Friday, July 2, 2010

சூரிய நமஸ்காரம்

சூரிய நமஸ்காரம் கனா கண்ட காலங்கள், முந்தியொருக்கால் உப்புடித் தான், சொல்ல மறந்த கதை, துள்ளித்திரிந்ததொரு காலம், ஞாபகம் வருதே

பறந்து திரிந்த பள்ளிப் பருவங்களில், பட்டாம் பூச்சியாய் மனம் பறந்துதிரிந்த "அந்த " இடத்தில்,பசுமையோடு பதிந்து போன பலவற்றுள் சிலவற்றை மீட்டுப் பார்க்கின்றேன்.இன்றும் அசைபோடுகின்ற போது,நகமும் சதையும் போல ஒட்டியிருந்த உறவுகள், தோளுக்குத் தோள் கொடுத்த நட்புக்கள், வசியம் செய்த கண்கள், எல்லாம் பசையாய் ஒட்டிக் கொள்கின்றன நெஞ்சதனை விட்டுப் போக மனமில்லாமல்.



நாங்கள் ஒ எல்(O/L)வரை படிச்ச சயன்ஸ் சென்ரர்(Science Center) இலை ஒரு கிணறொன்று இருந்தது.நாங்கள் ரியூசனுக்குப் போய் பாடம் தொடங்க முதலும்,ஒரு பாடம் முடிஞ்சு அடுத்த பாடம் தொடங்க முதலும், எண்டு வகுப்பிலை இருக்கிற நேரத்தை விட மிச்ச நேரத்திலை எல்லாம் இருக்கிறது அந்தக் கிணத்துக் கட்டிலை தான். பின்னேரத்திலை 2, 3 மணி போலை மட்டும் இருக்கேக்கை பின்னுக்கு கொஞ்சம் சுடும். மற்றும் படி ஒரு சோலி சொரட்டும் செய்யாதது அந்தக் கிணறு.ஆனால் நாங்கள் அந்தக் கிணத்துக்குச் செய்த அநியாயங்கள் எக்கச்சக்கம்.துப்ப வேணும் எண்டொரு பீலிங்(Feeling) வந்தாலோ அல்லது ஒருத்தன் துப்ப நான் ஏன் சும்மா பாத்துக் கொண்டிருக்கோணும் எண்டு துப்பும் போதோ,அல்லது துப்பவேணும் எண்டு இல்லாட்டிலும் ஏன் துப்பினாலென்ன எண்டு நினைக்கும் போதெல்லாம் துப்பிறது அந்தக் கிணத்திலை தான்.




முடிஞ்சு போன பேனைகள், பேனை மூடிகள், பேனைக் குச்சுக்கள், பழைய கொம்பாஸ் பெட்டிகள் எல்லாத்தையும் தூக்கி அதுக்கை தான் எறியிறது.இல்லையெண்டால் சிலவேளை இந்தா பார் அந்த மீனுக்கு கல்லாலை எறியிறன் எண்டு சொல்லிக்கொண்டு, அம்பிடிற சின்னக் கல்லுகளாலை மீனுக்குப் படாது எண்டு தெரிஞ்சும் கிணத்துக்கை கல்லெறியோணும் எண்டதுக்காகவேண்டி அதுக்கை எறியிறது.இப்பிடி எங்கடை ரியூசன் நிர்வாகி(Director)அமாவாசையிலை(ஏன் அப்பிடி வந்ததெண்டு யோசிக்குக் கண்டு பிடியுங்கோ பாப்பம்) இருந்த கடுப்பெல்லாத்தையும் அவரிலை காட்டேலாது எண்ட படியால் அவற்றை ரியூசன் கிணத்திலை காட்டிறது தான் எங்கடை வேலை.



