Sunday, March 28, 2010

மாஸ்ரற்றை பிரம்பு

துள்ளித் திரிந்த பள்ளிப்பருவங்களில் நாம் செய்த கள்ளத்தனங்கள், மொள்ளமாரித்தனங்களுக்கெல்லாம் பள்ளி ஆசான்கள் நம்மையெல்லாம் நுள்ளி எடுத்திருந்திருப்பார்கள் என்பது வெள்ளிடைமலை.அனைவரும் அந்த வயதைக் கடந்து வந்தவர்கள் தான்.அந்த வயதில் எல்லோரும் குழப்படி செய்திருப்போம்.ஆசிரியர்களுக்குப் பயம் என்றாலும் ஆசிரியர்கள் அடிப்பார்க்ள் என்பதற்காக குழப்படி செய்யாமல் மாணவர்கள் விட்டதாகவும் இல்லை.ஆசிரியர்களும் தங்கள் பாட்டில் ஏதேதோ கத்தினாலும் அவர்கள் செல்லவிட்டு அவர்கள் சொன்னதற்கு எதிர்மாறாக கூத்துக்களெல்லாம் அரங்கேறியிருக்கும்.


தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்த குழப்படிகளை இப்போது நினைத்தால் சிலவேளைகளில் சிரிப்புத்தான் வரும்.அதே நேரம் வாங்கிய அடிகளும் ஞாபகம் வரும்.க.பொ.த.(சா/த) இற்கு முன்னர் நானும் பல பேரிடம் சரமாரியாக வாங்கிக் கட்டியிருந்தாலும் ஒரு சில அடிகள் செத்தாலும் மறக்காது.இப்போதும் அந்த அடிகள் வலிக்கும்.தற்போதும் அந்த அடிகள் 'பின்னுக்கு' புளிக்கும்.காலுக்கு கீழ் தழும்பு தெரிவது போல் இருக்கும்.அப்படியாக நான் வாங்கிய என் நெஞ்சம் மறக்காத அந்த அடிகளை மீட்டு உங்களுடன் பகிர்வதோடு உங்களையும் அந்த 'வசந்த காலங்களை' மீட்டிப் பார்க்கச் செய்வதே இந்தப் பகுதியின் நோக்கம்.




நாங்கள் ஒன்பதாம் ஆண்டளவில் கற்றுக் கொண்டிருந்த போது,எங்கள் உப அதிபராகக் கடமையாற்றியவரின் பட்டப்பெயர் புலிக்குட்டி.ஏன் அவர் அவ்வாறாக வழங்கப்படுகிறார் என்பதற்கு, நண்பர் கிருத்திகன் தனதொரு பதிவில் விரிவாக விளக்கம் கொடுத்திருந்தாலும் அதை வாசிக்காதவர்களுக்காக அந்த காரணத்தை இரத்தினச்சுருக்கமாகச் சொல்லிச் செல்லலாம் என்று நினைக்கின்றேன்.புலிக்கு உள்ளங்கால் கூடக் கறுப்புத் தானாம்.அந்த நிறமுடைய இவரின் தந்தையின் குட்டியாகிய இவரை புலிக்குட்டி என்றே பன்னெடுங்காலமாகப் பலரும் வழங்கி வந்தனர்.


நாங்கள் தரம் 9 இல் கற்றுக்கொண்டிருந்த போது பாடசாலைகளுக்கிடையான வன்பந்துப் போட்டி நடைபெறுவது வழக்கம்.15 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கிடையிலான ஆட்டம் ஒன்று எமது பாடசாலை மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.எதிரணிப் பாடசாலையை எனக்கு ஞாபகம் இல்லை.எமது வகுப்பு நண்பனும்,தற்போது மருத்துவபீடத்தில் கற்றுக் கொண்டிருப்பவனுமாகிய கலைமாறனும் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக அணியில் விளையாடுகின்றான்.(நண்பன் பால்குடியும் விளையாடியிருப்பார் என்று நினைக்கின்றேன்)எமது நண்பனின் துடுப்பாட்டத்தை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆவல் மிகுதி, எம்மில் கிளர்ந்தது.

