Sunday, March 21, 2010

சர்வதேசப் பாடசாலைகளின் சாதக பாதகங்கள்

இன்றைய காலகட்டங்களில் சர்வதேச பாடசாலைகள்(International School)களில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும், அந்தப் பாடசாலைகளின் எண்ணிக்கையும், அங்கு பிள்ளைகளைக் கற்கத்தூண்டும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றமை கண்கூடு.இந்தக் கல்வியை அவர்கள் நாடுவதன் காரணம் என்ன?அது சரியானவழிமுறைதானா?அதில் உள்ள சாதக, பாதக விடயங்களை அலசுவதே இந்தப் பதிவின் நோக்கம்.உங்கள் விமர்சனங்களை, நிச்சயமாக நான் திறந்தமனதுடன் வரவேற்கின்றேன்.



ஒருநாட்டிலே வாழும் வெளிநாட்டுப் பிரஜைகளின் பிள்ளைகளுக்கு வெளிநாட்டுப் பாடத்திட்டங்களைப் போதிப்பதற்காக இந்த சர்வதேசப் பாடசாலைகள் ஜப்பான்,சுவிற்சலாந்து,துருக்கி போன்ற நாடுகளில் 19 ம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் தோன்றின.இவ்வாறான பாடசாலைகளுக்கென்று பிரத்தியேகமான முறையில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.இலங்கையில் இருந்த வெளிநாட்டு இராஜதந்திர அலுவல்கள்,தூதரகங்களைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் கற்பதற்கென்று இலங்கையின் முதலாவது சர்வதேசப் பாடசாலை 1958 ம் ஆண்டு கொழும்பில் "ஓவெர்செஅ'ச் Cகில்ட்ரென் ஸ்சோல்" என்ற பெயரில் ஆரம்பிக்கப் பட்டது.


ஆரம்பத்தில் ஓரளவிற்கே இருந்த இப்பாடசாலைகள் 1980 இன் பின்னர் வந்த திறந்த பொருளாதாரக் கொள்கையினால் விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கின.தனியார் பாடசாலைகளுக்கும் சர்வதேசப் பாடசாலைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், தனியார் பாடசாலைகள் அரசாங்கப் பாடத்திட்டத்தைப் பின்பற்றிவரும் அதேவேளை சர்வதேசப் பாடசாலைகள் தத்தமது நாட்டுக்குரிய அல்லது பெரும்பாலும் அமெரிக்க, பிரித்தானியப் பாடத்திட்டங்களைப் பின்பற்றுகின்றன. ஆரம்ப காலங்களில் தலைநகரில் மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட சருவதேசப் பாடசாலைகள் இன்று மேல் மாகாணத்தில் 54 பாடசாலைகளாகவும்,மத்திய மாகாணத்தில் 16 ஆகவும்,வடமேல் மாகாணத்தில் 8 ஆகவும் காணப்படும் அதேவேளை வடக்கு,கிழக்குப் பிரதேசத்தில் ஒன்றாகவும் உள்ளது.




சர்வதேசப் பாடசாலைகள், 5 - 14 வயதுப் பிள்ளைகளுக்கான பாடசாலைகளை கல்வி அமைச்சின் அனுமதியின்றி அமைக்கமுடியாதென்ற இலங்கையில் உள்ள கல்விச் சட்டங்களை மீறியே 5- 14 மாணவர்களுக்காகவும் பாடசாலைகளை அமைத்துள்ளன.பெரும்பாலான பாடசாலைகள் ஆங்கில மொழியில் கற்பித்தாலும்,சில பாடசாலைகள் ரஷ்ய,பிரெஞ்சு மொழிகளிலும் கற்பிக்கின்றன. இலங்கைப் பாடசாலைகளின் நோக்கம் சிறந்த இல்ங்கைப் பிரசையையுருவாக்குதல் எனில்,பிரித்தானியப் பாடத்திட்டதுடன செயற்படும் சர்வதேசப் பாடசாலையாயின் சிறந்த பிரித்தனியப் பிரசையையுருவாக்குவதே அதனது நோக்கமாக இருக்கும்.அவ்வாறெனில் பிரித்தானிய சர்வதேசப் பாடசாலையொன்றினால் பிரித்தானிய கலாசாரங்களுடன் பிரித்தானியப் பிரசையாக உருவாக்கப்படும் ஒரு இலங்கை மாணவன் எவ்வாறு இலங்கை சமூகத்துடன் பொருதி வாழமுடியும் என்ற கேள்வி எழுவதைத் தடுக்கமுடியாது.ஏனெனில் பிரித்தானிய சர்வதேசப் பாடசாலையில் கற்கும் எல்லாரும் பிரித்தானியாவில் சென்று வாழப்போவதில்லை.அவ்வாறு சென்றாலும் அவர்கள் பிரித்தானிய சமூகத்தில் ஆங்கிலேயர்களாக ஏற்றுக் கொள்ளப் படப் போவதுமில்லை.இந்நிலையில் சர்வதேசப் பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்கள் இலங்கைப் பிரசையாகவோ அன்றி பிரித்தானியப் பிரசையாகவோ அன்றி எந்தவொரு அடையாளமுமின்றி அந்நியப்படுத்தப்படும் அபாயம் உள்ளது.




சுதந்திரத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட தாய்மொழிக் கல்விக்கொள்கை மத்திய,உயர் தரவர்க்கத்தினருக்கே கல்வி என்று இருந்த நிலையை மாற்றி,ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த சிறந்த,உயர் கல்வியை கிராமப் புறங்களுக்கும் விரிவு படுத்தப் பயன்பட்டது.தாய்மொழிக் கல்வியினால் மாணவர்களின் ஆங்கில அறிவிலே பாதிப்பு ஏற்படுவதாக வாதங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் கல்வித்துறையிலே சமூகநீதியையும் நியாயத்தையும் ஏற்படுத்த அது உதவியது என்றால் அதில் தப்பேதுமில்லை. ஆனால் இவற்றுக்கெல்லாம் ஆப்படிக்கும் வகையில் 1990 களில் ஏற்பட்ட பூகோளமயவாக்கம், இலங்கையில் அறிமுகப்படுத்தப் பட்ட தாராளமயமான பொருளாதாரக்கொள்கை, அதன் பயனாக எழுச்சியுற்ற தனியார் துறையின் அசுர வளர்ச்சி, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் ஆங்கிலமொழிக்களிக்கப்பட்ட முக்கியத்துவம், முன்னணி அரசாங்கப் பாடசாலைகளில் அனுமதி பெறுவதில் எழுந்த சிக்கல்கள், அரசாங்கப் பாடசாலைகளில் ஏற்பட்ட கல்வி, நிர்வாக சீர்கேடுகளினால் ஏற்பட்ட அரசாங்கப் பாடசாலைகளின் தராதர வீழ்ச்சி என்பன ஒருங்கு சேர்ந்து சர்வதேசப் பாடசாலைகளின் பால் மாணவர்களையும், பெற்றோர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது.



சர்வதேசப் பாடசாலைகளின் வளர்ச்சிக்கு தாராளமயமாக்கல் கொள்கையால் நன்மையடைந்த புதிய செல்வந்தவகுப்பினர் தாய்மொழிக் கல்வியைப் புறக்கணித்து,ஆங்கில கல்வியை நாடமுயன்றதும் அவர்களைப் பார்த்து சாதாரண மக்கள் வாயைப் பிளக்கத் தொடங்கியதுவும் காரணமாய் அமைந்தது.அதுமட்டுமலாது தாராளமயமாக்கலால் அதிகரித்த தனியார் மூலதனமும்,அந்நியச் செலாவாணிகளின் உள்வருகையும் வர்த்தகம்,கைத்தொழில்,சுகாதாரம் போன்ற துறைகளிலும் கால்பதித்திருந்த தனியாரை கல்வித்துறையிலும் முதலிடத் தூண்டியது.இதனாலும் சர்வதேசப் பாடசாலைகளின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு தோன்றியது.




சர்வதேசப் பாடசாலைகளில் செல்வந்தவகுப்பினர் ஆங்கிலத்தில் கற்பதால் அவர்களுக்கு தனியார் வேலைவாய்ப்புக்கள் அதிகளவில் கிடைக்க ஏதுவாயமைகின்றது.சர்வதேசப் பாடசாலைகளில் வசூலிக்கப்படும் உயர்ந்த கட்டணத்தையும் பெற்றோர் செலுத்தத் தயாராயிருப்பது அவர்களுக்கு தங்கள் பிள்ளைகளை ஆங்கிலத்தில் கற்பிக்க வேண்டும் என்பதில் அவர்கள் எவ்வளவு அவாவோடு உள்ளனர் என்பதையும் இந்தப் பாடசாலைகளில் கற்பது கௌரவமானது என்ற அவர்களின் சிந்தனையோட்டத்தையும் காட்டிநிற்கின்றது.அத்தோடு பிரபல அரசாங்கப் பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க முயன்று தோற்றுப் போன சம்பவங்களும் அதனால் ஏற்பட்ட மனத் தாக்கங்கள்,"கௌரவக் குறைச்சல்கள்" போன்றனவற்றோடு சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் கற்பதற்கு இவை ஒர் ஆரம்பமாக இவை அமையும் என்ற கருத்தோட்டமும் அமைகின்றது.


தாய்மொழியில் கிடைக்காத அரிய நூல்கள், சஞ்சிகைகள், கற்றல் சாதனங்கள் ஆங்கிலமொழிக் கல்வியில் கிடைக்கின்றன என்ற அவர்களின் வாதமும் மறுதலிக்கப் படமுடியாத ஒன்று.35 சதவீதமான வேலைவாய்ப்புக்கள் ஆங்கில மொழியில் செயற்படும் தனியார்துறையாரிடம் உள்ளதால் ஆங்கில மொழிக்கல்வியில் இயல்பாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு ஈர்ப்பு ஏற்படுகின்றமை தவிர்க்கமுடியாததாகிறது.அதற்காக இலங்கையில் உள்ள 40 இலட்சம் மாணவர்களுக்கும் ஆங்கிலமொழிக் கல்வியை வழங்கினால் அவர்கள் அனைவருக்கும் தனியார்துறை வேலைவாய்ப்பை வழங்குமா என்று குண்டக்க மண்டக்க கேள்வியெல்லாம் கேட்கப் படாது. பூகோளமாக்கப்பட்ட உலகில் ஆங்கிலமே விஞ்ஞான மொழி, இராஜதந்திரமொழி, வர்த்தக மொழி, சர்வதேசத் தொடர்பாடல் மொழி, அறிவு உலகின் எல்லாப் பகுதிகளுக்கும் ஆங்கில மொழியிலேயே வழங்கப்படுகின்றது.ஆக்வே எதிலும் தவிர்க்கமுடியாத ஆங்கிலத்தைக் கற்கவேண்டியதுவும் அதை பெறுவதற்கு சிறந்த வழியாக சர்வதேசப் பாடசாலைகளைக் கருதியதுவும் ஒரு காரணமாக அமைகின்றது.



