Thursday, February 4, 2010

மோதகமும் பல்லுக் கொழுக்கட்டையும்

(கலப்படமேயில்லாத கற்பனைக் கதையான இதிலே வரும் பெயர்களையோ, ஊர்களையோ அல்லது வேறு சம்பவங்களையோ உங்கள் மூளையை ஆட்டிக் கீட்டி,கசக்கிப் பிழிந்து யோசித்து, வேறு நபர்களுடனோ, இடங்களுடனோ அல்லது சம்பவங்களுடனோ சம்பந்தப்படுத்தி யோசித்தால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல)


இலந்தையூர் என்ற பெயருக்கேற்றாற் போல அந்த ஊரிலே, கணிசமானவளவு இலந்தை மரங்கள் பூத்துக்குலுங்கி, காய்த்து, சிறுவர்களிடம் கல்லெறியும் வாங்கிக் கொண்டிருக்கின்றன.வானம்பார்த்த பூமியான அந்த ஊரிலே கோடைகாலத்து கொதிக்கும் வெயிலின்,தகிக்கும் தணலைத் தாங்கித், தண்மையைத் தம்மூர் மக்களுக்காக வழங்கும் தியாகச் செம்மல்களாக ஊரின் நடுவேயுள்ள ஆலமரமும் வேறு சில பெருமரங்களும்.ஊரை தொழில்ரீதியாக எடுத்துப்பார்த்தால் பெரும் போகம் ,சிறுபோகம் என இரு போகங்களிலும் நெல்பயிரிடும் பெரும்பான்மை விவசாயிகளும், வியாபாரம் செய்யும் சிலரும்,உத்தியோகம் பார்க்கும் மிகுதியினருமாக அடங்கி விடுவார்கள்.


இயற்கையாலும், அரசாங்கங்களாலும், அரச உயரதிகாரிகளாலும், நிறுவனங்களாலும் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் அவ்வளவாகப் பூர்த்தி செய்யப்படாவிடாலும் அவர்கள் வாழ்க்கையும் ஏதோ ஓடுகிறது அல்லது ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது ஓட்டத் தம்மைப் பழக்கிக் கொண்டுவிட்டார்கள்.


என்னதான் இல்லாத போதும் எமது சமுதாயத்தில் வேரோடிச், சமூகத்தை செல்லரித்துக் கொண்டிருக்கும் சாதிப் பிரச்சினை மட்டும் இங்கும் இருக்கின்றது. உடையார், படையார், சடையார் என்று மூன்று சாதியினர் ஊரில் உள்ளனர்.இதில் பெரும்பான்மையாக உடையார் ஊரின் சனத்தொகையின் 70 - 75 % ஆக உள்ளனர். மிகுதியினரை எடுத்தால் படையார் 15 - 20 % உம் சடையார் அண்ணளவாக 10% உம் உள்ளனர்.படையார் ஊரின் வடக்கு மற்றும் கிழக்கின் கணிசமான இடங்களிலும், இலந்தையூரின் மத்தி மற்றும் மேற்குப் பகுதிகளிலும் செறிந்து வாழ,சடையார் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளிலும் வசிக்கின்றனர்.அந்தந்தப் பகுதிகளில் அவரவர் சாதிகளுக்குப் பிரத்தியேகமான சில தெய்வங்களின் கோவில்களும் உள்ளன. ஏனைய முழு இடங்களிலும் உடையார் தான் செறிந்து வாழ்(ஆள்)கின்றனர்.




யார் ஊருக்கு முதலில் வந்தது என்பதில் தொடங்கி பலவிடயங்களில் உடையாருக்கும் படையாருக்கும் இடையில் அடிக்கடி சண்டைகள் வரும்.ஆனால் நல்ல வேளையாக இதுவரைக்கும் உயிரிழப்புக்கள் வரை சென்றதில்லை.உடையார் அடிப்பார்கள்.பதிலுக்கு படையாரும் திருப்பி அடிப்பார்கள்.அடிவாங்கிய உடையார் மீண்டும் வந்து அடிப்பார்கள்.இவ்வாறு இவை நீண்டு கொண்டே செல்லும்.இதனாலும் உழைப்பதற்காகவும் படையாரில் பலர் அயலூருக்குப் பஞ்சம் பிழைக்கச் சென்றிருந்தனர்.