எமது கல்லூரி மைதானம்,பாடசாலையிலுருந்து 70 - 80 m தூரத்தில் எமது சகோதர(ரி)ப் பாடசாலையை அண்மித்திருந்தது.ஆட்டத்தைக் காணச் செல்வதென்றால் பாட ஆசிரியரிடம் அனுமதி பெற்றுத்தான் செல்லவேண்டும் என்பது பாடசாலை விதிமுறை.ஆனால் அன்று எங்கள் 8ம் பாட ஆசிரியர் பாடசாலைக்கு சமுகம் தந்திருக்கவில்லை.அதனால் நாங்கள் அனைவரும் தன்னிச்சையாக,ஒற்றுமையாக முடிவெடுத்து மைதானத்துக்கு சென்றோம்.(எங்கள் வகுப்பு ஒற்றுமையைப் பற்றி சொல்லத் தேவையில்லை.என்னதான் எங்களுக்குள் அடிபட்டாலும்,வெளியே ஒரு அதிபரிடமோ, ஆசிரியரிடமோ அல்லது மாணவத் தலைவரினிடமோ எவனும் ஒருவனை ஒருவன் மாட்டி விட மாட்டான்.செம fit.அன்று பழகிய அந்த ஒற்றுமையினால் தான் நாம் இன்றும் நல்ல நண்பர்களாய் ஒற்றுமையாகவே இருக்கின்றோம்)


கடைசிப் பாடமென்ற படியால் பஸ்களில் பயணிக்கும் நெல்லியடி, கரவெட்டி, கரணவாய், உடுப்பிட்டி, தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை, துன்னாலை நண்பர்கள் புத்தகப் பைகளுடனேயே மைதானத்துக்குள் வந்திருந்தனர்.நாங்கள் எமது துவிச்சக்கரவண்டிகள் உள்ளே நின்ற காரணத்தினால் வெறுங்கையுடனையே சென்றிருந்தோம்.சென்று கலைமாறனின் ஆட்டத்தையும் கண்டு களித்துக் கொண்டிருந்தோம்.



இந்த நேரம் பார்த்து எங்கடை புலிக்குட்டி வன்னிப் பக்கம் போயிருக்குது(எங்களது கட்டடத் தொகுதியின் செல்லப்பெயர்- பெயரிலிருந்து அதிலுள்ளவர்கள் செய்யும் குழப்படிகளை சொல்லாமலே புரிந்துகொள்ள முடிகிறது தானே?)வகுப்பில் ஒருவரும் இல்லை.பக்கத்து வகுப்பிடம் விசாரித்திருக்கிறார்.திரும்பி அலுவலக்த்துக்கு வந்து, ஒரு 1 m நீளமும் ஒரு 1 இஞ்சி மொத்தமும் உள்ள பிரம்பொன்றையும் எடுத்துக் கொண்டு மைதானத்துக்கு வந்தார்.மைதானத்தின் பின்புறவாசலில் நின்று கொண்டு(அந்தப் பாதையால் தான் சகோதர(ரி)ப் பாடசாலையின் சகோதரிகள் பாடசாலை சென்றுவருவார்கள்)பிரம்பைக் காட்டியவாறே ஒன்றன்பின் ஒருவராக வரும்படி கர்ச்சித்தார்.


புலிக்குட்டியை சும்மா கண்டாலே பயம்.இதில தடியை வேறை ஆட்டி ஆட்டி கொண்டு வெருட்டுது.ஒருத்தனும் முன்னுக்குப் போகமாட்டேன்கிறான்.ஒருத்தனுக்குப் பின் ஒருத்தன் ஒளித்து வரிசையின் பின்பக்கம் செல்வதற்கே எல்லாரும் முண்டியடித்துக் கொண்டிருந்தாங்கள்.குட்டிக்கு இன்னும் கோபம் ஏறிட்டுது.வந்து ஒருத்தனை ஏதேச்சையாகப் பிடித்து ரோட்டிலை வைத்து ஒரு மூன்று,நாலு அடி விழுந்திருக்கும்.இப்பிடியே ஒவ்வொருத்தருக்கும் பரவலாக மூன்று, நாலு என்று விழுந்து கொண்டே வந்துது.


எனது முறையும் வந்தது.மூன்றே மூன்று அடி.சரிசமனான விசைப்பருமன்.சரியாக ஒரே இடத்தில் சரியான நேர இடைவெளியில் அவரது பிரம்பு எளிமை இசைஇயக்கம் ஆடிச் சென்றது.ஆனால் எனக்கோ சீவன் போய்வந்தது.(ஆள் தூயகணிதம், பிரயோககணிதம், பௌதீகம், இரசாயனம், தாவரவியல், விலங்கியல் என்று க.பொ.த.(உ.த)விஞ்ஞானத்திலில் எல்லாப் பரப்பையும் கரைத்துக் குடித்த மனிசன் என்றபடியால் எதைப் பாவித்து உந்த எளிமையிசை இயக்கத்தை நிகழ்த்தினாரோ என்று எனக்கு தெரியாது)அப்போது நேரம் 1.45 ஐ த் தாண்டியிருந்தபடியால் சகோதரப் பாடசாலையின் சகோதரிகள்,நண்பிகள்,எங்கள் கனவுக் கன்னிகள் எல்லாரும் எங்களைப் பார்த்து கொடுப்புக்குள்ளேயே சிரித்துக் கொண்டு சென்றார்கள்.


