Sunday, December 12, 2010

திருவெம்பா

திருவெம்பாவை எண்டு கேள்விப்பட்டிருக்கிறம்,இதென்ன திருவெம்பா?,இப்பிடியொரு சொல்லை நாங்கள் கேள்விப்படவேயில்லையே எண்டு உங்களிலை கொஞ்சப் பேர் நினைக்க வெளிக்கிட்டுடிவியள் எண்டு எனக்குத் தெரியும்.இரண்டும் ஒண்டு தான்.அந்த "வை" யை உச்சரிக்கிறதிலை எங்களுக்கு ஒரு பஞ்சி.பின்னை அது தான் திருவெம்பா எண்டு சொல்லித் தான் சொல்லுவம்.


மார்கழி மாசத்திலை தான் திருவெம்பா வரும்.அதுவும் அந்தக் குளிருக்கை விடிய வெள்ளனவெல்லாம் கோயிலுகளிலை பூசைகள் நடக்கும்.இந்தமுறையும் திருவெம்பா தொடங்கப் போகுதாம் எண்டு போன வெள்ளிக்கிழமை பம்பலப்பிட்டிப் பிள்ளையார் கோயிலிலை அறிவிச்சது என்ரை காதிலை கேட்டிச்சுது.அது தான் எனக்கும் முந்தின எங்கடை காலத்து திருவெம்பாப் புதினங்களை ஒரு பதிவா எழுதிப் போடுவம் எண்டொரு யோசனை வர,சட்டுப் புட்டெண்டு இந்தப் பதிவை எழுதிப் போடுறன்.



திருவெம்பா எண்டு சொல்லிச் சொன்னால் ரண்டு விசயம் ஞாபகத்துக்கு வரும்.ஒண்டு எல்லாக் கோயிலிலையும் அவல்,கடலை எண்டு கன சாமானுகள் சாப்பிடக் குடுப்பினம்.மற்றது சங்கூதிப் பண்டாரம்.முதல்லை அவல்,கடலை அலுவலைப் பாத்திட்டு,பிறகு சங்கூதிப் பண்டாரத்தைப் பாப்பம்.ஏனெண்டால் சாப்பாட்டை காத்திருக்க வைக்கக் கூடாதெண்டு சொல்லுவினம்.



முந்தியெல்லாம் சின்னனிலை, ஒராம்,இரண்டாம் வகுப்புப் படிக்கேக்கை,திருவெம்பாக் காலத்திலை விடியக் காலமை 5 மணிக்கே அம்மாவோ,அம்மம்மாவோ அடிச்சு எழுப்பிப் போடுங்கள்."அங்கை கோயில்லை பூசையாகுது.இஞ்சை நீ படுத்துக் கிடக்கிறாய் எண்டு விடியவெள்ளனவே பேச்சு விழத் தொடங்கீடும். நாங்களும் எழும்பி,நித்திரை தூங்கித் தூங்கிப்,பல்லை மினுக்கி,முகத்தைக் கழுவிப் போட்டு,குளிக்கப் பஞ்சியாயுமிருக்கும் அதே நேரம் பயங்கர குளிராயுமிருக்கும்,குளிக்கவே மனம் வராது எண்டாலும் சும்மா ஒரு போமாலிற்றிக்காக(formality)கேக்கிறது.."... என்ன குளிக்கிறதோ.." எண்டு..."...ஆய்.. சின்னப் பிள்ளையள் தானே.. அது காரியமில்லை.." முகத்தைக் கழுவிப் போட்டுப் போ எண்டு அம்மம்மா சொல்லுவா.சிலவேளை அம்மா சுடு தண்ணி வைச்சுத் தருவா.அதுக்கை கொஞ்சம் பச்சைத் தண்ணியை விட்டு,ஒரு வாளிக்கை கலந்து போட்டு,ஒரு வாளித் தண்ணியிலையே குளிச்சுப் போட்டுக் கோயிலுக்குப் போறது.எப்பிடிப் பாத்தாலும் சிலவேளையிலை அரைக் குளிப்பு இன்னும் சில நாள் அதுவும் இல்லை.அவ்வளவு தான்.