அத்தோடு இலங்கைப் பல்கலைக் கழகங்களிலும் காலம் தாழ்த்தியே மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்ற்மை, பட்டம் பெறும் போது 25- 26 வயதைத் தொட்டுவிடுகின்றமை, கஸ்ரப்பட்டு அனுமதி பெற்றாலும் சிரேஷ்ட மாணவர்களின் "வதை" எனப் பல பிரச்சினைகள் உள்ளமையினால்,இவற்றைத் தவிர்ப்பதற்குமாய்ப் பலர் சர்வதேசப் படசாலைகளின் இலண்டன் க.பொ.த.(சா/த) மற்றும் (உ/த) போன்றவற்றைக் கற்கின்றனர். மேலே உள்ள பல காரணங்களுக்காக அவர்கள் சர்வதேசப் பாடசாலைகளைத் தெரிவு செய்தாலும் அதிலே உள்ள சமூக ரீதியான பாதகங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஓவர் சீரியஸ் பதிவாய்ப் போச்சுதோ எண்டு இப்பத் தான் யோசிக்கிறன்

Sunday, March 7, 2010

எங்கன்ரை ஊருக்கு கறண்ட் வந்த கதை

இதென்னடா இது அவனவன் சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் ரொக்கட் அனுப்பிற காலத்திலை வந்து நிண்டு கொண்டு கறண்டைக் கண்டு பிடிச்சாலும் பரவாயில்லை, கறண்ட் ஊருக்கை வந்ததையே ஒரு கதையெண்டு கதைக்க வந்திட்டானென்று நினைக்காதையுங்கோ.நாங்களாவது பரவாயில்லை உதையெண்டாலும் கதைக்கிறம்.இண்டைக்கும் கறண்டைக் காணாமல் குப்பி விளக்கிலை படிச்சுக் கொண்டிருக்கிற எங்கடை தம்பி,தங்கச்சிமார் எத்தினை பேர் இருக்கிறார்கள்.கறண்ட் வேண்டாம்.ஆண்டாண்டு காலமாய் ஆண்டு ஆண்டு வந்த எங்கன்றை சந்ததை அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தி,கஞ்சிக்கும் காத்திருக்கிற நிலைமைக்கு மாற்றிவிட்டார்கள்.அந்த தம்பியோ,தங்கச்சியோ நாளைக்கு இதைவிடப் புதுமியாய் கதை சொல்லும் போது நாங்களும் கேட்டு நிற்போம்.



எண்பதுகளில் இனப்பிரச்சினை முனைப்புப் பெறமுன்னர்,எமது ஊர்களிலெல்லாம் இலக்சபானாவில் இருந்து இருபத்து மணித்தியாலக் கறண்ட் இருந்ததாம்.எங்கள் தோட்டங்களுக்கெல்லாம் இரவிலே லைற்(light) வெளிச்சதிலை மோட்டர் பூட்டித் தான் தண்ணி மாறுகின்றனாங்கள் என்று எங்களின் மாமாமார்,ஊரின் அண்ணாமார் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறோம்.அதன்பிறகு இனப்பிரச்சினை முனைப்புப் பெற்றதன் பின்னர் கற்ண்ட் எங்களெல்லாருக்கும் 'கட்' பண்ணப்பட்டது.



அதனால் வீதிகளில் சும்மா நின்ற ரயின் தண்டவாளத்தைப் போன்ற இரும்பாலான கறண்ட் கம்பங்களை எல்லாரும் ஆளுக்காள் பிரட்டி,தேவையான அளவுகளில் வெட்டி வேலிகளூக்கு பொறுப்பான தூணாகவும்,ஆடு மாடு கட்ட கம்பியாகவும் என்று பல வேறு வழிகளில் பயன்படுத்தினார்கள்.வேலியின் மேலும் கீழும் கறண்ட் கம்பியை இழுத்துக்கட்டிய பின் மூரியை(பனம் மட்டை)அதிலே வரிந்தார்கள்.


கறண்ட் போஸ்ற்(post) இலிருந்த கப்பியைக் கழட்டி கிணத்திலே தண்ணி அள்ளப் பாவித்தார்கள்.ஏற்க்னவே கிணத்திலே கப்பி இருந்தவர்களூம்,துலா வைத்திருந்தவர்கள் கூட ஏன் ஓசியிலை கிடக்கிறதை சும்மா ஆரும் அள்ளிக் கொண்டு போகவிடுவானெனென்று மிஞ்சின கொஞ்ச நஞ்ச கப்பிகளையும் கொண்டு போய் வெங்காயக் கொட்டிலின் மூலைக் கைமரங்களிலே பவுத்திரமாகத் தூக்கி வைத்தார்கள்.இப்பிடி கறண்ட் ச்ப்ளை(supply) நிண்ட கையோடையே எங்கடை சனம் ஊரில நேற்று வரை கறண்ட் இருந்ததெண்டதுக்கு ஒரு சாட்சியமும் விடாமல் வழிச்சுத் துடைச்சு எல்லாத்தையும் கலட்டி,புடுங்கி எடுத்துக் கொண்டுத்துகள்.




நாங்களெல்லாம் பிறந்து 13, 14 வருசமாக கறண்டைக் கண்ணாலை கண்டது கூட இல்லை.கறண்ட் எப்பிடியிருக்கும், என்ன செய்யும் எண்டு கூடத் தெரியாத நாங்கள் கறண்டுடன் கற்பனையில் விளையாடினோம்.எங்கண்ரை வீட்டின் வெளி விறாந்தையோடிருந்த சுவிட்சை மேசைக்கு மேலை ஏறி மேல்நோக்கியோ, கீழ் நோக்கியோ போடுறது சரியென்று கூடத் தெரியாமல் ஏதாவது ஒரு பக்கம் தட்டிப் போட்டு "ஆ .... கறண்ட் .. வந்திட்டுதாம்..." எண்டு ஊரிலை எங்களைமாதிரி இருந்த எங்கடை வயசையொத்த குஞ்சு குருமனெல்லாம் விளையாடுவோம்.



வீட்டை கனகாலம் கறண்ட் இல்லாமல் இருந்ததால் பாவிக்காமல் பழுதாய்ப் போன ஒரு ரேடியோவும் இந்தியன் ஆமி தூக்கி எறிந்ததால உடைந்து போயிருந்த ஒரு பெரிய "பொக்ஸ்" ரேடியோவையும் தூக்கி வைத்துக் கொண்டு,எங்கன்றை தலைகளை ரேடியோக்களுக்குப் பின்னால் ஒளித்துக் கொண்டு, நாங்களே பாட்டுப் படிச்சு,நாங்களே மகிழவேண்டிய சூழல் எங்களுக்கு.table fan ஐ எடுத்து அதன் முன் கவரைக் கழட்டி விட்டு நாங்களே கையாலை சுத்தி காத்து வாங்கி விளையாடினோம்.


சீலிங் fan இன் தகடுகள் எங்கள் தோட்டங்களின் வாய்க்கால்கள் உடைப்பெடுக்காமல் இருக்க மடைக்கு அணையாக வைக்கப் பயன்பட்டுது. இப்பிடி ஊரிலுள்ள அனைவரினதும் முந்திப் பாவித்த மின்சார சாதனங்கள் எல்லாம் அவற்றின் சம்சாரமான மின்சாரமில்லாமல் போனதால் தூக்கியெறியவேணடிய நிலைக்குப் பழுதாகிப் போயிருந்தாலும் எல்லாரும் கறண்ட் வந்தால் போட்டுப் பார்த்துட்ட்டுச் செய்வம் எண்டிட்டு வைச்சிருந்தார்கள்.இப்பிடியிருந்த எங்கடை ஊருக்கு கறண்ட் வந்தால் எப்ப்டியிருக்கும்.



யாழ்ப்பாணம் இராணுவத்திடம் வீழ்ந்து 1,2 வருடங்களின் பின்னர் எல்லா இடங்களூக்கெல்லாம் கறண்ட் வழங்கும் வேலைகள் முடுக்கி விடப்பட்டன.அந்த வேலைகள் தொடங்கப்பட்டு 1, 1 1/2 வருடங்களின் பின்னர் திடீரென்று ஒருநாள் இலங்கை மின்சார சபையின் கன்ரரிலே கொங்கீரீற்றாலை அரியப்பட்ட லைற் போஸ்ற்களை கொண்டு வந்து கிறேனாலை இறக்கினார்கள்.ஊரிலை உள்ள எல்லாருக்கும் மின்சாரம் பாய்ஞ்சது போல இருந்தது.



கொண்டு வந்து இறக்கிய மின்சார சபையின் ஊழியர்கள் எல்லாருக்கும் நல்ல மரியாதை.அவர்களுக்கு தேத்தண்ணீ, வடை,விசுக்கோத்து,கல்பணிஸ்,வாழைப்பழம் எண்டு எல்லாம் கொடுத்து உபசரித்தார்கள் ஊரவர்கள்.கவனிப்போ கவனிப்பு அப்படியொரு கவனிப்பு.அவர்கள் அவர்கள் வாழ்க்கையில் அதற்கு முன்னர் அப்படியொரு கவனிப்பை கண்டிருக்க மாட்டடார்கள்.சரி போஸ்றைப் போட்டு விட்டுப் போய்விட்டார்கள். போஸ்ற்றுகள் போட்ட போட்ட படியே போட்ட போட்ட இடத்திலே போட்ட போட்ட படியே மாதக்க் கணக்கிலே இழுபட்டன.



பிறகொருநாள் கொஞ்சப் பேர் வந்து போஸ்ற்றுகளை நடுவதற்கு கிடங்கு கிண்டினார்கள்.மீண்டும் பிரமாதமான் உபசரிப்பு அவர்களூக்கு.மறுபடியும் போய் விட்டார்கள்.மழை வந்து வெள்ளத்தால் நிரவுப் பட்டன கிடங்குகளெல்லாம்.மீண்டும் இடைவெளி.மீண்டும் காலம் கடந்து வந்து அந்தப் போஸ்ற்றுகளை நட்டு விட்டுவிட்டுப் போனார்கள்.நாட்கள் உருண்டன.