என்ன செய்வது வாங்கின அடிகளின் வலிகளை விடவா அந்த கொடுப்புச்சிரிப்புக்கள் வலிதானவை என்று நம்மை நாமே தேற்றிக் கொண்டோம்.இன்றைக்கும் அந்த அடிகள் எங்களை பின்னுக்குத் தடவிப் பார்க்கச் சொல்கிறது."அ..ஆ..அ ம்..ம்..மா "என்று கண்களைச் செருமிக் கொண்டே நுனிக்காலில் எழும்பி "அ..அ..ஆ.. ஐயோ சேர்.. இனி ..இப்பிடிச் செய்யமாட்டேன் " எனச் சொல்ல வைக்கிறது.இன்றல்ல கடைசிவரைக்கும் மறக்க முடியாதவை அந்த அடிகள்.தங்கள் அடி மூலம் எங்களைப் பண்படுத்திய அந்த ஆசிரியர்கள் இன்றும் எம்முன்னே வந்து போகிறார்கள்.அது தான் அந்த அடியின் வலிமை.பெருமை.திறமை.நன்றிகள் கோடி அந்த அடிகளுக்கும் அடித்துத் திருத்திய ஆசிரியர்களுக்கும்.

Sunday, March 21, 2010

சர்வதேசப் பாடசாலைகளின் சாதக பாதகங்கள்

இன்றைய காலகட்டங்களில் சர்வதேச பாடசாலைகள்(International School)களில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும், அந்தப் பாடசாலைகளின் எண்ணிக்கையும், அங்கு பிள்ளைகளைக் கற்கத்தூண்டும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றமை கண்கூடு.இந்தக் கல்வியை அவர்கள் நாடுவதன் காரணம் என்ன?அது சரியானவழிமுறைதானா?அதில் உள்ள சாதக, பாதக விடயங்களை அலசுவதே இந்தப் பதிவின் நோக்கம்.உங்கள் விமர்சனங்களை, நிச்சயமாக நான் திறந்தமனதுடன் வரவேற்கின்றேன்.



ஒருநாட்டிலே வாழும் வெளிநாட்டுப் பிரஜைகளின் பிள்ளைகளுக்கு வெளிநாட்டுப் பாடத்திட்டங்களைப் போதிப்பதற்காக இந்த சர்வதேசப் பாடசாலைகள் ஜப்பான்,சுவிற்சலாந்து,துருக்கி போன்ற நாடுகளில் 19 ம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் தோன்றின.இவ்வாறான பாடசாலைகளுக்கென்று பிரத்தியேகமான முறையில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.இலங்கையில் இருந்த வெளிநாட்டு இராஜதந்திர அலுவல்கள்,தூதரகங்களைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் கற்பதற்கென்று இலங்கையின் முதலாவது சர்வதேசப் பாடசாலை 1958 ம் ஆண்டு கொழும்பில் "ஓவெர்செஅ'ச் Cகில்ட்ரென் ஸ்சோல்" என்ற பெயரில் ஆரம்பிக்கப் பட்டது.


ஆரம்பத்தில் ஓரளவிற்கே இருந்த இப்பாடசாலைகள் 1980 இன் பின்னர் வந்த திறந்த பொருளாதாரக் கொள்கையினால் விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கின.தனியார் பாடசாலைகளுக்கும் சர்வதேசப் பாடசாலைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், தனியார் பாடசாலைகள் அரசாங்கப் பாடத்திட்டத்தைப் பின்பற்றிவரும் அதேவேளை சர்வதேசப் பாடசாலைகள் தத்தமது நாட்டுக்குரிய அல்லது பெரும்பாலும் அமெரிக்க, பிரித்தானியப் பாடத்திட்டங்களைப் பின்பற்றுகின்றன. ஆரம்ப காலங்களில் தலைநகரில் மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட சருவதேசப் பாடசாலைகள் இன்று மேல் மாகாணத்தில் 54 பாடசாலைகளாகவும்,மத்திய மாகாணத்தில் 16 ஆகவும்,வடமேல் மாகாணத்தில் 8 ஆகவும் காணப்படும் அதேவேளை வடக்கு,கிழக்குப் பிரதேசத்தில் ஒன்றாகவும் உள்ளது.