பண்டாரி அம்மன் கோவிலை 5 மணிக்குப் பூசை தொடங்கும்.அங்கை தான் முதல்ப் போவம்.ஒரு லக்ஸ்பிறே அல்லது அங்கர் பாக்(Bag) ஐயும்(அந்தக் காலங்களிலை உந்தச் சொப்பின் பைகளின்டை பாவனை மிச்சும் குறைவு)மடிச்சுக் காச்சட்டைப் பொக்கற்றுக்கை வைச்சுக் கொண்டு தான் இந்த வானரப் படையள் கோயிலுக்குப் படையெடுக்குங்கள். போனவுடனை பாக்கிற முதல் வேலை இண்டைக்குச் சுவாமிக்கு என்ன படைச்சுக் கிடக்கிறது எண்டு பாக்கிறது தான்."...ஆ .ஆ.கடலை கிடக்குது..அவலுக்கு கக்கண்டு போட்டு வைச்சிருக்கினம் போல கிடக்குது...வெள்ளையாக் கிடக்குது...இஞ்சாலை கிடக்கிறது சக்கரைப் பொங்கல்...மோதகமும் கிடக்குது.கனக்கக் கிடக்குது... ஆளுக்கு ரண்டுப் படி குடுப்பினமோ...?அதுக்கிடையிலை கணக்குப் போட்டுப் பாக்கிறது..கோயிலிலை ஒரு 50,60 சனம் நிக்குது..எல்லாருக்கும் ரண்டுப் படி குடுத்து,பேந்து உபயகாரரும் தங்கடை வீட்டையும் கொஞ்சம் மோதகம் கொண்டு போகோணும்.. அப்பிடிப் பாத்தால் உவ்வளவும் காணாது.ஒரு வேளை ஐயர் உபயகாரருக்கெண்டு புறிம்பா உள்ளுக்கை ஒளிச்சு வைச்சிருக்கிறாரோ தெரியாது...சரி அதை விடுவம்...பெரியாக்களுக்குக் குடுக்காட்டிலும் சின்னப் பெடியளுக்கெண்டாலும் குடுப்பினம்...ம்.. பாப்பம்.பிறகு இஞ்சாலை வைரவருக்கு,சின்ன வடை மாலை தானே போட்டுக் கிடக்குது.உந்த வடை மாலையிலை 20 வடையும் வராது போல கிடக்குது.அப்ப உதைச் சனத்துக்குக் குடுக்க மாட்டினம் போல கிடக்குது.அங்காலை 2 தாம்பாளத்துக்கை கதலி வாழைப் பழமும் அடுக்கி வைச்சுக் கிடக்குது.அப்ப அதுவும் குடுப்பினம்.இந்த மனக் கணிப்பெல்லாம் கோயிலுக்குப் போன கையோடையே நாங்கள் செய்து போடுவம்.




அங்காலை ஒரு பக்கத்தாலை பூசையள் நடந்து,திருவெம்பாப் பாட்டுப் படிக்க வெளிக்கிட்டிடுவினம்.சிலவேளை ஐயரே படிப்பார்.இல்லாட்டில் ஆம்பிளையள், பெடியள்,பொம்பிளையள் எண்டு நல்லா "..ஆ. ஆ..." எண்டு இழுத்துப் பாடக் கூடினாக்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பாட்டா,ஒரு ஓடரிலை படிப்பினம்."...ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ் சோதியை யாம் பாடக் கேட்டேயும்." எண்டு தொடங்க,எங்களுக்கு,"எப்ப உந்தப் பாட்டெல்லாம் முடிச்சு அவல் கடலை தரப் போறியள் எண்டு யோசனை ஓடிக் கொண்டிருக்கும்.