கடைசியாகவும் இதே போல் படையார் சாதிப் பெண்பிள்ளையொருத்தியுடன் உடையார் சாதிப் பெடியங்கள் சேட்டை விடப் போனபோது படையார் சாதிப் பெடியங்கள் அடித்துப் போட்டார்கள்.இதனால் இலந்தையூரின் அயலூர்க்காரர்களிடம் பொல்லுகள், கொட்டன்கள் போன்ற ஆயுதங்களையும் மற்றும் படையார் சாதிப் பெடியங்கள் எங்கேயெல்லாம் ஒளித்திருக்கிறார்கள் என்பது போன்ற புலனாய்வுத் தகவல்களையும் பெற்றுப், படையாருக்கு நல்ல சாத்துக் கொடுத்து விட்டார்கள் உடையார்கள்.படையாருக்கு எழும்பி நிற்கமுடியாத மரண அடிதான்.

*************************

உடையாரில் மயில்வாகனம் ராஜேந்திரன் அல்லது "ம.ராஜே"ந்திரன் அண்ணை, பொன்னையா சரத்குமார் அல்லது "பொன்.சரத்குமார்" அண்ணையும் "சுனில்" அண்ணை ஆகியோரும் படையாரில் "ஞானசம்பந்தமண்ணை", "கணேஷன்" அண்ணை,"தேவேந்திரன்" அண்ணை மற்றும் "பாலமுரளிதரன்" அண்ணையும்,சடையாரில் "ரவூ"சீலன் அண்ணையும் கொஞ்சம் செல்வாக்கானவர்கள் தான்.

***************************
கோயில்களில் விசேட பூசைகளின் போது அடியார்களுக்கு மோதகம்,பல்லுக் கொழுக்கட்டை என்பன வழங்கப்படுவதுண்டு.இந்த இரண்டு பிரசாதங்களையும் செய்வதில் உடையார் சாதியைச் சேர்ந்த ம.ராஜேந்திரன் அண்ணையும் பொன்.சரத்குமார் அண்ணையும் பெயர் போனவர்களாயினும் பல்லுக் கொழுக்கட்டை என்று வந்தால் ராஜேந்திரன் அண்ணையின் கைவரிசையும், மோதகம் என்று சொன்னால் சரத்குமாரின் மோதகத்தின் ருசியும் பேசப்படுபவை தான்.



மோதகமும் கொழுக்கட்டையும் வெளித்தோற்றத்தில் வேறுபட்டிருந்தபோதும் அவற்றினுள்ளே உள்ள "உள்ளுடன்"(மோதகம்,கொழுக்கட்டையினுள்ளே வைக்கப்படும் இனிப்புக் கலைவை)ஒன்றே.பயற்றை, குண்டுகளாலழிந்த பூமியிலிருந்து வரும் கந்தகப் புகையைப் போன்ற சுடுநீராவியைச் செலுத்தி உயிருடன் கொன்று(அவித்து),தேங்காயை 48,72 பல்குழல்களால்(திருவலகை)தாக்கிக் கொன்று, அந்த சடலங்களையும்(தேங்காய்ப்பூ),அவர்களின் இரத்தத்தைப் பிழிந்து(தேங்காய்ப்பால்) அதனுடன் சீனியும் சேர்த்து, சிறிது துவைத்தெடுத்துத் தான் உள்ளுடன் தயாரிக்கப்படும்.பின்னர் அரிசிமாவை எடுத்து, சுடுநீர் விட்டுக் குழைத்து, அதனை வட்டமாகத் தட்டி, அதனுள் உள்ளுடனை வைத்து,சற்று நீட்டாகத் தட்டி,அவை சந்திக்கும் இடத்தில் பல்லுப் போல் கையால் செய்வதை பல்லுக் கொழுக்கட்டையென்றும்,உருண்டையாக செய்வதை மோதகம் என்றும் அழைப்பார்கள்.