கறண்ட் கம்பியிழுக்க காலம் கனியவில்லையெண்டு எங்கள் காத்திருப்பை நீட்டி மேலும் பார்த்திருக்கச் செய்தார்கள்.ஒரு மாதிரி கறண்ட் கம்பி இழுக்கப் பட்டாலும் பிரதான வீதியிளுள்ளவர்களுக்கே முதலில் இணைப்பு வழங்கப்பட்டதால் துணை வீதியொன்றிலிருந்த எங்களுக்கு கைக்கெட்டிய கறண்ட் வாய்க்கெட்டாமல் போனது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.


இந்தக் கறண்ட் கூட ஒன்றும் இருபத்துமணித்தியாலமும் தொடர்ச்சியாக வருகின்ற கறண்ட் இல்லை.எங்களூருக்கும் எங்கள் அயலூர்கள் சில்வற்றுக்கும் சேர்த்து ஒரு ஜெனெரேற்றரை எங்களூரிலே பொருத்தி அதிலிருந்து எல்லா ஊர்களுக்கும் மின்சாரத்தை ஒன்றைவிட்ட ஒரு நாள் இரவு ஆறு மணியிலிருந்து பத்து மணி வரையும் காலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரையும் ஏதோ கறண்ட் என்ற பெயரில் காண்பித்தார்கள்.


பிரதான வீதியோடிருந்த சிவா அண்ணை என்பவரின் வீட்டிலிருந்து அவரின் வீட்டில் உள்ள ஒரு கோல்டரில்(holder) ஒரு அடப்ரரைக்(adapator) கொளுவி அதன் மற்ற முனையில் இன்னுமொரு அடப்ரரைக் கொளுவி எங்கள் வீட்டுக் ஹோல்டரிலே கொண்டு வந்து சொருகினோம்.எங்கள் வீட்டிலே லைற் எரிந்த அந்த அருமையான நேரம் இன்றும் என் கண் முன்னே நிற்கின்றது. நாங்க்ள் போட்ட கூச்சல்களூம்,துள்ளல்களூம் கும்மாளங்களும் பக்கத்து வீட்டுக் காரர்களுக்கெல்லாம் சொல்லாமலே காட்டிக் கொடுத்தது எங்கள் வீட்டிலே கறண்ட் வந்த சேதியை.


அடுத்த நாள் பள்ளிக் கூடத்திலும் ரியூசனிலும் காணூமிடமெங்கும் நண்பர்களிடமெல்லாரிடமும் எங்களுக்கு கறண்ட் வந்த சேதியை சொல்லி மகிழ்ந்ததையெ்ல்லாம் நினைக்க இன்று சிரிப்பாக இருக்கினறது.பின்னர் சிறிது காலத்தின் பின்னர் எங்களுக்கும் நேரடி இணைப்புக் கிடைத்தது.இணைப்புப் பெறாமல் பலர் சட்டவிரோதமாக கறண்ட் கம்பியிலேயே ஒரு கொக்கைத்தடியாலை பக்குவமாகக் வயரைக் கொழுவி direct ஆக கறண்ட் எடுக்கத் தொடங்கினதாலை இரவிலையெல்லாம பல்ப்(bulb) இன் இழை தணல் மாதிரி சிவப்பாத் தான் எரியும்.ஆகக் கூடின பவர் அதுக்கு அவ்வளவு தான்.வெளிச்சமே இருக்காது.ஏனாடா இதுக்கு கறண்டை தருவதை விட தராமலே இருந்திருக்கலாமே ஏன்று கூட யோசிக்கத் தோன்றும்.



ஒன்று இரண்டு வருடங்களின் பின்னர் 24 மணித்தியாலக் க்றண்டும் வந்தது.24 மணித்தியாலக் கறண்ட் வந்த செய்தி கேட்டு ரியூசனாலே சைக்கிளில் கூவிச் சென்று சுவிட்சைப் போட்டுப் பார்த்ததெல்லாம் பசுமரத்தாணி மாதிரி மனசிலை பதிஞ்சிருக்குது.ஆனாலும் இன்றுவரைக்கும் 24 மணித்தியாலம் என்று சொன்னாலும் கூட இரவிலே மின்னி மின்னி எரியும் அல்லது இரவிலே 'கட்' ப்ண்ணுப்படும்.


ஆனால் ஐஞ்சு நிமிசம் கறண்ட் போனாலே அஸ்ஸு, புஸ்ஸூ, ஐயோ என்று என்று a/c க்காகவும் serial பாக்கிற பொம்பிளையள் கத்திறதியும் பார்க்கேக்கை அவையெளெல்லாரையும் எங்கடை சன பட்ட, படுகிற கஸ்ரங்களையெல்லாம் கொண்டு போய்க் காட்ட வேணும் மாதிரிக் கிடக்குது.எங்கன்ரை எல்லாச்சனமும் எப்பதான் கறண்ட் மாதிரி எல்லா வசதியும் கிடைச்சு சுயமா சுதந்திரமா நிம்மதியா வாழுறது எண்டு தெரியாமல் கிடக்குது

Friday, February 12, 2010

தலைநகரின் கண்டறியாத கலியாண வீடுகள்

காதலர் தின சிறப்புப் பதிவாக காதலுக்கு அடுத்த நிலையான திருமணம் அல்லது கலியாணம் என்பது, இன்றைய அவசரமான,காசு கொட்டிக்கிடக்கும் உலகில் எவ்வாறு செய்யப்படுகின்றது அல்லது அது செய்யப்படுவதன் உண்மையான நோக்கத்தை அடைகின்றதா என்பது பற்றி அலசுவதே இந்தப் பதிவு.

எமது கலாசாரத்துக்குள்ளாக அமையின் பொதுவாகவே வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை தான் கிடைக்கப் போகும் ஆயிரம் காலத்துப் பயிரான திருமணங்களை,இன்றைய காலகட்டங்களில், தற்போதைய முறைகளில் செய்வதால்,திருமணச் சடங்குகளில் கிடைக்கவேண்டிய அந்த சின்னச்சின்ன சந்தோசங்கள் எங்களுக்குக் கிடக்கின்றனவா என்றால் இல்லை என்பதே பொதுவான கருத்து.ஊர்களில் சுற்றம்,முற்றம் மற்றும் ஊரவர் என எல்லா உறவுகளின் பங்குபற்றுதலுடன் குறைந்த செலவில் செய்யப்படும் திருமணங்களில் கிடைக்கும் சின்னசின்ன சந்தோசங்கள் தலைநகரில் காசைக் கொட்டிக் கொடுத்தும் கிடைப்பதில்லை என்ற ஆதங்கம் பலரிடம் உள்ளது.



ஊர்களிலெல்லாம் கலியாண வீடென்றால் பொன்னுருக்கலுக்கு(மணமகளின் தாலி செய்வதற்குரிய தங்கத்தை மணமகன் வீட்டில் உருக்கும் சம்பிரதாய சடங்கு)ஒன்று, இரண்டு நாட்களுக்கு முதல் தொடங்கி,கலியாணவீடு முடிந்து இரண்டு,மூன்று நாள் வரைக்கும் அந்த வீடும், ஊரும் திருவிழாக் கோலத்துடன் தான் காட்சியளிக்கும்.திருமணத்திற்கு இரண்டு,மூன்று வாரங்களுக்கு முதலேயே வீட்டை துப்பரவாக்கி,வர்ணம்(paint) தீட்டி மிகவும் அழகாக வைத்திருப்பார்கள்.


ஊர்ப் பெண்களெல்லாம் 2, 3 நாளுக்கு முதலிருந்தே பின்னேரப் பொழுதுகளில் அந்த திருமண வீடுகளுக்குச் சென்று தட்டை வடை, பயற்றம் பணியாரம், சீனி அரிதாரம், சிப்பி, சோகி, சில்லறைப் பலகாரம் உட்பட பலவேறு பலகாரங்களையும், இனிப்புக்கள், சிற்றுண்டிகளையும் செய்யத்தொடங்கிவிடுவார்கள்.பெடியளும் அப்பப்ப போய் உதவிகள் செய்தாலும் திருமணத்திற்கு முதல்நாள் செய்யும் சோடனை(டெcஒரடிஒன்) வேலைகளுக்குத் தான் பிரதானமாக செல்வாங்கள்.

ஊரில் உள்ள 30,40 பெடியளும் சிறுசிறு குழுவாகப் பிரிந்து ஒவ்வொரு சோடனை வேலைகளிலும் ஈடுபட்டுக் கொள்ளுவார்கள்.ஒரு படை மஞ்சள்,வெள்ளை நிறத் தாள்களை(டிச்சுஎ)எட்டாக,பதினாறாக மடித்து அதனை,நூலொன்றைப் பாவித்து வெட்டிக் கொண்டிருக்கும்.மறுபடையோ நூலொன்றினில் கோதுமை மாவினுள் நீரைவிட்டுக் காய்ச்சிய பசையொன்றினைப் பூசிக்கொண்டிருக்கும்.பிறிதொரு படை எட்டாக, பதினாறாக மடிக்கப்பட்டு, வெட்டப்பட்ட ரிஷுவை ஒவ்வொன்றாக கலைத்துக் கொடுத்துக் கொண்டிருக்க,இன்னும் சில அவற்றை பசை பூசப்பட்ட நூலினில் ஒட்டிக் கொண்டிருக்கும்.வேறு சிலர் வீட்டுக்குள் மணமக்களின் பெயர்களையும், நல்வரவு, திருமண வாழ்த்து, இரண்டு இணைக்கப்பட இதயங்களினைத் துளைத்துச் செல்லும் அம்பினை ஒத்த காதலின் சின்னத்தையும் ரெஜிபோமில் வேலைப்பாடுகளுடன் வெட்டி ஒட்டிக்கொண்டிருப்பார்கள்.



மற்றும் சிலர் திருமண வீட்டு வாசலில் கட்டுவதற்கு, வீட்டுக்கு பின்னாலிருக்கும் வளவினில் வளர்ந்து நிற்கும் வாழைகளிரண்டை வெட்டிக் கொண்டுவந்து, வீட்டு வாசலிலுள்ள தூணோடு சேர்த்துக் கட்டிக்கொண்டிருப்பார்கள்.பெரும்பாலும் குழை போட்டுப் பழுத்த வாழையையே கட்டினாலும் சிலவேளைகளில் அது கிடைக்காதவிடத்து சந்தையிலிருந்து வாங்கிக் கொண்டுவந்த,நன்கு மஞ்சள் நிறத்தில் பழுத்த வாழைக்குலையைத் தூக்கி,கட்டப்பட்ட அந்த வாழைதான் இந்தக்குலையைப் போட்டது போல இருக்குமாறு மிகச்சாமர்த்தியமாகக் கட்டி வாழைக்குலையை வாழை தாங்குவதற்காக, வாழையில் ஒரு பூவரசங் கட்டையை இணக்கிச்(செய்து)சொருகி அதில் வாழைக்குலையைத் தாங்கவிடுவார்கள்.மேலும் அழகை மெருகூட்டுவதற்காக தாங்கள் இளநீரைக்குடித்த பின்னர் வெறும் இளநீர்க் கோம்பைகளை வாழைக்குலையின் அடியிலே சொருகி விடுவார்கள்.