சர்வதேசப் பாடசாலைகள், 5 - 14 வயதுப் பிள்ளைகளுக்கான பாடசாலைகளை கல்வி அமைச்சின் அனுமதியின்றி அமைக்கமுடியாதென்ற இலங்கையில் உள்ள கல்விச் சட்டங்களை மீறியே 5- 14 மாணவர்களுக்காகவும் பாடசாலைகளை அமைத்துள்ளன.பெரும்பாலான பாடசாலைகள் ஆங்கில மொழியில் கற்பித்தாலும்,சில பாடசாலைகள் ரஷ்ய,பிரெஞ்சு மொழிகளிலும் கற்பிக்கின்றன. இலங்கைப் பாடசாலைகளின் நோக்கம் சிறந்த இல்ங்கைப் பிரசையையுருவாக்குதல் எனில்,பிரித்தானியப் பாடத்திட்டதுடன செயற்படும் சர்வதேசப் பாடசாலையாயின் சிறந்த பிரித்தனியப் பிரசையையுருவாக்குவதே அதனது நோக்கமாக இருக்கும்.அவ்வாறெனில் பிரித்தானிய சர்வதேசப் பாடசாலையொன்றினால் பிரித்தானிய கலாசாரங்களுடன் பிரித்தானியப் பிரசையாக உருவாக்கப்படும் ஒரு இலங்கை மாணவன் எவ்வாறு இலங்கை சமூகத்துடன் பொருதி வாழமுடியும் என்ற கேள்வி எழுவதைத் தடுக்கமுடியாது.ஏனெனில் பிரித்தானிய சர்வதேசப் பாடசாலையில் கற்கும் எல்லாரும் பிரித்தானியாவில் சென்று வாழப்போவதில்லை.அவ்வாறு சென்றாலும் அவர்கள் பிரித்தானிய சமூகத்தில் ஆங்கிலேயர்களாக ஏற்றுக் கொள்ளப் படப் போவதுமில்லை.இந்நிலையில் சர்வதேசப் பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்கள் இலங்கைப் பிரசையாகவோ அன்றி பிரித்தானியப் பிரசையாகவோ அன்றி எந்தவொரு அடையாளமுமின்றி அந்நியப்படுத்தப்படும் அபாயம் உள்ளது.




சுதந்திரத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட தாய்மொழிக் கல்விக்கொள்கை மத்திய,உயர் தரவர்க்கத்தினருக்கே கல்வி என்று இருந்த நிலையை மாற்றி,ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த சிறந்த,உயர் கல்வியை கிராமப் புறங்களுக்கும் விரிவு படுத்தப் பயன்பட்டது.தாய்மொழிக் கல்வியினால் மாணவர்களின் ஆங்கில அறிவிலே பாதிப்பு ஏற்படுவதாக வாதங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் கல்வித்துறையிலே சமூகநீதியையும் நியாயத்தையும் ஏற்படுத்த அது உதவியது என்றால் அதில் தப்பேதுமில்லை. ஆனால் இவற்றுக்கெல்லாம் ஆப்படிக்கும் வகையில் 1990 களில் ஏற்பட்ட பூகோளமயவாக்கம், இலங்கையில் அறிமுகப்படுத்தப் பட்ட தாராளமயமான பொருளாதாரக்கொள்கை, அதன் பயனாக எழுச்சியுற்ற தனியார் துறையின் அசுர வளர்ச்சி, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் ஆங்கிலமொழிக்களிக்கப்பட்ட முக்கியத்துவம், முன்னணி அரசாங்கப் பாடசாலைகளில் அனுமதி பெறுவதில் எழுந்த சிக்கல்கள், அரசாங்கப் பாடசாலைகளில் ஏற்பட்ட கல்வி, நிர்வாக சீர்கேடுகளினால் ஏற்பட்ட அரசாங்கப் பாடசாலைகளின் தராதர வீழ்ச்சி என்பன ஒருங்கு சேர்ந்து சர்வதேசப் பாடசாலைகளின் பால் மாணவர்களையும், பெற்றோர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது.



சர்வதேசப் பாடசாலைகளின் வளர்ச்சிக்கு தாராளமயமாக்கல் கொள்கையால் நன்மையடைந்த புதிய செல்வந்தவகுப்பினர் தாய்மொழிக் கல்வியைப் புறக்கணித்து,ஆங்கில கல்வியை நாடமுயன்றதும் அவர்களைப் பார்த்து சாதாரண மக்கள் வாயைப் பிளக்கத் தொடங்கியதுவும் காரணமாய் அமைந்தது.அதுமட்டுமலாது தாராளமயமாக்கலால் அதிகரித்த தனியார் மூலதனமும்,அந்நியச் செலாவாணிகளின் உள்வருகையும் வர்த்தகம்,கைத்தொழில்,சுகாதாரம் போன்ற துறைகளிலும் கால்பதித்திருந்த தனியாரை கல்வித்துறையிலும் முதலிடத் தூண்டியது.இதனாலும் சர்வதேசப் பாடசாலைகளின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு தோன்றியது.