இடையிலை ஒரு பாட்டிலை ஒரு வரி வரும்..".. போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்.." எண்டு.நாங்கள் சின்னப் பெடியள் உதைக் கேட்டிட்டு, எங்களுக்கை சிரிச்சுக் கொள்ளுவம்.(பிழையா யோசிச்சுப் போடாதையுங்கோ.எங்களுக்கு உதை மாதிரி ஒரு கூடாத சொல்லொண்டிருக்குதெண்டு அந்தக் காலத்திலேயே தெரியும்.அவ்வளவு தான்.அட.. சொன்னால் நம்புங்கோப்பா.அடம் பிடிக்கிறியளப்பா..ம்ம்)அதெல்லாம் முடிஞ்சு,"போற்றி அருளகநின் ஆதியாம் பாதமலர்,போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்..........போற்றியாம் மார்கழி நீராடேல் ஓர் எம்பாவாய்.."எண்டு 20 ஆம் பாட்டும் முடிய பெடியளின்ரை முகத்தில சந்தோசத்தைப் பாக்கோணும்.அப்பா சொல்லி வேலை இல்லை.





பேந்தென்ன,திருநீறு,சந்தனம் எல்லாம் வாங்கிப் பூசி அடுத்த அற்றாக்குக்கு(Attack) றெடியாயிடுவாங்கள்.அடிபட்டுப் பிடிபட்டு,அந்த லக்ஸ்பிறே பாக்கை நிறைக்கிறதிலை தான் குறியாய் இருப்பம். எங்கடை ஊரிலை உள்ள கோயிலுகள் தங்களுக்கை ஒரு அகிறீமன்ற்(Agreement) வைச்சிருந்ததுகள் போல கிடக்குது.ஒண்டின்ரை பூசை முடியத் தான் மற்றதினரை பூசை தொடங்கும்.எண்டாத் தான் பக்த கோடிகள்(வேறை யார் அவல்,கடலைக்குப் ஓடிற நாங்கள் தான்)கோயிலுக்கு நிறைய வருவினம் எண்டாக்கும்.பண்டாரி அம்மன் கோயில் முடிய வைரகோயில்லை 6 மணிக்கும்.அது முடிய மாலந்தெணிப் பிள்ளையாரிலை 6.30 க்கும்,கடைசியா ஆலடிப் பிள்ளையாரிலை 7 மணிக்கும் பூசை நடக்கும்.



போகாத கோவிலெல்லாம் திருவெம்பாக்குத் தான் போவம்.ஒவ்வொரு கோயில்லையும் திருநீறு,சந்தன்ம் குடுக்க,திரும்பவும் ஏற்கனவே பூசிக்கிடக்கிற திறுநீறு சந்தனத்துக்கு மேலையே பூசுறது.காதிலை பூ வைக்க்கிறது பெரிய பாடாப் போடும்.முதல்க் கோவிலிலேயே பெரிய செம்பரத்தம் பூவையோ,தேமாப்பூவையோ காதிலை லௌட்ஸ்பீக்கரைஇ(Loud Speaker)கட்டிற மாதிரி வைச்சாப் பிறகு மற்றக் கோவிலிலை வாங்கிற பூவை எங்கை தலைக்கு மேலையே வைக்கிறது.அதிலையும் சில பேர் இரண்டு காதிலையும் ஒரு லௌட்ஸ்பீக்கரை முன்னுக்கும் மற்றதை பின்னுக்கும் பாக்கக் கட்டிற மாதிரி, முன்னுக்கும் பின்னுக்கும் பாக்கிற மாதிரி பெரிய செம்பரத்தம் பூவையோ,தேமாப் பூவையோ வைச்சுக் கொண்டு போவாங்கள்.ஒவ்வொரு கோயிலையும் போய் அங்கை தாற போவையும் காதிலை அடைவாங்கள்..ம்ம்ம்.