ஒட்டப்பட்ட ரிஷு காய்ந்த பின்னர் அதை ஏதாவது மரங்கள்,மின்கம்பங்களிடையே கட்டப்பட்ட கயிற்றுக்குக் குறுக்காக இரண்டு கயிறுகளையும் இணைக்கும் விதமாக கட்டுவார்கள்.திருமணத்திற்கென்று செய்த பலகாரங்களும் தேத்தண்ணியும் வேலைநடந்து கொண்டிருக்கும்போது பெடியளுக்குப் படைக்கப்படும்.பெடியளெல்லாருக்கும் இரவுச் சாப்பாடும் அங்கே தான்.சிலர் அதிகாலையில் வந்து பெண்களுக்கு சமையலின் போது சோற்று அண்டா,கறிக் கடாரம் என்பவற்றை இறக்கி ஏற்றுவதற்கு உதவி செய்வார்கள்.மற்ற எல்லாப் பெடியளும் திருமணநேரத்திற்கு முன்னரே வேட்டி கட்டி,பவுடர் போட்டு,தலையை மேவி இழுத்து என்று அப்பிடி இப்பிடியாக ஒருமாதிரி வெளிக்கிட்ட்டுப் போய் உதவி ஒத்தாசையாக இருப்பாங்கள்.

எப்ப தாலியைக் கட்டுவாங்கள்,எப்ப தாங்கள் ஒரு வெட்டு வெட்டலாம்(சாப்பிடுதல்) என்று வாறதுகள் தாலியைக் கட்டியவுடனேயே பந்தியில் சென்று குந்தியவுடன் ஒருவன் வாழையிலை வைக்க, மற்றவன் சோற்றைப் போட, கொஞ்சப்பேர் ஒவ்வொரு கறியாக வைக்க, பிறிதொருவன் அப்பளம், மிளகாய் வைக்க மேலுமொருவன் வடை பரிமாற, இன்னுமொருவன் தண்ணீரை டம்ளரில்(தண்ணீர் குவளை)ஊற்ற என்று எவரதும் நேரடி வழிகாட்டுதலின்றி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை மிகச் சுறுசுறுப்பாகச் செய்வாங்கள்."ஆ.. இஞ்சை ஐயாவுக்கு சோறு முடிஞ்சுது.. சோத்தை வை.. சோறு வைச்சாக்களைப் பாத்து கறியளை வை.." என்று காலில் சக்கரம் பூட்டியது மாதிரி ஓடித் திரிவாங்கள்.இரண்டு, மூன்று முறை சோத்தை போட்டுக் குழைச்சடிச்சு, அதற்குப் பிறகு பாயசத்தையும் விட்டு வைக்காமல் அதையும் விட்டு வழிச்சுத்துடைச்சு விட்டுச் சென்றவர்களின் வாழையிலைகளையெல்லாம் அள்ளி பந்தி நடந்த மண்டபத்தைக் கூட்டுவதோடு ஆம்பிளைப் பந்தி(ஆண்களின் சாப்பாட்டு வரிசை) முடிய அடுத்ததாக பொம்பிளைப் பந்தி ஆரம்பமாகும்.

தங்களுக்கு வேண்டப்பட்ட பெண்தோழிகளுக்கும்,"இது தேவையோ?", "அது தேவையோ?" என்று வழிந்து,வழிந்து கேட்டு,அவர்கள் ஒன்றும் கேட்காத போதும் தாங்களே 2,3 வடைகளைத்தூக்கி வாழையிலையில் சத்தம்போடாமல் வைத்துவிட்டு,அவர்கள் அந்த வடைகளைச் சாப்பிடுகிறார்களா அல்லது அவர்கள் அந்த வடைகளைச் சாப்பிடாமல் வாழையிலையோடு கொண்டு போய் எறிகின்றார்களா என்று எறியும்வரை பார்த்துக் கொண்டிருக்கும் தாராள மனப்பாங்குள்ளவர்களும் இருப்பார்கள்.இதன் பின்னர் படமெடுப்புக்கள்,பின்னேர திருமணப்பதிவு(Registration) என மிகுதி நிகழ்ச்சிகளும் களை கட்டும்.


இவ்வாறெல்லாம் எத்தனை சின்னச் சின்ன சந்தோசங்கள் எத்தனை இலட்சத்தைக் கொழும்பிலே கொட்டி,ஹோலிலே கலியாணத்தை முடித்தாலும் துளி மருந்துக்கும் கிடப்பதில்லை.இரவிலே ஒரு மண்டபத்திலே திருமணம் நடைபெறும்.அவனவன் தாலிகட்டி முடிந்த பின்னர் சரியாக சாப்பாட்டுக்கு ஐந்து நிமிஷத்துக்கு முதல் காரிலோ ஏதாவது வாகனத்திலோ வருவான்.Busy(வேளைப் பளு)ஆன ஆள் மாதிரி ஒரு இடத்திலும் இருக்காமல் அங்கையும் இங்கையும் ஓடித்திரிந்து 2,3 பேருடன் கதைப்பான்.தானே போட்டுச்(self Service) சாப்பிடுவான்.தம்பதியினருக்கு பரிசுப்பொருள்(Gift) கொடுப்பான்.சேர்ந்து நின்று படம் எடுப்பான்.மாப்பிளையிடம் சொல்லுவான்,"மச்சான் அவசரமாக ஒரு வேலை இருக்கு..நான் வாறன்.." என்று சொல்லிவிட்டு ஒரு 30,40 நிமிடத்தில் பறந்துவிடுவான்.இத்தனைக்கும் ஒரு தலைக்கு சாப்பாடுக்கு,இத்தனை ஆயிரம் என்று சொல்லி ஒரு 400,500 பேருக்கு என்று காசைக் கொட்டிக் கொடுக்கிறார்கள்.சாப்பாட்டுக்கு, மண்டபத்துக்கு, மணமகள்,மணமகன் அலங்காரம், மற்றும் இன்ன பிற செலவுகள் என்று காசை வாரிக் கொடுத்தும் அதற்குரிய பலாபலன் கிடைக்காமலையே திருமணங்கள் முடிவது உண்மையில் வேதனைக்குரியதே.

Thursday, February 4, 2010

மோதகமும் பல்லுக் கொழுக்கட்டையும்

(கலப்படமேயில்லாத கற்பனைக் கதையான இதிலே வரும் பெயர்களையோ, ஊர்களையோ அல்லது வேறு சம்பவங்களையோ உங்கள் மூளையை ஆட்டிக் கீட்டி,கசக்கிப் பிழிந்து யோசித்து, வேறு நபர்களுடனோ, இடங்களுடனோ அல்லது சம்பவங்களுடனோ சம்பந்தப்படுத்தி யோசித்தால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல)


இலந்தையூர் என்ற பெயருக்கேற்றாற் போல அந்த ஊரிலே, கணிசமானவளவு இலந்தை மரங்கள் பூத்துக்குலுங்கி, காய்த்து, சிறுவர்களிடம் கல்லெறியும் வாங்கிக் கொண்டிருக்கின்றன.வானம்பார்த்த பூமியான அந்த ஊரிலே கோடைகாலத்து கொதிக்கும் வெயிலின்,தகிக்கும் தணலைத் தாங்கித், தண்மையைத் தம்மூர் மக்களுக்காக வழங்கும் தியாகச் செம்மல்களாக ஊரின் நடுவேயுள்ள ஆலமரமும் வேறு சில பெருமரங்களும்.ஊரை தொழில்ரீதியாக எடுத்துப்பார்த்தால் பெரும் போகம் ,சிறுபோகம் என இரு போகங்களிலும் நெல்பயிரிடும் பெரும்பான்மை விவசாயிகளும், வியாபாரம் செய்யும் சிலரும்,உத்தியோகம் பார்க்கும் மிகுதியினருமாக அடங்கி விடுவார்கள்.


இயற்கையாலும், அரசாங்கங்களாலும், அரச உயரதிகாரிகளாலும், நிறுவனங்களாலும் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் அவ்வளவாகப் பூர்த்தி செய்யப்படாவிடாலும் அவர்கள் வாழ்க்கையும் ஏதோ ஓடுகிறது அல்லது ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது ஓட்டத் தம்மைப் பழக்கிக் கொண்டுவிட்டார்கள்.


என்னதான் இல்லாத போதும் எமது சமுதாயத்தில் வேரோடிச், சமூகத்தை செல்லரித்துக் கொண்டிருக்கும் சாதிப் பிரச்சினை மட்டும் இங்கும் இருக்கின்றது. உடையார், படையார், சடையார் என்று மூன்று சாதியினர் ஊரில் உள்ளனர்.இதில் பெரும்பான்மையாக உடையார் ஊரின் சனத்தொகையின் 70 - 75 % ஆக உள்ளனர். மிகுதியினரை எடுத்தால் படையார் 15 - 20 % உம் சடையார் அண்ணளவாக 10% உம் உள்ளனர்.படையார் ஊரின் வடக்கு மற்றும் கிழக்கின் கணிசமான இடங்களிலும், இலந்தையூரின் மத்தி மற்றும் மேற்குப் பகுதிகளிலும் செறிந்து வாழ,சடையார் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளிலும் வசிக்கின்றனர்.அந்தந்தப் பகுதிகளில் அவரவர் சாதிகளுக்குப் பிரத்தியேகமான சில தெய்வங்களின் கோவில்களும் உள்ளன. ஏனைய முழு இடங்களிலும் உடையார் தான் செறிந்து வாழ்(ஆள்)கின்றனர்.




யார் ஊருக்கு முதலில் வந்தது என்பதில் தொடங்கி பலவிடயங்களில் உடையாருக்கும் படையாருக்கும் இடையில் அடிக்கடி சண்டைகள் வரும்.ஆனால் நல்ல வேளையாக இதுவரைக்கும் உயிரிழப்புக்கள் வரை சென்றதில்லை.உடையார் அடிப்பார்கள்.பதிலுக்கு படையாரும் திருப்பி அடிப்பார்கள்.அடிவாங்கிய உடையார் மீண்டும் வந்து அடிப்பார்கள்.இவ்வாறு இவை நீண்டு கொண்டே செல்லும்.இதனாலும் உழைப்பதற்காகவும் படையாரில் பலர் அயலூருக்குப் பஞ்சம் பிழைக்கச் சென்றிருந்தனர்.