அந்தக் கிணத்துக்குப் பக்கத்திலை பாத்றூம்(Bath room) மாதிரி ஒரு பக்கம் திறந்த ஒரு மறைப்புக் கட்டிடம்.அதுக்கை தான் ரியூசனுக்குப் படிப்பிக்க வாற சேர் மார் ஒண்டுக்குப் போறவை.(எல்லாரும் இல்லை)அப்பிடி ஒண்டுக்குப் போக வரேக்கை அந்தக் கிணத்தடி, அதுகளுக்குப் பக்கத்திலை அங்காலை இஞ்சாலை நாங்கள் நிண்டால் "டேய் எல்லாரும் சூரிய நம்ஸ்காரம் செய்" எண்டுவினம்.சூரிய நமஸ்காரம் எண்டால், அவையள் அந்த பாத்ரூமுக்குப் போற நேரம் நாங்கள் மற்றப் பக்கமாத் திரும்பி கிழக்கப் பக்கமா சூரியனைப் பாத்து நமஸ்காரம் செய்ய வெளிக்கிட்டிடுவம்.பின்னேரத்திலை கூட சூரியன் மேற்கை நிக்கையுக்கையும் நாங்கள் கிழக்கை பாத்துத் தான் சூரிய நமஸ்காரம் செய்வம் எண்டது வேறை கதை.




சிலவேளையிலை பக்தி முத்திப் போய் சில பேர் "அரோகரா .. " "அரோகரா.. " எல்லாம் சொல்லி கும்பிட வெளிக்கிட்டிடுவாங்கள்.உண்மையிலை அவை அப்பிடியெல்லாம் செய்யச் சொல்லிச் சொல்லுறதில்லை.அவையள் உள்ள போகேக்கை சில பேர் திரும்பிப் பாத்து உவை உதுக்கை என்ன செய்யினம் எண்டு ஆராய்ச்சியெல்லாம் பண்ண வெளிக்கிட்டிடுவம் எண்டு எங்கடை கற்பூர புத்தி பற்றி முதலே தெரிஞ்ச படியாலை தான் அப்பிடி எங்களை சூரியநமஸ்காரம் செய்யச் சொல்லுறவை.ஆனால் நாங்கள் "அரோகரா .. " எல்லாம் சொல்லி பூசையே நடத்திப் போடுவம்.கையெல்லாம் தலைக்கு மேலை தூக்கி, வெளியிலையிருந்து பாக்திறவன், பகதிப் பரவசமான, தங்கப் பழமான பெடியன் எண்டு நினைக்கிற மாதிரி நடிப்பு அதி அற்புதமாயிருக்கும்.



சேர் மார் 'அலுவல்' முடிச்சு வந்து , "ஆ .. சரி சரி...சூரிய நம்ஸ்காரம் செய்தது காணும்.. உங்கடை வேலையப் பாருங்கோ ..." எண்டு சொல்லிற வரைக்கும் சூரிய நம்ஸ்காரம் நடந்து கொண்டேயிருக்கும். என்ன என்ரை பதிவைப் பாத்து நீங்களும் சூரிய நம்ஸ்காரம் செய்து போடாதையுங்கோ..
(இந்தப் பதிவு எங்கள் பிரதேசங்களில்,படிக்கும் மாணவர்களாயினும் சரி ஆசிரியர்களாயினும் சரி யாராகினும்,எவ்வளவு பௌதீக, நிதி மற்றும் இதர வளப் பற்றாக்குறைகளுக்கு மத்தியில் கற்று வரவேண்டியிருக்கின்றாது என்பதற்கு ஒரு சிறு ஆதாரமாகக் காட்டவேயன்றி,அந்த ஆசிரியர்களை கேலி படுத்தவோ, அல்லது வேறு எந்த தீய நோக்கங்களுக்காகவும் எழுதப் படவில்லை)

1 comment:

  1. சூரிய நம்ஸ்காரம்.. சுவாரஸ்யமாய் இருக்குதப்பா. ரசித்தேன். வாழ்த்துக்கள்

    ReplyDelete