சர்வதேசப் பாடசாலைகளில் செல்வந்தவகுப்பினர் ஆங்கிலத்தில் கற்பதால் அவர்களுக்கு தனியார் வேலைவாய்ப்புக்கள் அதிகளவில் கிடைக்க ஏதுவாயமைகின்றது.சர்வதேசப் பாடசாலைகளில் வசூலிக்கப்படும் உயர்ந்த கட்டணத்தையும் பெற்றோர் செலுத்தத் தயாராயிருப்பது அவர்களுக்கு தங்கள் பிள்ளைகளை ஆங்கிலத்தில் கற்பிக்க வேண்டும் என்பதில் அவர்கள் எவ்வளவு அவாவோடு உள்ளனர் என்பதையும் இந்தப் பாடசாலைகளில் கற்பது கௌரவமானது என்ற அவர்களின் சிந்தனையோட்டத்தையும் காட்டிநிற்கின்றது.அத்தோடு பிரபல அரசாங்கப் பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க முயன்று தோற்றுப் போன சம்பவங்களும் அதனால் ஏற்பட்ட மனத் தாக்கங்கள்,"கௌரவக் குறைச்சல்கள்" போன்றனவற்றோடு சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் கற்பதற்கு இவை ஒர் ஆரம்பமாக இவை அமையும் என்ற கருத்தோட்டமும் அமைகின்றது.


தாய்மொழியில் கிடைக்காத அரிய நூல்கள், சஞ்சிகைகள், கற்றல் சாதனங்கள் ஆங்கிலமொழிக் கல்வியில் கிடைக்கின்றன என்ற அவர்களின் வாதமும் மறுதலிக்கப் படமுடியாத ஒன்று.35 சதவீதமான வேலைவாய்ப்புக்கள் ஆங்கில மொழியில் செயற்படும் தனியார்துறையாரிடம் உள்ளதால் ஆங்கில மொழிக்கல்வியில் இயல்பாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு ஈர்ப்பு ஏற்படுகின்றமை தவிர்க்கமுடியாததாகிறது.அதற்காக இலங்கையில் உள்ள 40 இலட்சம் மாணவர்களுக்கும் ஆங்கிலமொழிக் கல்வியை வழங்கினால் அவர்கள் அனைவருக்கும் தனியார்துறை வேலைவாய்ப்பை வழங்குமா என்று குண்டக்க மண்டக்க கேள்வியெல்லாம் கேட்கப் படாது. பூகோளமாக்கப்பட்ட உலகில் ஆங்கிலமே விஞ்ஞான மொழி, இராஜதந்திரமொழி, வர்த்தக மொழி, சர்வதேசத் தொடர்பாடல் மொழி, அறிவு உலகின் எல்லாப் பகுதிகளுக்கும் ஆங்கில மொழியிலேயே வழங்கப்படுகின்றது.ஆக்வே எதிலும் தவிர்க்கமுடியாத ஆங்கிலத்தைக் கற்கவேண்டியதுவும் அதை பெறுவதற்கு சிறந்த வழியாக சர்வதேசப் பாடசாலைகளைக் கருதியதுவும் ஒரு காரணமாக அமைகின்றது.



அத்தோடு இலங்கைப் பல்கலைக் கழகங்களிலும் காலம் தாழ்த்தியே மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்ற்மை, பட்டம் பெறும் போது 25- 26 வயதைத் தொட்டுவிடுகின்றமை, கஸ்ரப்பட்டு அனுமதி பெற்றாலும் சிரேஷ்ட மாணவர்களின் "வதை" எனப் பல பிரச்சினைகள் உள்ளமையினால்,இவற்றைத் தவிர்ப்பதற்குமாய்ப் பலர் சர்வதேசப் படசாலைகளின் இலண்டன் க.பொ.த.(சா/த) மற்றும் (உ/த) போன்றவற்றைக் கற்கின்றனர். மேலே உள்ள பல காரணங்களுக்காக அவர்கள் சர்வதேசப் பாடசாலைகளைத் தெரிவு செய்தாலும் அதிலே உள்ள சமூக ரீதியான பாதகங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஓவர் சீரியஸ் பதிவாய்ப் போச்சுதோ எண்டு இப்பத் தான் யோசிக்கிறன்