கடைசியாகவும் இதே போல் படையார் சாதிப் பெண்பிள்ளையொருத்தியுடன் உடையார் சாதிப் பெடியங்கள் சேட்டை விடப் போனபோது படையார் சாதிப் பெடியங்கள் அடித்துப் போட்டார்கள்.இதனால் இலந்தையூரின் அயலூர்க்காரர்களிடம் பொல்லுகள், கொட்டன்கள் போன்ற ஆயுதங்களையும் மற்றும் படையார் சாதிப் பெடியங்கள் எங்கேயெல்லாம் ஒளித்திருக்கிறார்கள் என்பது போன்ற புலனாய்வுத் தகவல்களையும் பெற்றுப், படையாருக்கு நல்ல சாத்துக் கொடுத்து விட்டார்கள் உடையார்கள்.படையாருக்கு எழும்பி நிற்கமுடியாத மரண அடிதான்.

*************************

உடையாரில் மயில்வாகனம் ராஜேந்திரன் அல்லது "ம.ராஜே"ந்திரன் அண்ணை, பொன்னையா சரத்குமார் அல்லது "பொன்.சரத்குமார்" அண்ணையும் "சுனில்" அண்ணை ஆகியோரும் படையாரில் "ஞானசம்பந்தமண்ணை", "கணேஷன்" அண்ணை,"தேவேந்திரன்" அண்ணை மற்றும் "பாலமுரளிதரன்" அண்ணையும்,சடையாரில் "ரவூ"சீலன் அண்ணையும் கொஞ்சம் செல்வாக்கானவர்கள் தான்.

***************************
கோயில்களில் விசேட பூசைகளின் போது அடியார்களுக்கு மோதகம்,பல்லுக் கொழுக்கட்டை என்பன வழங்கப்படுவதுண்டு.இந்த இரண்டு பிரசாதங்களையும் செய்வதில் உடையார் சாதியைச் சேர்ந்த ம.ராஜேந்திரன் அண்ணையும் பொன்.சரத்குமார் அண்ணையும் பெயர் போனவர்களாயினும் பல்லுக் கொழுக்கட்டை என்று வந்தால் ராஜேந்திரன் அண்ணையின் கைவரிசையும், மோதகம் என்று சொன்னால் சரத்குமாரின் மோதகத்தின் ருசியும் பேசப்படுபவை தான்.



மோதகமும் கொழுக்கட்டையும் வெளித்தோற்றத்தில் வேறுபட்டிருந்தபோதும் அவற்றினுள்ளே உள்ள "உள்ளுடன்"(மோதகம்,கொழுக்கட்டையினுள்ளே வைக்கப்படும் இனிப்புக் கலைவை)ஒன்றே.பயற்றை, குண்டுகளாலழிந்த பூமியிலிருந்து வரும் கந்தகப் புகையைப் போன்ற சுடுநீராவியைச் செலுத்தி உயிருடன் கொன்று(அவித்து),தேங்காயை 48,72 பல்குழல்களால்(திருவலகை)தாக்கிக் கொன்று, அந்த சடலங்களையும்(தேங்காய்ப்பூ),அவர்களின் இரத்தத்தைப் பிழிந்து(தேங்காய்ப்பால்) அதனுடன் சீனியும் சேர்த்து, சிறிது துவைத்தெடுத்துத் தான் உள்ளுடன் தயாரிக்கப்படும்.பின்னர் அரிசிமாவை எடுத்து, சுடுநீர் விட்டுக் குழைத்து, அதனை வட்டமாகத் தட்டி, அதனுள் உள்ளுடனை வைத்து,சற்று நீட்டாகத் தட்டி,அவை சந்திக்கும் இடத்தில் பல்லுப் போல் கையால் செய்வதை பல்லுக் கொழுக்கட்டையென்றும்,உருண்டையாக செய்வதை மோதகம் என்றும் அழைப்பார்கள்.

*****************************

ஒருமுறை ராஜேந்திரன் அண்ணை செய்கிற பல்லுக்கொழுக்கட்டையோ அல்லது சரத்குமார் அண்ணை செய்கிற மோதகமோ நல்லது என்று ஒரு கௌரவப் பிரச்சினையொன்று வந்துவிட்டது.தேவேந்திரம் அண்ணைக்கும்,பாலமுரளிதரன் அண்ணைக்கும் ராஜேந்திரன் அண்ணையின் பல்லுக்கொழுக்கட்டை பிடித்துப் போவதற்கு விசேடமாக ஒரு காரணமும் இல்லாவிட்டாலும் அவரின் செல்வாக்குக் காரணமாக தமது இருப்புக்கு ஏதேனும் அச்சுறுத்தல் வந்துவிடுமோ என்றும், அவர் வாங்கிக்கொடுக்கிற அரைப் போத்தல் கள்ளையும் பீடிக் கட்டையும் நன்றி உணர்வோடு நினைத்து, "ராசேந்திரம் அண்ணை உங்கடை பல்லுக் கொழுக்கட்டை தான் பெஸ்ட்" என்றனர்.



சுனில் அண்ணையும் ரவூசீலன் அண்ணையும் சரத்குமார் அண்ணையின் மோதகத்துக்கு ருசி கூட என்றனர்.கணேஷன் அண்ணைக்கும் ஞானசம்பந்தம் அண்ணைக்கும் மோதகமோ,பல்லுக்கொழுக்கட்டையோ நல்லது என்று முடிவெடுப்பதில் கொஞ்சம் சிக்கல்.இறுதியில் இவ்வளவு நாளும் பல்லுக்கொழுக்கட்டை சாப்பிட்டு அலுத்துவிட்டிருந்ததனாலும்,வெளியூரில் இருந்த படையார் சாதியினப் பெடியங்கள் இந்தமுறை மோதகத்தின்றை ருசியைப் பாருங்கோவன் என்று கடிதம் போட்டிருந்ததாலும் ஒரு "நம்பிக்கயான மாற்றமாக" மோதகம் நல்லது என்று சொல்லி சரத்குமாரண்ணையின் மோதகத்தை தூக்கிப் பிடிக்க ஆயத்தமாகினர்.

***************************

இப்பிடி ஆள் ஆளுக்கு கொஞ்சம் ஊரில் செல்வாக்கான தலைகளெல்லாம் அங்கும் இங்கும் பிரிந்து நின்றதால் ஊராருக்கு, மோதகமோ கொழுக்கட்டையோ நல்லது என்று தெரிவதில் குழப்பம்.இதனால் கட்டாக்காலி கால்நடைகள் வயலுக்குள் புகுந்து சேதாரம் விளைவித்த பிரச்சினை முதல் பக்கத்து வீட்டுக்காரனுடன் ஓடிய கந்தசாமி பெண்சாதியின் கேஸ் வரைக்கும் விசாரித்து தீர்ப்புச் சொல்லும் ஊரின் மணியகாரரான(பஞ்சாயத்து தலைவர் போன்ற ஒரு ஊர்த்த்லைவரின் பதவி) தயானந்தம் அண்ணை பஞ்சாயத்தைக் கூட்டினார்.




பஞ்சாயத்தும் கூடியாச்சுது.தயானந்தம் அண்ணை பட்டு வேட்டியை மடிச்சுக் கட்டிக் கொண்டு,வெற்றிலை பாக்கை மென்றபின்னர், வெள்ளிச் செம்பிலிருந்த தண்ணியை கொஞ்சம் ஊற்றி வாயைக் கொப்பளித்துக் கொண்டே, தோளில் இருந்த சால்வையை எடுத்து உதறி மீண்டும் போட்டுக் கொண்டு,"ஏனப்பா பதினெட்டுப்பட்டி சனமும் வந்தாச்சுதா? பிறகு ராமசாமி வரேல்லை.கந்த சாமி வரேல்லை என்று சொல்லக் கூடாது.ஒருவன் வந்தால் அப்பிடியே கப்புன்னு பிடிச்சுக்கணும்.தெரியுதா?" என்று வடிவேலு பாணியில் சொல்லிக் கொண்டே,பஞ்சாயத்தைத் தொடக்கி,பஞ்சாயத்திலே பிரச்சினையை விளக்கினார்.இப்போது உங்களுக்கு பல்லுக் கொழுக்கட்டை பிடித்திருந்தால் கொழுக்கட்டை என்ற போதும், மோதகம் பிடித்திருந்தால் மோதகம் எனும் போது கையை உயர்த்துமாறும் கேட்டுக்கொண்டார்.


படையார் சாதியும் சடையார் சாதியும் பல்லுகொழுக்கட்டை அலுத்திருந்த காரணத்தினால் மோதகத்திற்கு கையை உயர்த்தினர்.உடையார் சாதியில் பெரும்பாலானோர் சரத்குமார் அண்ணைக்கும் ஞானசம்பந்தம் அண்ணைக்கும் இடையே, படையார்களின் பகுதியிலுள்ள அவர்களின் கோவில்களில் மோதகம் பிடிக்கும் வேலையை அவர்களிடமே விட்டுத்தந்து,அவர்களே தங்களை சுயநிர்ணயம் செய்து, சுயமாக மோதகம் பிடிக்க அனுமதித்தல் என்பது போன்றதொரு ஒரு ரகசிய உடன்பாடு உள்ளதாக தவறாகக் கற்பிதம் செய்துகொண்டு,கொழுக்கட்டைக்கு கை உயர்த்தினார்கள். தயானந்தம் அண்ணை கைகளை எண்ணி, 50 % மேற்பட்டோர் கொழுக்கட்டையே நல்லது என்று தீர்மானித்துள்ளதாகக் கூறினார்.சுனில் அண்ணை கொழுக்கட்டைக்கு ஆதரவான உடையாரில் சிலர் இரண்டு கையையும் உயர்த்தி வாக்கு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறினாலும் தயானந்தம் அண்ணைக்கோ,சனத்துக்கோ கொழுக்கட்டையின் ருசி பற்றியதான் மக்கள் தீர்ப்பில் அவ்வளவாக சந்தேகம் வரவில்லை.