இப்பிடி எல்லாக் கோயில்லையும் வாங்கினதுகளை வீட்டை கொண்டு வந்து,சில வேளையில காலமைச் சாப்பாடே உதாத் தான் இருக்கும்.சிலவேளையில உதோடை சேர்த்து ஒரு றாத்தல் பாணோடை காலமை அலுவல் முடிஞ்சு போடும்.சாப்பிட்டு முடிய அந்த லக்ஸ்பிறே பாக்கெல்லாம் கழுவிக் கொடியில காயப் போட்டிடுவம்.பிறகு நாளைக்கும் எடுக்கலாம்(றீ ஊஸ் - Re Use)எண்டொரு முற்போக்கு சிந்தனை தான்.சில பேர் இதையே பள்ளிக் கூடத்துக்கு கட்டிக் கொண்டு வந்து இன்டேவலுக்கும்(Interval) சாப்பிடுவாங்கள்.இப்பிடியே திருவெம்பா போகும்.எங்களுக்கும் திருவெம்பாப் பூசை இருக்குது.முட்டிக்கொத்தாத்தைப் பிள்ளையாரிலை(முட்டிக் கொற்றவத்தைப் பிள்ளையார்)6 ம் பூசையும் மாயக்கைப் பிள்ளையாரிலை 7 ம் பூசையும் எங்கடை தான்.அந்த 2 நாளும் உபயகாரர் எண்டு எங்களுக்கு கொஞ்சம் கூட அவல்,கடலை,மோதகம்,வடை,பஞ்சாமிர்தம் எல்லாம் பூசைக்கு வந்த சனம் ஓரளவு போய் முடிய ஐயர் எடுத்துக் கொண்டு வந்து தருவார்.அந்த 2 நாளும் அலுக்க அலுக்கச் சாப்பிட உந்த அவல் கடலைப் பைத்தியம் எல்லாம் அதோடை தன்ரை பாட்டிலை நிண்டிடும்.உதைத் தான் சொல்லிறது, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்செண்டு.உதெல்லாம் சின்ன வயசுச் சமாச்சாரங்கள்.




இனி சங்கூதிப் பண்டாரத்துக்கு வருவம்.சங்கூதிப் பண்டாரம் எண்டால் என்னெண்டு தெரியாதாக்களுக்காண்டி,திருவெம்பாக் காலங்களிலை ஊரிலை இருக்கிற பெடியள் எல்லாம் ஒரு குழுவாக சேர்ந்து விடிய வெள்ளன எழும்பி,சேமக்கலம்,சங்கு எல்லாம் ஊதிக்கொண்டு,திருவெம்பாப் பாட்டுப் படிச்சுக் ஒண்டு போறதை தான் சங்கூதிப் பண்டாரம் எண்டு எங்கடை ஊரிலை சொல்லுறது.நீங்களெல்லாம் வெடிவால் முளைச்ச வயசுகளிலை, உங்கடை ஊர் சங்கூதிப் பண்டாரங்களிலை ஊதப் போயிருப்பியள்.அது நல்ல பம்பலாத் தான் போகும்.எங்கடை ஊரிலையும் சங்கூதிப் பண்டாரத்துக்கு ஊத போற பெடியள்,ஊரிலை இருக்கிற மற்ற எல்லாக் கோயிலுகள்ளையும் இருந்து சேமக்கலங்கள்,சங்குகள்,ஒரு பெற்றோல் மாக்ஸ்,திருவெம்பாப் பாட்டுப் புத்த்கம் எல்லாம் எடுத்து வைச்சுக் கொண்டு எங்கடை ஊர் வாசிகசாலைக் கட்டிடத்துக்குள்ளை தான் படுப்பாங்கள்.



விடிய 2,3 மணிக்கு எழும்பி,அந்தப் பனிக்குளிருக்கை ஒராள் பெற்றோல்மாக்ஸ் பிடிக்க,இன்னொராள் பாட்டுப் படிக்க,ஒவ்வொரு பாட்டும் முடியிற இடைவெளிக்குள்ளை சேமக்கலம் அடிச்சு,சங்கூத கொஞ்சம்,பக்கப் பாடு,பம்பலுக்கெண்டு ஒரு மிச்சம் எண்டு ஒர் 15 - 20 ஒண்டாப் போகும்.ஊரிலை இருக்கிற எல்லா ரோட்டாலையும் 2,3 தரம் போய் ஊதிப் போட்டு,வந்து 4 ,5 மணிக்குப் படுத்திடுவாங்கள்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டுக் காரர் பெடியளுக்கு ஒரு பெரிய கேத்திலுக்கை தேத்தண்ணியும்,கடிக்கிறதுக்கு,கல்பணிஸோ,மலிபன் பிஸ்கட்டோ இல்லையெண்டால் தட்டை வடையோ(அது தான் எங்கடை பருத்துறை வடை)குடுப்பினம்.