Sunday, March 7, 2010

எங்கன்ரை ஊருக்கு கறண்ட் வந்த கதை

இதென்னடா இது அவனவன் சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் ரொக்கட் அனுப்பிற காலத்திலை வந்து நிண்டு கொண்டு கறண்டைக் கண்டு பிடிச்சாலும் பரவாயில்லை, கறண்ட் ஊருக்கை வந்ததையே ஒரு கதையெண்டு கதைக்க வந்திட்டானென்று நினைக்காதையுங்கோ.நாங்களாவது பரவாயில்லை உதையெண்டாலும் கதைக்கிறம்.இண்டைக்கும் கறண்டைக் காணாமல் குப்பி விளக்கிலை படிச்சுக் கொண்டிருக்கிற எங்கடை தம்பி,தங்கச்சிமார் எத்தினை பேர் இருக்கிறார்கள்.கறண்ட் வேண்டாம்.ஆண்டாண்டு காலமாய் ஆண்டு ஆண்டு வந்த எங்கன்றை சந்ததை அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தி,கஞ்சிக்கும் காத்திருக்கிற நிலைமைக்கு மாற்றிவிட்டார்கள்.அந்த தம்பியோ,தங்கச்சியோ நாளைக்கு இதைவிடப் புதுமியாய் கதை சொல்லும் போது நாங்களும் கேட்டு நிற்போம்.



எண்பதுகளில் இனப்பிரச்சினை முனைப்புப் பெறமுன்னர்,எமது ஊர்களிலெல்லாம் இலக்சபானாவில் இருந்து இருபத்து மணித்தியாலக் கறண்ட் இருந்ததாம்.எங்கள் தோட்டங்களுக்கெல்லாம் இரவிலே லைற்(light) வெளிச்சதிலை மோட்டர் பூட்டித் தான் தண்ணி மாறுகின்றனாங்கள் என்று எங்களின் மாமாமார்,ஊரின் அண்ணாமார் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறோம்.அதன்பிறகு இனப்பிரச்சினை முனைப்புப் பெற்றதன் பின்னர் கற்ண்ட் எங்களெல்லாருக்கும் 'கட்' பண்ணப்பட்டது.



அதனால் வீதிகளில் சும்மா நின்ற ரயின் தண்டவாளத்தைப் போன்ற இரும்பாலான கறண்ட் கம்பங்களை எல்லாரும் ஆளுக்காள் பிரட்டி,தேவையான அளவுகளில் வெட்டி வேலிகளூக்கு பொறுப்பான தூணாகவும்,ஆடு மாடு கட்ட கம்பியாகவும் என்று பல வேறு வழிகளில் பயன்படுத்தினார்கள்.வேலியின் மேலும் கீழும் கறண்ட் கம்பியை இழுத்துக்கட்டிய பின் மூரியை(பனம் மட்டை)அதிலே வரிந்தார்கள்.


கறண்ட் போஸ்ற்(post) இலிருந்த கப்பியைக் கழட்டி கிணத்திலே தண்ணி அள்ளப் பாவித்தார்கள்.ஏற்க்னவே கிணத்திலே கப்பி இருந்தவர்களூம்,துலா வைத்திருந்தவர்கள் கூட ஏன் ஓசியிலை கிடக்கிறதை சும்மா ஆரும் அள்ளிக் கொண்டு போகவிடுவானெனென்று மிஞ்சின கொஞ்ச நஞ்ச கப்பிகளையும் கொண்டு போய் வெங்காயக் கொட்டிலின் மூலைக் கைமரங்களிலே பவுத்திரமாகத் தூக்கி வைத்தார்கள்.இப்பிடி கறண்ட் ச்ப்ளை(supply) நிண்ட கையோடையே எங்கடை சனம் ஊரில நேற்று வரை கறண்ட் இருந்ததெண்டதுக்கு ஒரு சாட்சியமும் விடாமல் வழிச்சுத் துடைச்சு எல்லாத்தையும் கலட்டி,புடுங்கி எடுத்துக் கொண்டுத்துகள்.




நாங்களெல்லாம் பிறந்து 13, 14 வருசமாக கறண்டைக் கண்ணாலை கண்டது கூட இல்லை.கறண்ட் எப்பிடியிருக்கும், என்ன செய்யும் எண்டு கூடத் தெரியாத நாங்கள் கறண்டுடன் கற்பனையில் விளையாடினோம்.எங்கண்ரை வீட்டின் வெளி விறாந்தையோடிருந்த சுவிட்சை மேசைக்கு மேலை ஏறி மேல்நோக்கியோ, கீழ் நோக்கியோ போடுறது சரியென்று கூடத் தெரியாமல் ஏதாவது ஒரு பக்கம் தட்டிப் போட்டு "ஆ .... கறண்ட் .. வந்திட்டுதாம்..." எண்டு ஊரிலை எங்களைமாதிரி இருந்த எங்கடை வயசையொத்த குஞ்சு குருமனெல்லாம் விளையாடுவோம்.



