகு ராமசாமி வரேல்லை.கந்த சாமி வரேல்லை என்று சொல்லக் கூடாது.ஒருவன் வந்தால் அப்பிடியே கப்புன்னு பிடிச்சுக்கணும்.தெரியுதா?" என்று வடிவேலு பாணியில் சொல்லிக் கொண்டே,பஞ்சாயத்தைத் தொடக்கி,பஞ்சாயத்திலே பிரச்சினையை விளக்கினார்.இப்போது உங்களுக்கு பல்லுக் கொழுக்கட்டை பிடித்திருந்தால் கொழுக்கட்டை என்ற போதும், மோதகம் பிடித்திருந்தால் மோதகம் எனும் போது கையை உயர்த்துமாறும் கேட்டுக்கொண்டார்.


படையார் சாதியும் சடையார் சாதியும் பல்லுகொழுக்கட்டை அலுத்திருந்த காரணத்தினால் மோதகத்திற்கு கையை உயர்த்தினர்.உடையார் சாதியில் பெரும்பாலானோர் சரத்குமார் அண்ணைக்கும் ஞானசம்பந்தம் அண்ணைக்கும் இடையே, படையார்களின் பகுதியிலுள்ள அவர்களின் கோவில்களில் மோதகம் பிடிக்கும் வேலையை அவர்களிடமே விட்டுத்தந்து,அவர்களே தங்களை சுயநிர்ணயம் செய்து, சுயமாக மோதகம் பிடிக்க அனுமதித்தல் என்பது போன்றதொரு ஒரு ரகசிய உடன்பாடு உள்ளதாக தவறாகக் கற்பிதம் செய்துகொண்டு,கொழுக்கட்டைக்கு கை உயர்த்தினார்கள். தயானந்தம் அண்ணை கைகளை எண்ணி, 50 % மேற்பட்டோர் கொழுக்கட்டையே நல்லது என்று தீர்மானித்துள்ளதாகக் கூறினார்.சுனில் அண்ணை கொழுக்கட்டைக்கு ஆதரவான உடையாரில் சிலர் இரண்டு கையையும் உயர்த்தி வாக்கு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறினாலும் தயானந்தம் அண்ணைக்கோ,சனத்துக்கோ கொழுக்கட்டையின் ருசி பற்றியதான் மக்கள் தீர்ப்பில் அவ்வளவாக சந்தேகம் வரவில்லை.


கொழுக்கட்டை நல்லதென்றாலென்ன மோதகம் ருசியென்றாலென்ன எமக்குப் பிரச்சினையில்லை என்றிருந்த படையார் சாதியினர் தாம் ஆதரித்த மோதகம் நல்லதென்று தெரிவுசெய்யப்படவில்லையாயினும், தாங்கள் ஓரளவாவது ஒற்றுமையாக கொழுக்கட்டை பிடிக்கவில்லையென்று சொன்னதையும், என்ன தான் இருந்தாலும் மோதகமும் கொழுக்கட்டையும் ஒன்றே எனத் தாம் பகுத்தறிந்து கொண்டதையுமிட்டு திருப்திப் பட்டுக் கொண்டே பஞ்சாயத்த்தை விட்டுச் சென்றனர்.