Sunday, January 24, 2010

நான் கண்ட சுனாமி பகுதி 2

கடந்த பதிவிலே நான் சனத்துக்குள்ளாலே கஸ்ரப்பட்டு கடலுக்கண்மையிலிருந்த எமது தோட்டத்தை அடைந்ததாகக் கூறி அதிலே விட்டுச் சென்றிருந்தேன்.வாசிக்காதவர்கள்
http://vadaliyooraan.blogspot.com/2010/01/blog-post_23.htmlஐ சொடுக்கிப் பாருங்கள்.இன்று அதிலிருந்து தொடர்ந்து செல்கின்றேன்.

போய்ப் பார்த்தால் தோட்டத்துக்கை கடல்த் தண்ணி வந்து,வடிந்து போயிருந்தது. பயம் என்னை மேலும் ஒரு இறுக்கு இறுக்கியது.ஓடிப் போய் கிணத்தை எட்டிப் பார்க்க மனம் சொல்லியது. நான் கடவுளிடம் வேண்டியபடியே கிணத்துக்கை எதுவும் இருக்கவில்லை.எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை.கொஞ்ச நேரம் கிணத்துக் கட்டிலை இருந்து யோசிச்சுப் போட்டு,சரி மற்ற தோட்டங்களுக்குப் போய்ப் பார்ப்பம் எண்டு சைக்கிளையும் எடுத்து உழக்கிக் கொண்டு போய் வல்லூட்டி, ஆவலம்பிட்டி, பருத்தியோலைப்(முதலிரண்டும் தோட்டங்களினதும் கடைசி காணியினதும் பெயர்)பக்கமாப் போனேன்.எங்கும் இல்லை.



ஐந்தும் கெட்டு,அறிவும் கெட்டது போல சைக்கிள் போன பாட்டிலை உழக்கிக் கொண்டு வந்து வீட்டை வந்தால் வீட்டை மூண்டும் நிக்குதுகள்.குப்பை கூழங்களை,வள்ளங்களை அள்ளியவாறு பனையளவு எழும்பி வந்த அலை பார்த்தவுடனேயே பெட்டியள்,மம்பெட்டியளைப் போட்டிட்டு இவையள் மூன்று பேர் உட்பட தோட்டத்துக்கை நின்ற எல்லாச்சனமுமே ஒடி தப்பிவந்திட்டுதுகள்.கடலிலிருந்து ஒன்று,ஒன்றரை மீற்றர் உயரமான கடற்கரை வீதியும் முருகைக் கற்களுமே மற்ற இடங்களுடன் ஒப்பிடும் போது பெரியளவு இழப்புகளிலிருந்து எம்மயலூரைக் காப்பாற்றியிருந்தது.


ஒரு சில உயிரிழப்புக்களும் கரையிலிருந்த வள்ளங்களின் அழிவு,வீடுகள், சொத்துக்களின் சேதம், தோட்டங்களினுள் உப்புநீர் புகுந்து பயிரிடமுடியாமல் போனமை என்று மற்ற இடங்களுடன் ஒப்பிடும் போது குறைவாகவே இழப்புக்கள் ஏற்பட்டன.ஆனால் எம்மயலூர் மக்கள் வாழ்வில் என்றும் எதிர்பார்க்காதவாறு திடீரென்று கடல் ஊரினுள் வந்த பயத்தாலும்,தமது வீடுகள் சிதைந்து சின்னாபின்னமாகியிருந்ததாலும் எம்மூர்ப் பாடசாலைகளிலும் தஞ்சம் கோரியிருந்தனர்.அவர்களைப் பராமரிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு எம்மவர் தோள்களில் விழுந்திருந்தது.



நொடிப் பொழுதில் அனைவரும் படையணிகளாகப் பிரிந்தனர்.களத்தில் குதித்தனர்.ஒரு படைய்ணி கடற்கரைக்கு செல்லும் வீதியை மறித்து,"புதினம்" பார்க்கப் போகிறோம் என்று சொல்லிக் களவிலீடுபட முனைந்த கும்பல்களைத் தடுத்தது.மற்றைய படை ஊரவர்களிடம் காசு சேர்த்து,அத்தியாவசியப் பொருட்கள் வாங்கப் புறப்பட்டது.பெண்கள் படையணியோ சமைக்க,அதற்கு உதவி ஒத்தாசையாக இன்னொரு படையணி களத்தில் குதித்தது.இன்னும் ஒன்று சம்பவ இடத்தில் மீட்புப் பணியிலும் மற்றுமொன்று பாடசாலைக்குச் சென்று அவர்களின் உடனடித் தேவைகளைப் பார்த்துக் கொண்டது.அரச, அரச சார்பற்ற உதவிகள் கிடைத்த மூன்றாம் நாள்வரை முழுக்க முழுக்க எம்மூரவர்களாலேயே அவர்கள் பராமரிக்கப் பட்டிருந்தன்ர்.



எது எப்பிடியோ இந்த உலகம் முழுக்க அழியாத வடுக்களை ஏற்படுத்திய சுனாமி என் வாழ்விலும் மறக்க முடியாத் அனுபவத்தைப் பதித்துச் சென்றிருந்தது.எம்மக்களைப் பெரும் அழிவின்றுங் காத்த முருகைக் கற்கள் அந்தச் சுனாமியின் பின்னரும் இன்றுவரை சிதைவடைந்தாவாறே, அதைத் திருத்தி மீண்டும் ஒரு அணையாகப் போடப் படாமல் கவனிபாரற்றுக் காணப் படுகின்றன.இன்னுமொரு சுனாமிவருமாக இருந்தால் நேரே அது உள்ளே புகுந்துவிடக் கூடிய நிலையில் தான் அந்த முருகைக்கற்கள் ஆங்காங்கே சிதறுண்டு, கடற்கரையில் கால் நனைக்க வருபவர்களையும் குத்திக் கொண்டு கிடக்கின்றன.இலங்கையிலும் அதன் கோர தாண்டவத்திற்குப் பலியான எம் உறவுகளை நினைவு கூர்வதோடு,அந்த அனர்த்தத்தில் உறவுகளைத் தொலைத்து, சொத்துக்களை இழந்து, இன்றும் கொட்டில்களிலும், கூடாரங்களிலும் எத்தனையோ இடர்களுக்கு மத்தியிலும் சீவிக்கும் உறவுகளுக்குமாகப் பிரார்த்திப்பதோடு கடல் தாயிடம்,"நீ மீண்டுமொரு முறை உள்ளே வருவதாகவிருந்தால் ஒன்றில் எம் எல்லோரையும் அள்ளிச் செல் அல்லது சுனாமி வந்து ஐந்து ஆண்டுகள் கழிந்த பின்னரும் பூரண நிவாரணங்களோ, வீடுகளோ, வசதிகளோ,முருகைக் கல்லணைகளோ கட்டித்தரப்படாத பாவிகளான எம்மிடம் வராதே " என்று விண்ணப்பித்து முடிக்கின்றேன்.

2 comments:

  1. அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. முருங்கைக் கற்களை பாதுகாப்பதன் அவசியத்தை சுட்டிக் காட்டியது முக்கியமானது என்பேன்.

    ReplyDelete
  2. நன்றி மருத்துவர் முருகானந்தன் அவர்களே.நீங்கள் எனது பதிவை வாசித்து பின்னூட்டமிட்டது எனக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கிறது.நிச்சயமாக எங்கள் முருகைக் கற்கள் பதுகாக்கப் பட்டு எமது எதிர்காலசந்ததியிடம் கையளிக்கப் படவேண்டும்

    ReplyDelete