பம்பலாத் தான் இருக்கும்.வெடிவால் முளைச்ச வயசு தானே?வாசியாலைக்கை படுத்திருகேக்கை ஒருத்தன்ர சாரத்தை கலட்டிறது(ஆனால் எல்லாரும் உள்ளை காற்சட்டையும் போட்டு கொண்டு தான் வருவாங்கள்),காலைப் போடுறது,கையைப் போடுறது,நித்திரையைக் குழப்பிறது எண்டு கொசப்பு வேலையளுக்கும் குறைவில்லை.அதோடை சங்கூதிக் கொண்டு போகேக்கை றோட்டுக் கரையோடை காய்ச்சு நிக்கிற கொய்யா,மாதாளை,மாங்காய்,முத்தின வாழைக்குலையெல்லாம் இதோடை காணாமல்ப் போடும்.வாழைக்குலை முத்தாட்டிலும் பரவாயில்லை,திருவெம்பா தொடங்கிறதுக்கு முதல் வெட்டிப் போடோணும் எண்டு வெட்டிப் போடிறளவுக்குக் கூடச் சனம் இருக்குது.


அதோடை பட்ட சீசனும் தொடங்கீடும் எண்டதாலை(பட்டம் பற்றிய முந்தியதொரு என் பதிவு) வேலியளிலை கட்டி கிடக்கிற கமுகஞ்சிலாகையளும் திருவெம்ப்பாவோடை காணாமல் போடும்.அதோடை கடைசி,கடைசிக்கும் முதல் நாளுகளிலை ஒரு பறையை வாடகைக்கு எடுத்து சங்க்கூதிப் பண்டாரத்தோடை சேத்து அடிச்சுக் கொண்டு போற வழக்கமும் எங்கடை ஊரிலை இருந்துது.அந்தக் காலம் 50,100 ரூபா குடுத்தே ஒரு பறையை வாடகைக்கு எடுக்கலாம்.இப்ப 400,500 குடுக்கோணுமாம்.


பறையை ஒரு பெரிய கரியல் உள்ள சைக்கிளொண்டில்(உங்கடை அம்மப்பாமார்,அப்பப்பாமார் வைச்சிருந்திருப்பினம்.பெரிய வெங்காய மூட்டையள்,அரிசி மூட்டையள்,தவிட்டு,புண்ணாக்கு மூட்டையள் ஏத்திக் கொண்டு போகலாம்.இல்லாட்டில் குடும்பம் 4,5 பெடியள் எண்டு கொஞ்சம் பெரிசெண்டாலும் ஒரு பெரிய கரியல் பூட்டினால் தான் எல்லாத்தையும் ஒண்டா இழுத்துக் கொண்டு வல்லிறக்கோயில் மாதிரிப் பெரிய கோயிலுகளுக்குப் போகலாம்.)கட்டி,சும்மா பம்பலா அடிச்சுக் கொண்டு போறது.



ஆரும் பெரிசுகள்,பெடியளை வாசியாலையிலை வைச்சு அப்பிடி இப்பிடியெண்டு பேசியிருந்தால் அவற்றை வீட்டு வாசல்லை கொண்டு போய் விடிய வெள்ள்ன அவரை எழும்புமட்டும் அடிச்சு அவரை எழுப்பிறதுக்குத் தான் பறையடிக்கிறது.அப்பத்தான் அதுகளும் ,"உதகளுக்கேன் புத்தியைச் சொல்லுவான்,உதுகளைத் திருத்தேலாது" எண்டு யோசிக்குங்கள்.


நான் போனமுறை கனகாலத்துக்குப் பிறகு திருவெம்பாக்காலத்திலை ஊரிலை போய் நிண்டனான்.என்ரை ஒண்டை விட்ட அண்ணன் ஒருத்தன்.என்னை விட 3 வயசு கூட.அவன் இப்ப இருக்கிற சங்கூதப் போற பொடியளட்டைச் சொன்னான்"உந்தப் பறை கொண்டோய் அடிக்கிற குரங்குச் சேட்டையொண்டும் செய்யாதையுங்கோ.பாட்டை மட்டும் படிச்சுக் கொண்டு போங்கோ.ஊரிலை சனம் நிம்மதியாப் படுக்கிறேல்லையே?" அதுகளும் விட்டிச்சுதுகளே.உவரென்ன எங்களெக்குச் சொல்லிறது.இந்தமுறை உவற்றை வீட்டு வாசல்லை தான் கொண்டோய் வைச்சு அடிக்கிறது.