கொழுக்கட்டை நல்லதென்றாலென்ன மோதகம் ருசியென்றாலென்ன எமக்குப் பிரச்சினையில்லை என்றிருந்த படையார் சாதியினர் தாம் ஆதரித்த மோதகம் நல்லதென்று தெரிவுசெய்யப்படவில்லையாயினும், தாங்கள் ஓரளவாவது ஒற்றுமையாக கொழுக்கட்டை பிடிக்கவில்லையென்று சொன்னதையும், என்ன தான் இருந்தாலும் மோதகமும் கொழுக்கட்டையும் ஒன்றே எனத் தாம் பகுத்தறிந்து கொண்டதையுமிட்டு திருப்திப் பட்டுக் கொண்டே பஞ்சாயத்த்தை விட்டுச் சென்றனர்.

Sunday, January 24, 2010

நான் கண்ட சுனாமி பகுதி 2

கடந்த பதிவிலே நான் சனத்துக்குள்ளாலே கஸ்ரப்பட்டு கடலுக்கண்மையிலிருந்த எமது தோட்டத்தை அடைந்ததாகக் கூறி அதிலே விட்டுச் சென்றிருந்தேன்.வாசிக்காதவர்கள்
http://vadaliyooraan.blogspot.com/2010/01/blog-post_23.htmlஐ சொடுக்கிப் பாருங்கள்.இன்று அதிலிருந்து தொடர்ந்து செல்கின்றேன்.

போய்ப் பார்த்தால் தோட்டத்துக்கை கடல்த் தண்ணி வந்து,வடிந்து போயிருந்தது. பயம் என்னை மேலும் ஒரு இறுக்கு இறுக்கியது.ஓடிப் போய் கிணத்தை எட்டிப் பார்க்க மனம் சொல்லியது. நான் கடவுளிடம் வேண்டியபடியே கிணத்துக்கை எதுவும் இருக்கவில்லை.எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை.கொஞ்ச நேரம் கிணத்துக் கட்டிலை இருந்து யோசிச்சுப் போட்டு,சரி மற்ற தோட்டங்களுக்குப் போய்ப் பார்ப்பம் எண்டு சைக்கிளையும் எடுத்து உழக்கிக் கொண்டு போய் வல்லூட்டி, ஆவலம்பிட்டி, பருத்தியோலைப்(முதலிரண்டும் தோட்டங்களினதும் கடைசி காணியினதும் பெயர்)பக்கமாப் போனேன்.எங்கும் இல்லை.



ஐந்தும் கெட்டு,அறிவும் கெட்டது போல சைக்கிள் போன பாட்டிலை உழக்கிக் கொண்டு வந்து வீட்டை வந்தால் வீட்டை மூண்டும் நிக்குதுகள்.குப்பை கூழங்களை,வள்ளங்களை அள்ளியவாறு பனையளவு எழும்பி வந்த அலை பார்த்தவுடனேயே பெட்டியள்,மம்பெட்டியளைப் போட்டிட்டு இவையள் மூன்று பேர் உட்பட தோட்டத்துக்கை நின்ற எல்லாச்சனமுமே ஒடி தப்பிவந்திட்டுதுகள்.கடலிலிருந்து ஒன்று,ஒன்றரை மீற்றர் உயரமான கடற்கரை வீதியும் முருகைக் கற்களுமே மற்ற இடங்களுடன் ஒப்பிடும் போது பெரியளவு இழப்புகளிலிருந்து எம்மயலூரைக் காப்பாற்றியிருந்தது.


ஒரு சில உயிரிழப்புக்களும் கரையிலிருந்த வள்ளங்களின் அழிவு,வீடுகள், சொத்துக்களின் சேதம், தோட்டங்களினுள் உப்புநீர் புகுந்து பயிரிடமுடியாமல் போனமை என்று மற்ற இடங்களுடன் ஒப்பிடும் போது குறைவாகவே இழப்புக்கள் ஏற்பட்டன.ஆனால் எம்மயலூர் மக்கள் வாழ்வில் என்றும் எதிர்பார்க்காதவாறு திடீரென்று கடல் ஊரினுள் வந்த பயத்தாலும்,தமது வீடுகள் சிதைந்து சின்னாபின்னமாகியிருந்ததாலும் எம்மூர்ப் பாடசாலைகளிலும் தஞ்சம் கோரியிருந்தனர்.அவர்களைப் பராமரிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு எம்மவர் தோள்களில் விழுந்திருந்தது.



நொடிப் பொழுதில் அனைவரும் படையணிகளாகப் பிரிந்தனர்.களத்தில் குதித்தனர்.ஒரு படைய்ணி கடற்கரைக்கு செல்லும் வீதியை மறித்து,"புதினம்" பார்க்கப் போகிறோம் என்று சொல்லிக் களவிலீடுபட முனைந்த கும்பல்களைத் தடுத்தது.மற்றைய படை ஊரவர்களிடம் காசு சேர்த்து,அத்தியாவசியப் பொருட்கள் வாங்கப் புறப்பட்டது.பெண்கள் படையணியோ சமைக்க,அதற்கு உதவி ஒத்தாசையாக இன்னொரு படையணி களத்தில் குதித்தது.இன்னும் ஒன்று சம்பவ இடத்தில் மீட்புப் பணியிலும் மற்றுமொன்று பாடசாலைக்குச் சென்று அவர்களின் உடனடித் தேவைகளைப் பார்த்துக் கொண்டது.அரச, அரச சார்பற்ற உதவிகள் கிடைத்த மூன்றாம் நாள்வரை முழுக்க முழுக்க எம்மூரவர்களாலேயே அவர்கள் பராமரிக்கப் பட்டிருந்தன்ர்.



எது எப்பிடியோ இந்த உலகம் முழுக்க அழியாத வடுக்களை ஏற்படுத்திய சுனாமி என் வாழ்விலும் மறக்க முடியாத் அனுபவத்தைப் பதித்துச் சென்றிருந்தது.எம்மக்களைப் பெரும் அழிவின்றுங் காத்த முருகைக் கற்கள் அந்தச் சுனாமியின் பின்னரும் இன்றுவரை சிதைவடைந்தாவாறே, அதைத் திருத்தி மீண்டும் ஒரு அணையாகப் போடப் படாமல் கவனிபாரற்றுக் காணப் படுகின்றன.இன்னுமொரு சுனாமிவருமாக இருந்தால் நேரே அது உள்ளே புகுந்துவிடக் கூடிய நிலையில் தான் அந்த முருகைக்கற்கள் ஆங்காங்கே சிதறுண்டு, கடற்கரையில் கால் நனைக்க வருபவர்களையும் குத்திக் கொண்டு கிடக்கின்றன.இலங்கையிலும் அதன் கோர தாண்டவத்திற்குப் பலியான எம் உறவுகளை நினைவு கூர்வதோடு,அந்த அனர்த்தத்தில் உறவுகளைத் தொலைத்து, சொத்துக்களை இழந்து, இன்றும் கொட்டில்களிலும், கூடாரங்களிலும் எத்தனையோ இடர்களுக்கு மத்தியிலும் சீவிக்கும் உறவுகளுக்குமாகப் பிரார்த்திப்பதோடு கடல் தாயிடம்,"நீ மீண்டுமொரு முறை உள்ளே வருவதாகவிருந்தால் ஒன்றில் எம் எல்லோரையும் அள்ளிச் செல் அல்லது சுனாமி வந்து ஐந்து ஆண்டுகள் கழிந்த பின்னரும் பூரண நிவாரணங்களோ, வீடுகளோ, வசதிகளோ,முருகைக் கல்லணைகளோ கட்டித்தரப்படாத பாவிகளான எம்மிடம் வராதே " என்று விண்ணப்பித்து முடிக்கின்றேன்.

Saturday, January 23, 2010

நான் கண்ட சுனாமி

சுமாத்திராத் தீவுகளில் கருக்கொண்ட சுனாமி சத்தம் சந்தடியின்றி வந்து, எம் கரையை முட்டி மோதி,பொங்கி எழுந்து,சுற்றிச் சுழன்றடித்து ஆயிரமாயிரம் உறவுகளையும், கோடானுகோடி சொத்துக்களையும் சின்னாபின்னமாக்கி ஆண்டுகள் ஐந்து கரைந்தோடிவிட்டன. சிரித்து மகிழ்ந்து,சிறு கதை பேசி,மலை போல் தடைகள் வரினும் மசிந்துவிடோமெனும் வைராக்கியத்துடன் தாமுண்டு,தம்பாடுண்டு என திளைத்திருந்த தம் பிள்ளைகளை கடலன்னை அள்ளி ஆண்டுகள் ஐந்து உருண்டோடிவிட்டது.


தன் குழந்தைக்கு சோறூட்டிகொண்டிருந்த தாய்க்கும்,உண்ட சேய்க்கும் வாய்க்கரிசி போட்ட கடலன்னை, கணவன், மனைவி, குழந்தை குட்டி சுற்றம் முற்றம் என குடும்பங் குடும்பமாக எல்லாரையும் ஒரு சில நொடிகளில் ஒரே குழியில் படுத்தியது. எனக்கும் இந்த சுனாமியால் நேரடி அனுபவம் இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஒரு அனுபவம் உள்ளது.அதனை உங்களுடன் பகிர்வதற்கே இந்த பதிவு.ஒரு மாதத்திற்கு முன்னரே சுனாமி வந்த 26 ம் திகதியன்று போட்டிருந்திருக்க வேண்டியதொரு பதிவு.ஆனால் முடியவில்லை.அதனால் இப்போது தான் பதிவிடுகின்றேன்.அதுவும் நீண்டு விட்ட படியால் அதை இரண்டாய் உடைத்துத் தருவதாய் உத்தேசம்,சிரமம் பாராது வாசிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்



எங்களுக்கெல்லாம் சோறு போடுகின்ற லக்ஷ்மிகள்,நாங்கள் அள்ளுகின்ற அட்சயபாத்திரங்களான எமது தோட்டங்கள் தான் எங்களது ஊரின் வடக்குப் பக்க எல்லை.பரந்து விரிந்து பச்சைப் பசேலென நீண்டு கிடக்கும் எம் அன்னபூரணிகளைத் தாண்டி ஒரு கரையோரக் கிராமம்.கடாரம் என்ற சோழனவன் கப்பலில் சென்ற இந்துமகா சமுத்திரம் அந்தக் கிராமத்தை முத்தமிட்டுச் செல்லும்.எங்கள் அயல்கிராமமான அவர்களுடன் எங்களுக்கு அன்னியோன்னியமான உறவே எப்போதும் இருந்து வந்தது.