வீட்டை கனகாலம் கறண்ட் இல்லாமல் இருந்ததால் பாவிக்காமல் பழுதாய்ப் போன ஒரு ரேடியோவும் இந்தியன் ஆமி தூக்கி எறிந்ததால உடைந்து போயிருந்த ஒரு பெரிய "பொக்ஸ்" ரேடியோவையும் தூக்கி வைத்துக் கொண்டு,எங்கன்றை தலைகளை ரேடியோக்களுக்குப் பின்னால் ஒளித்துக் கொண்டு, நாங்களே பாட்டுப் படிச்சு,நாங்களே மகிழவேண்டிய சூழல் எங்களுக்கு.table fan ஐ எடுத்து அதன் முன் கவரைக் கழட்டி விட்டு நாங்களே கையாலை சுத்தி காத்து வாங்கி விளையாடினோம்.


சீலிங் fan இன் தகடுகள் எங்கள் தோட்டங்களின் வாய்க்கால்கள் உடைப்பெடுக்காமல் இருக்க மடைக்கு அணையாக வைக்கப் பயன்பட்டுது. இப்பிடி ஊரிலுள்ள அனைவரினதும் முந்திப் பாவித்த மின்சார சாதனங்கள் எல்லாம் அவற்றின் சம்சாரமான மின்சாரமில்லாமல் போனதால் தூக்கியெறியவேணடிய நிலைக்குப் பழுதாகிப் போயிருந்தாலும் எல்லாரும் கறண்ட் வந்தால் போட்டுப் பார்த்துட்ட்டுச் செய்வம் எண்டிட்டு வைச்சிருந்தார்கள்.இப்பிடியிருந்த எங்கடை ஊருக்கு கறண்ட் வந்தால் எப்ப்டியிருக்கும்.



யாழ்ப்பாணம் இராணுவத்திடம் வீழ்ந்து 1,2 வருடங்களின் பின்னர் எல்லா இடங்களூக்கெல்லாம் கறண்ட் வழங்கும் வேலைகள் முடுக்கி விடப்பட்டன.அந்த வேலைகள் தொடங்கப்பட்டு 1, 1 1/2 வருடங்களின் பின்னர் திடீரென்று ஒருநாள் இலங்கை மின்சார சபையின் கன்ரரிலே கொங்கீரீற்றாலை அரியப்பட்ட லைற் போஸ்ற்களை கொண்டு வந்து கிறேனாலை இறக்கினார்கள்.ஊரிலை உள்ள எல்லாருக்கும் மின்சாரம் பாய்ஞ்சது போல இருந்தது.



கொண்டு வந்து இறக்கிய மின்சார சபையின் ஊழியர்கள் எல்லாருக்கும் நல்ல மரியாதை.அவர்களுக்கு தேத்தண்ணீ, வடை,விசுக்கோத்து,கல்பணிஸ்,வாழைப்பழம் எண்டு எல்லாம் கொடுத்து உபசரித்தார்கள் ஊரவர்கள்.கவனிப்போ கவனிப்பு அப்படியொரு கவனிப்பு.அவர்கள் அவர்கள் வாழ்க்கையில் அதற்கு முன்னர் அப்படியொரு கவனிப்பை கண்டிருக்க மாட்டடார்கள்.சரி போஸ்றைப் போட்டு விட்டுப் போய்விட்டார்கள். போஸ்ற்றுகள் போட்ட போட்ட படியே போட்ட போட்ட இடத்திலே போட்ட போட்ட படியே மாதக்க் கணக்கிலே இழுபட்டன.



பிறகொருநாள் கொஞ்சப் பேர் வந்து போஸ்ற்றுகளை நடுவதற்கு கிடங்கு கிண்டினார்கள்.மீண்டும் பிரமாதமான் உபசரிப்பு அவர்களூக்கு.மறுபடியும் போய் விட்டார்கள்.மழை வந்து வெள்ளத்தால் நிரவுப் பட்டன கிடங்குகளெல்லாம்.மீண்டும் இடைவெளி.மீண்டும் காலம் கடந்து வந்து அந்தப் போஸ்ற்றுகளை நட்டு விட்டுவிட்டுப் போனார்கள்.நாட்கள் உருண்டன.


கறண்ட் கம்பியிழுக்க காலம் கனியவில்லையெண்டு எங்கள் காத்திருப்பை நீட்டி மேலும் பார்த்திருக்கச் செய்தார்கள்.ஒரு மாதிரி கறண்ட் கம்பி இழுக்கப் பட்டாலும் பிரதான வீதியிளுள்ளவர்களுக்கே முதலில் இணைப்பு வழங்கப்பட்டதால் துணை வீதியொன்றிலிருந்த எங்களுக்கு கைக்கெட்டிய கறண்ட் வாய்க்கெட்டாமல் போனது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.