அவனுக்கும் தெரியும் தானே.அவனும் உவங்களின்டை வயசெல்லாம் கடந்து வந்தவன் தானே. அவனும் உப்புடி ஆற்றையோ வீட்டு வாசல்லை அடிச்சு ஆரையும் எழுப்பியிருந்திருப்பான் தானே.?பூவரசங் கம்பெல்லாம் முறிச்சு கேற்(Gate) வாசல்லை வைச்சிட்டுத் தான் படுத்தவன்.அவன்ரை வீட்டு வாசல்லை றோட்டுக்கு லைற்ற் போட்டு வைச்சிருக்கிறான்.ஆனால் அதுக்கு சுவிச் கறண்ட் எல்லாம் இவன்ரை வீட்டையிருந்து தான்.விடியக் காலமை வெள்ளன 3 மணிக்குப் போய் நிண்டு கொண்டு அவன்றை வீட்டு வாசல்லை நிண்டு அடிச்சிருந்திருக்கினம்.அவன் எழும்பி வந்து உள்மதிலடியில நிண்டு கொண்டு ஆராக்கள் எண்டெல்லாம் வடிவாப் பாத்துப் போட்டு,லைற்றை நிப்பாட்டிப் போட்டு,பூவரசங்க் கம்போடை மதிலாலை ஏறி றோட்டுக்குக் குதிச்சு,வெளு வெளு எண்டு வெளுத்தெடுத்துவிட்டான்.அவங்கள் சைக்கிள்,பறை எல்லாத்தையும் போட்டிட்டு,அங்காலை இருந்த வேலிக் கண்டாயங்களுக்குள்ளாலையும் மதிலாலையும் ஏறி விழுந்து ஓடித் தப்பிட்டாங்கள். ம்ம்ம்.. அப்பிடி இப்பிடியெண்டு திருவெம்பாக் கால ஞாபகங்கள் பம்பலா,பசுமையா,இப்பவும் கிடக்குது.ம்ம்ம்ம்ம்


புறிம்பு - புறம்பாக/வேறாக
தாம்பாளம் - நைவேத்தியம் சுவாமிக்குப் படைக்கப் பயன் படும் தட்டு
வாசியாலை - வாசிகசாலை
வல்லிறக்கொயில்- வல்லிபுரக்கோவில்
மாதாளை - மாதுளை
முத்தின - முற்றின
கமுகஞ்சிலாகையள் - கமுகம் சலாகை
காரியமில்லை - பெருந்தவறல்ல
சட்டுப் புட்டென - உடனேயே
சேமக்கலம் - ஒரு வகை கோயில் மணி என்று சொல்லலாம்

4 comments:

  1. வசீகரன்December 21, 2010 at 6:54 AM

    ம்ம்ம் கலக்கலாக திருவெம்பாவைப் பற்றிப் பதிவெழுதியுள்ளீர்கள். ஆனால் திருவெம்பாவைக்கு பறை அடிப்பதாக நான் எங்களூரில் கேள்விப்படவேயில்லை.புதிதான ஒரு விடயம் ஒன்றைக் கூறியுள்ளீர்கள்

    ReplyDelete
  2. வடலியூரான் ...கலக்கிடிங்க போங்க.....நல்லா இருக்கு...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நன்றி வசீக்ரன் வருகைக்கு. எனக்கு மற்ற் ஊர்களைப் பற்றித் தெஇரியாது.ஆனால் எங்கள் ஊரிலே அது ஒரு சும்மா பம்பலுக்காகத் தான் அடிக்கப் படுகிறது.உங்களது ஊர் எதுவென்று சொல்லவில்லையே

    ReplyDelete
  4. கருணையூரான் வருகைக்கும் கருத்திடுகைக்கும் நன்றி

    ReplyDelete