எங்கன்ரை ஊர் பெண்டுகள் மீன் வாங்க கடற்கரைக்கு போனால்,தாங்கள் வியாபாரிகளுக்கு மீனை வித்துக் கொண்டு நிண்டாலும் இவையளைக் கண்டவுடனை "இஞ்சை வாங்கோ பறுவதமக்கா ஏன் அங்கேயே நிக்கிறியள்.இதைக் கொண்டு போய் கொஞ்சம் வடிவாப் பெடியளுக்கு காய்ச்சிக் குடுங்கோவன்.பாவம் வளர்ற பெடியள்.சும்மா வெள்ளிக் கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் பாத்து பூசனிக்காயையும்,கத்தரிக் காயையும் காய்ச்சிக் குடுத்துக் கொண்டிருக்காமல்." எண்டு சொல்லி கொஞ்சம் உண்டன அள்ளிக் குடுப்பினம்.


இவையளும் பிறகு தங்கடை வெங்காயங்க்ள் கிண்டிக் கொண்டு வரேக்கை 4,5 ,பிடி வெங்காயத்தையும் பூசனிக்காயள்,கத்தரிக்காயளையும் கொண்டு போய்க் குடுத்து "எணேய் சின்னவன் பெஞ்சாதி சும்மா நெடுக உந்த மீனுகளைத் திண்டால் இப்ப உந்தக் கண்டறியாத வருத்தங்களெல்லாம் வருகுதாமல்லே.உந்த மீனுகளைத் நெடுகத் தின்னிறதை விட்டிட்டு கொஞ்சம் மரக்க்றியளையும் தின்னுங்கோவனடியப்பா." எண்டு சொல்லிக் கொண்டு போய்க் குடுப்பினம்.அதோடை எங்கடையாக்களின் மாட்டுப் பாலை பெருமளவு இறக்குமதி செய்து எங்கடையாக்களுக்கு கொஞ்சம் "பொக்கற் மணியைத்"தாறதும் அவையள் தான்.இப்பிடியாகத் தான் ஒட்டியுறவாடி இருந்தன ஊர்களிரண்டும்.


அப்போது எனது உயர்தரப் பரீட்சை முடிவுகள் வந்து பல்கலைக் கழகம் கிடைத்திருந்த படியால் எனது விடியற்காலை நித்திரைகளை நான் எதுவித நம்பிக்கையில்லாத் தீர்மானங்களும் கொண்டுவந்து இடையிலை குழப்பாமல் 7.30, 8.00 எல்லாம் தாண்டி நீட்டிக் கொண்டிருந்த காலமது.ஒருமாதிரி எழும்பி பல்லை விளக்கிக் கொண்டு நிற்க,"அம்மம்மா ஏற்கனவே ஐயந்தெணிக்கு(எமது தோட்டங்களில் ஒன்றின் பெயர்) போட்டா.நானும் அப்பாவும் இப்ப போறம்.புட்டு அவிச்சு வைச்சுக் கிடக்குது.கறியும் கிடக்குது.போட்டுச் சாப்பிடு நாங்கள் போறம்" எண்டு அம்மா சொல்லிப் போட்டு அப்பாவோடை தோட்டத்துக்குப் போட்டா.தம்பி,தங்கச்சியும் எங்கேயோ ரியூசனக்கு எண்டு நினைக்கிறன்.நான் பல்லை விளக்கிப் போட்டு,அப்ப சன் ரீவியில போய்க் கொண்டிருக்கிற வெண்ணிற ஆடை மூர்த்தியின் "மீண்டும் மீண்டும் சிரிப்பு" நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.



ஒரு 9.20 தாண்டியிருக்கு.கடலிலை ஏதோ சத்தம் கேட்டுது.நான் அது வழமையா நேவியின்றை டோறாக்கள் கரைக்கு கிட்ட ரோந்து வரேக்கை அலை கூட அடிக்கிறதாலை கேட்கிற சத்தம் தான் எண்டு நினைச்சுப் போட்டு என்ரை பாட்டில புட்டையும் சாப்பிட்டுக் கொண்டு,ரீவியையும் பார்த்துக் கொண்டிருந்தன்.ஒரு 5,10 நிமிஷம் போயிருக்கும்."என்ரை ஐயோ.... அம்மா..." எண்டு கத்திக் கொண்டு எங்கடை ஊரின்ரை மெயின் றோட்டாலை சனம் கத்திக் கொண்டோடிக் கொண்டிருக்கிற சத்தம் கேட்டிச்சுது.கோப்பையை அதிலை வைச்சுப் போட்டு ஓடி வந்து கேற்றடியிலை நிண்டு பார்த்தன்.சனம், "கடல் ஊருக்கை வந்திட்டுது" எண்டு சொல்லிக் கொண்டு பள்ளிக்கூடப் பக்கம் ஓடிக் கொண்டிருந்துதுகள்.


கொஞ்ச நேரம் அதில நிண்டு பார்த்துக் கொண்டு நிக்கேக்கை தான் அம்மா, அப்பா, அம்மம்மா மூண்டு பேரும் தோட்டத்துக்கை எண்டது ஞாபகம் வந்தது.தோட்டம் கடலிலையிருந்து ஒரு 75 m இல்லை எண்ட படியாலை பயம் என்னைத் தொற்றிக்கொண்டது.டக்கென்று சேட்டொன்றைக் கொளுவிக் கொண்டு சைக்கிளையுமெடுத்துக் கொண்டு வீச்சா உழக்கிக் கொண்டு வெளிக்கிட்டன். கடற்கரையிலையிருந்து வாற றோட்டாலை நியாயமான சனம் வந்து கொண்டிருந்துதுகள்.நான் சனம் வந்து கொண்டிருந்ததுக்கு எதிர்த் திசையில கடற்கரையை நோக்கியதான றோட்டலை போறதுக்கு முயற்சித்துக் கொண்டிருந்தன்.



சனமெல்லாம் அழுது குழறிக் கொண்டு "பனையளவுக்கு கடல் எழும்பி வந்து எல்லாத்தையும் கொண்டு போட்டுது" எண்டு சொல்லிப் புலம்பிப் புலம்பி வந்து கொண்டிருந்துதுகள். ஒரு 45, 50 வயசு அம்மா மேலே ஒரு துணியுமில்லாமல் ஓடி வந்து கொண்டிருந்தா.(சுனாமி கன பேரது துணிகளைக் களைந்து சென்றதை நான் பின்னர் பத்திரிகைகளில் படித்திருந்தேன்)சனம் என்னை உள்ளே போக விடாமல் தடுத்தது."தம்பி.. ராசா.. உள்ளை போகாதையணை" எண்டு சொல்லிக் கெஞ்சி மறித்தனர்.ஆனால் எதையும் கேட்கும் மனநிலையில் நான் இருக்கவில்லை.நான் அச் சனத்துக்குள்ளாலை வளைச்சுக் கிளைச்சு,வெட்டியாடி ஒரு மாதிரித் தோட்டத்துக்குப் போய்ச் சேர்ந்தன். போய்ப் பார்த்தால் தோட்டத்துக்கை கடல்த் தண்ணி வந்து,வடிந்து போயிருந்தது. பயம் என்னை மேலும் ஒரு இறுக்கு இறுக்கியது.ஓடிப் போய் கிணத்தை எட்டிப் பார்க்க மனம் சொல்லியது.நானும் போய் எட்டிப் பார்த்தேன்... பதிவின் நீட்சி கருதி இத்தோடு இந்தப் பகுதியை நிறுத்தி தொடர்ந்து என்ன நடந்தது என்பதை அடுத்த் பதிவிலே பதிவிடுகின்றேன்.நன்றி.

Wednesday, January 13, 2010

ஆலங்காய்ப் புட்டும் அகலத் திறந்த வீதிகளும்

என்னடா இது மொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறது மாதிரி ஆலங்காய்ப் புட்டைக் கொண்டு வந்து பாதையோடை முடியுறான் எண்டு நீங்கள் நினைக்கிறது எனக்கு விளங்குது.இரண்டுக்கும் மொட்டந்த்லை,முழங்கால்ப் பொருத்தம் தான்.ஆனால் என்ன ஒரு றைமிங்காய் இருக்கெட்டுமெண்டு தான் வைச்சுக்கிடக்குது.ஏன் அதைப் பற்றி அலட்டிக் கொண்டு நிக்கிறியள்.அது கிடக்கட்டும்.அதை விட்டிட்டு விசயத்துக்கு வருவம்.



புதுவருச லீவுக்கு ஒரு மாதிரி வீட்டை போய் வந்தாச்சுது.இந்தமுறை லீவில் என்ரை ஸ்பெசலென்னண்டால் ஆலங்காய்ப் புட்டுத்தான்.கனகாலஞ் சாப்பிட்டு,வெளிக்கிட முந்தி யாரோ ஒருத்தன் ஞாபகப் படுத்திப் போட்டான்,பேந்தென்ன போன கையோடை "நாண்டு கொண்டு" நிண்டு சாப்பிட்டாச்சுது.சமாதான காலத்தில பாதை திறந்ததிலிருந்து, பல்வேறு காலகட்டங்களில பஸ்ஸால,கப்பலால,பிளேனால, பிறகும் பஸ்ஸால,ஹயசால எண்டு பலவேறு காலகட்டங்களில்,பலவேறு கஷ்ரங்களைப் பட்டு யாழ்ப்பாணம் போய் வந்த ஆக்களில் நானும் ஒருவன்.என்னத்தை தான் மலையிலை ஏறி,அந்தர் அடிச்சுக்,கடலிலை குதிச்சுக்,கப்பலிலையுங் கவிட்டுத் தான் யாழ்ப்பாணம் போக வேண்டியிருந்தாலும் ஊருக்குப் போப் போறம் எண்ட உடனை எங்களுக்கெல்லாம் உது பின்னங் காற்சட்டையிலை பட்ட புழுதி மாதிரிக் கண்டியளோ.சும்மா தட்டிப் போட்டுப் போய்க் கொண்டேயிருப்பமில்ல. அப்பிடித்தான் இந்தமுறையும் ஒரு மாதிரிப் போய் வந்தாச்சுது.



சற்குணமண்ணையின்றை ஹையசில தான் நான் கருணையூரானோடை போயிருந்தன்.வெள்ளவத்தையில உள்ள றோட்டுக்களும் தெரியாது,எக்காய் தெக்காயை விட்டால் சிங்களமும் தெரியாது.ஆனால் ஓட்டத்துக்கு வந்த சற்குணமண்ணை ஒரு துணிஞ்ச கட்டை தான்.இடையில லைற் போட இல்லையெண்டு ஏதோ சொல்லி ஆளின்ரை லைசென்சையும் பறிச்சுப் போட்டாங்கள்.ஒரு மாதிரி ஆளும் இழுத்துக் கொண்டு போய்ச் சேர்த்துப் போட்டார். வவுனியாவைத் தாண்டி போற வழியில எங்களுக்காக சிலுவை சுமந்தவர்களின் சிலுவைப் பயணங்கள் தொடர்கின்றதைப் பார்க்கேக்கை எங்களுக்காக இவ்வளவு கஷ்ரப்பட்ட அந்த சனத்துக்கு கொழும்பிலையிருந்து கொண்டு சும்மா கூடிக் கூடி பெரிய ’பற்றாளர்கள்’ போல் கதைப்பதை விட்டி ஏதாவது செய்திருக்கிறோமா எண்டொரு கேள்வி உள்ளுக்கை ஒரு குற்ற உணர்ச்சியோடை குத்திச்சுது.U.N இன் நீலநிறக் கூடாரத்துக்குள்ளான அவர்களின் அவலம் இன்ன்மும் நீள்கிறது.