இந்தக் கறண்ட் கூட ஒன்றும் இருபத்துமணித்தியாலமும் தொடர்ச்சியாக வருகின்ற கறண்ட் இல்லை.எங்களூருக்கும் எங்கள் அயலூர்கள் சில்வற்றுக்கும் சேர்த்து ஒரு ஜெனெரேற்றரை எங்களூரிலே பொருத்தி அதிலிருந்து எல்லா ஊர்களுக்கும் மின்சாரத்தை ஒன்றைவிட்ட ஒரு நாள் இரவு ஆறு மணியிலிருந்து பத்து மணி வரையும் காலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரையும் ஏதோ கறண்ட் என்ற பெயரில் காண்பித்தார்கள்.


பிரதான வீதியோடிருந்த சிவா அண்ணை என்பவரின் வீட்டிலிருந்து அவரின் வீட்டில் உள்ள ஒரு கோல்டரில்(holder) ஒரு அடப்ரரைக்(adapator) கொளுவி அதன் மற்ற முனையில் இன்னுமொரு அடப்ரரைக் கொளுவி எங்கள் வீட்டுக் ஹோல்டரிலே கொண்டு வந்து சொருகினோம்.எங்கள் வீட்டிலே லைற் எரிந்த அந்த அருமையான நேரம் இன்றும் என் கண் முன்னே நிற்கின்றது. நாங்க்ள் போட்ட கூச்சல்களூம்,துள்ளல்களூம் கும்மாளங்களும் பக்கத்து வீட்டுக் காரர்களுக்கெல்லாம் சொல்லாமலே காட்டிக் கொடுத்தது எங்கள் வீட்டிலே கறண்ட் வந்த சேதியை.


அடுத்த நாள் பள்ளிக் கூடத்திலும் ரியூசனிலும் காணூமிடமெங்கும் நண்பர்களிடமெல்லாரிடமும் எங்களுக்கு கறண்ட் வந்த சேதியை சொல்லி மகிழ்ந்ததையெ்ல்லாம் நினைக்க இன்று சிரிப்பாக இருக்கினறது.பின்னர் சிறிது காலத்தின் பின்னர் எங்களுக்கும் நேரடி இணைப்புக் கிடைத்தது.இணைப்புப் பெறாமல் பலர் சட்டவிரோதமாக கறண்ட் கம்பியிலேயே ஒரு கொக்கைத்தடியாலை பக்குவமாகக் வயரைக் கொழுவி direct ஆக கறண்ட் எடுக்கத் தொடங்கினதாலை இரவிலையெல்லாம பல்ப்(bulb) இன் இழை தணல் மாதிரி சிவப்பாத் தான் எரியும்.ஆகக் கூடின பவர் அதுக்கு அவ்வளவு தான்.வெளிச்சமே இருக்காது.ஏனாடா இதுக்கு கறண்டை தருவதை விட தராமலே இருந்திருக்கலாமே ஏன்று கூட யோசிக்கத் தோன்றும்.



ஒன்று இரண்டு வருடங்களின் பின்னர் 24 மணித்தியாலக் க்றண்டும் வந்தது.24 மணித்தியாலக் கறண்ட் வந்த செய்தி கேட்டு ரியூசனாலே சைக்கிளில் கூவிச் சென்று சுவிட்சைப் போட்டுப் பார்த்ததெல்லாம் பசுமரத்தாணி மாதிரி மனசிலை பதிஞ்சிருக்குது.ஆனாலும் இன்றுவரைக்கும் 24 மணித்தியாலம் என்று சொன்னாலும் கூட இரவிலே மின்னி மின்னி எரியும் அல்லது இரவிலே 'கட்' ப்ண்ணுப்படும்.


ஆனால் ஐஞ்சு நிமிசம் கறண்ட் போனாலே அஸ்ஸு, புஸ்ஸூ, ஐயோ என்று என்று a/c க்காகவும் serial பாக்கிற பொம்பிளையள் கத்திறதியும் பார்க்கேக்கை அவையெளெல்லாரையும் எங்கடை சன பட்ட, படுகிற கஸ்ரங்களையெல்லாம் கொண்டு போய்க் காட்ட வேணும் மாதிரிக் கிடக்குது.எங்கன்ரை எல்லாச்சனமும் எப்பதான் கறண்ட் மாதிரி எல்லா வசதியும் கிடைச்சு சுயமா சுதந்திரமா நிம்மதியா வாழுறது எண்டு தெரியாமல் கிடக்குது