ஏ9 றோட்டின் இரண்டு பக்கமும் அவர்களால் தங்களுக்கு அன்றாடம் கஞ்சி வார்க்கும் என்றும்,மற்றவர்களிடம் பிச்சையெடுப்பதிலும் பார்க்க சுயமாக உழைத்து வயிற்றைக் கழுவுவம் என்ற நம்பிக்கையிலும் சண்லைற் சவுக்காரம்,சேர்ப் எக்சல்(Surf Excel)பக்கற்,கூல் இல்லாத சோடா, பல்லி முட்டாஷ் என்று கொஞ்ச சாமான்களை வைச்சு அமைக்க்ப்பட்ட சின்னஞ் சிறு கொட்டில்களில் யாராவது வருவார்களா என்ற எதிர்பார்ப்போடு காத்துக் கிடக்கும் அந்த சிலுவையாண்டவர்களின் நிலையை நேரில் பார்த்தால்த் தான் விளங்கும்,அந்த கொடுமையை.ஆனால் சூப்பர் மார்க்கற்றில் சாமான் வாங்கி ,கூல் சோடா குடிச்சு,ஹையசில போற எங்களுக்கு அதிலையெல்லாம் நிண்டு சாமான் வாங்கினால் ஒரு முழம் குறைஞ்சிடுவம் என்று ஒரு கவலை பாருங்கோ. என்ன தான் இருந்தாலும் அண்ணை சத்தியமா உந்த முறிகண்டியில போய் பல்லை விளக்காட்டாலும் பரவாயில்லை,ஒருக்கா வாயைக் கொப்பளிச்சுப்போட்டு சாப்பிடுற அந்த முறிகண்டி ரோல்ஸ் மாதிரி ரோல்ஸ் நான் வேறை ஒரு இடமும் சாப்பிட்டதில்லை.அதே மாதிரித்தான் எத்தினையை இழந்தாலும்,இண்டைக்கும் அந்த வன்னி மக்கள் இழக்காத அந்த வெள்ளை உள்ளத்தையும்,வெள்ளந்தித்தனத்தையும் வேறையொரு இடத்திலையும் காணயேலாது பாருங்கோ.இண்டைக்கும் அதால போகேக்கை முந்தியெல்லாம் த.போ.க. பஸ்களில் முறிகண்டியில ஏறி கச்சான் விக்கிற அந்த பல்லு கொஞ்சம் காவியடித்த ஒரு சின்ன அண்ணை உடப்ட கனபேர் எம் கண்முன்னே இருந்து போகமறுக்கிறார்கள்.



வசந்தம் வீசிக் கொண்டிருக்கும் மண்ணின்,வரவிருக்கும் தலை நகரத்தில்,ஒண்டுக்குப் போவதற்கு 'ஒபென்' இலை போகவேண்டிய நிலைமை கண்டியளோ.(பொம்பிளையள் பாடு என்னெண்டு வடிவா தெரியாது)15,20 பஸ்சில போன சனம் ஒன்றாக இறங்(க்)கியதால் வந்த வினை தான் உது.வெட்ட வெளியில போறது ஒண்டும் பெரிய விசயமில்லை.அங்கனைக்கை வந்து நிண்டு கொண்டு அங்கால தள்ளிப் போ இஞ்சால தள்ளிப் போ எண்டு நாய் கலைக்கிறது மாதிரி கலைச்சால்?சனம் என்ன,மனிசரோ இல்லாட்டில் நாயள்,பேயளோ? அது சரி எங்கடை சனம் இல்லையெண்டால் தலைக்குமேலையும் பெய்ஞ்சு போட்டும் போகும்.அதுக்காக வேண்டி இப்பிடிக் கலைச்சால்?முறிகண்டிப் பிள்ளையாரோடை போட்டிக்கு Business ஐத் தொடங்கிப் போட்டு உழைப்பை மட்டும் பார்த்தால்க் காணுமே.கொஞ்சம் இதுகளையும் கவனிக்கத் தானே வேணும்?இதுகளோட வழிநெடுக கண்ட கனமான காட்சிகளடோயே வீடு போய்ச்சேர வேண்டிப் போச்சுது. அங்கை கொஞ்சம் பரவாயில்லாமல் தான் போச்சுது.


எங்கட வாழ்க்கையில எங்களுக்கெல்லாம் வெடிவால் முளைச்சு நாங்களெல்லாம் கூவ வெளிக்கிட்ட, என்ர வாழ்வில் 'வசந்தம்' வீசின காலத்து ரியூசன் நட்புக்கள் இருவர் வெளியிலிருந்து வந்ததாலும் ஒன்றாக கசூரினாவுக்கு ட்ரிப் அடிச்சது,எங்கன்ரை Team பெடியளெல்லாம் கனகாலத்துக்குப் பிறகு ஒன்றாகக் கிரிக்கட் விளையாடினது,ஒன்றும் பேசாமல் பறையாமல் மாமா ஜேர்மனியிலையிருந்து வீட்டு வாசலை வந்து நிண்டது,நாங்களெல்லாம் சின்னனா இருக்கேக்க உந்த புக்கை,மோதகத்துக்கு கூடுதலா அடிபடுற திருவெம்பாவைக் கடைசிநாளான் திருவாதிரையன்று ஊரில நின்றது,என்னோட ஓராமாண்டிலையிருந்து ஒண்டாப் படிச்சு இப்ப யாழ்ப்பாணக் கம்பசில படிக்கிற நண்பியொருத்தியைச் சந்திச்சது,எங்கட தோட்டங்களை வெங்காயம் பயிரிட்டாப்போல 3,4 வருசத்துக்குப் பிறகு பார்த்தது,பனங்கிழங்கு கிண்டிச் சாப்பிட்டது,பனம் பூரான் தோண்டிச் சாப்பிட்டது,எங்களுக்காக சிலுவைசுமக்கச் சென்று ஊர் மீண்டிருந்த எம் ஊர் உறவுகளைச் சந்திச்சது,அவர்க்ளை மட்டுமில்லாமல் தம் மேட்டுக்குடித்தனத்தைக் கைவிட்டு இம்முறையும் எம்மூரவர்களால் உள் அனுமதிக்கப்பட்டிருந்த வேறு உறவுகளையும் சந்திச்சது, பட்ட சீசனென்டதாலை ஏத்தின பட்டங்கள்,படலங்களை "ஆ"வெண்டு பார்த்தது, இந்தமுறையும் ஜூனியர் பெட்டையளைச் சந்திக்கிற சந்தர்ப்பங் கிடைச்சது,எங்கடை கம்பசின்ரையும்,ஊரின்றையும் சிங்கத்தோடை ஒண்டா ஊரில 4 வருசத்துக்குப் பிறகு நிண்டது,புது வருசம் பிறக்கேக்கை வீட்டை நிண்டது,எங்களுக்கு போக அனுமதி மறுக்கப்பட்ட வீதிகள் கொஞ்சம் திறக்கப் பட்டது என்று கன விசயங்கள் இருந்தால காலில சக்கரம் கட்டிக் கொண்டுதிரிந்த மாதிரியாப் போச்சுது இந்த மூன்று நாலு நாளும்.


நாங்கள் எங்கடை சின்ன வயசுகளில் ஒடித்திருந்திருக்க வேண்டிய,எங்கடை பத்து வயசுகளுக்கு முந்தி மூடப்பட்ட பல வீதிகள் பதினாலு,பதினைஞ்சு வருசங்களுக்குப் பிறகு திறக்கப் பட்டிருக்குது.கடற்கரை வீதி,கல்லூரி வீதி,அம்மன் கோவில் வீதி,பிரதேச பிரிகேடியர் தங்கியிருந்த வீதி என்று கொஞ்சம் வீதிகள் திறக்கப்பட்டிருந்தது,இன்னும் மிச்சம் கிடக்குது. ஆனால் தாங்கள் பிறந்து, வளர்ந்து,படுத்து எழும்பிய பரம்பரை பரம்பரையாக ஆண்ட நிலங்களிலிருந்து எத்தனை உறவுகள் கூண்டோடு கலைக்கப் பட்டிருக்கிறார்கள்.அவ்ர்களின் நிலைமையையெல்லாம் இவர்கள் எப்பததான் நினைச்சு,எப்பத் தான் அதுகளெல்லாம் சொந்த வீட் போய் கூழோ கஞ்சியோ காய்ச்சிக் குடிக்கிறது எண்டு தெரியேல்லை.

'அன்னத்துக்கு' வீட்டைக் குடுக்கப் போறம் எண்டு அறிவிப்பு வந்த கையோடை ஏ9 ஐ 24 மணித்தியாலமும் திறக்கிறம் எண்டு அறிவிப்பு வருகுது.ஆனால் மாறி நாங்கள் வீட்டிலை 'வெத்திலையை' வளர்க்கிறம் எண்டு சொல்லியிருந்தால் உதுகும் வந்திருக்காது.என்னத்தை தான் செய்தாலும் செய்யாட்டாலும் பாதை திறப்புக்களோ,சண்டை இல்லாதபடியால சமாதானமாத்தான் சனம் இருக்குதுகள் எண்ட சுயகற்பிதங்களோ ஒருபோதும் நிரந்தர சமாதானத்தை ஒரு போதும் உருவாக்கப் போவதில்லை என்ற எனக்குத் தெரிந்த,ஆனால் தெரியாத இந்தத்தலைப்புக்கு சம்பந்தமில்லாத அரசியலை தொடாமல் இத்தோடு முடிக்கின்றேன்.
நண்பர்களே நான் ஒரு நிலைக்கு(stable) வந்த பின் தொடர்ந்து,சீராக அரசியல், அனுபவம், நகைச்சுவை,விளையாட்டு,சமூகம் என கலந்து ஒரு பஞ்சாமிர்தமாகக் கொடுப்பேன் என்று நம்பி,அதுவரை சற்று பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்