*****************************

ஒருமுறை ராஜேந்திரன் அண்ணை செய்கிற பல்லுக்கொழுக்கட்டையோ அல்லது சரத்குமார் அண்ணை செய்கிற மோதகமோ நல்லது என்று ஒரு கௌரவப் பிரச்சினையொன்று வந்துவிட்டது.தேவேந்திரம் அண்ணைக்கும்,பாலமுரளிதரன் அண்ணைக்கும் ராஜேந்திரன் அண்ணையின் பல்லுக்கொழுக்கட்டை பிடித்துப் போவதற்கு விசேடமாக ஒரு காரணமும் இல்லாவிட்டாலும் அவரின் செல்வாக்குக் காரணமாக தமது இருப்புக்கு ஏதேனும் அச்சுறுத்தல் வந்துவிடுமோ என்றும், அவர் வாங்கிக்கொடுக்கிற அரைப் போத்தல் கள்ளையும் பீடிக் கட்டையும் நன்றி உணர்வோடு நினைத்து, "ராசேந்திரம் அண்ணை உங்கடை பல்லுக் கொழுக்கட்டை தான் பெஸ்ட்" என்றனர்.



சுனில் அண்ணையும் ரவூசீலன் அண்ணையும் சரத்குமார் அண்ணையின் மோதகத்துக்கு ருசி கூட என்றனர்.கணேஷன் அண்ணைக்கும் ஞானசம்பந்தம் அண்ணைக்கும் மோதகமோ,பல்லுக்கொழுக்கட்டையோ நல்லது என்று முடிவெடுப்பதில் கொஞ்சம் சிக்கல்.இறுதியில் இவ்வளவு நாளும் பல்லுக்கொழுக்கட்டை சாப்பிட்டு அலுத்துவிட்டிருந்ததனாலும்,வெளியூரில் இருந்த படையார் சாதியினப் பெடியங்கள் இந்தமுறை மோதகத்தின்றை ருசியைப் பாருங்கோவன் என்று கடிதம் போட்டிருந்ததாலும் ஒரு "நம்பிக்கயான மாற்றமாக" மோதகம் நல்லது என்று சொல்லி சரத்குமாரண்ணையின் மோதகத்தை தூக்கிப் பிடிக்க ஆயத்தமாகினர்.

***************************

இப்பிடி ஆள் ஆளுக்கு கொஞ்சம் ஊரில் செல்வாக்கான தலைகளெல்லாம் அங்கும் இங்கும் பிரிந்து நின்றதால் ஊராருக்கு, மோதகமோ கொழுக்கட்டையோ நல்லது என்று தெரிவதில் குழப்பம்.இதனால் கட்டாக்காலி கால்நடைகள் வயலுக்குள் புகுந்து சேதாரம் விளைவித்த பிரச்சினை முதல் பக்கத்து வீட்டுக்காரனுடன் ஓடிய கந்தசாமி பெண்சாதியின் கேஸ் வரைக்கும் விசாரித்து தீர்ப்புச் சொல்லும் ஊரின் மணியகாரரான(பஞ்சாயத்து தலைவர் போன்ற ஒரு ஊர்த்த்லைவரின் பதவி) தயானந்தம் அண்ணை பஞ்சாயத்தைக் கூட்டினார்.




பஞ்சாயத்தும் கூடியாச்சுது.தயானந்தம் அண்ணை பட்டு வேட்டியை மடிச்சுக் கட்டிக் கொண்டு,வெற்றிலை பாக்கை மென்றபின்னர், வெள்ளிச் செம்பிலிருந்த தண்ணியை கொஞ்சம் ஊற்றி வாயைக் கொப்பளித்துக் கொண்டே, தோளில் இருந்த சால்வையை எடுத்து உதறி மீண்டும் போட்டுக் கொண்டு,"ஏனப்பா பதினெட்டுப்பட்டி சனமும் வந்தாச்சுதா? பிறகு ராமசாமி வரேல்லை.கந்த சாமி வரேல்லை என்று சொல்லக் கூடாது.ஒருவன் வந்தால் அப்பிடியே கப்புன்னு பிடிச்சுக்கணும்.தெரியுதா?" என்று வடிவேலு பாணியில் சொல்லிக் கொண்டே,பஞ்சாயத்தைத் தொடக்கி,பஞ்சாயத்திலே பிரச்சினையை விளக்கினார்.இப்போது உங்களுக்கு பல்லுக் கொழுக்கட்டை பிடித்திருந்தால் கொழுக்கட்டை என்ற போதும், மோதகம் பிடித்திருந்தால் மோதகம் எனும் போது கையை உயர்த்துமாறும் கேட்டுக்கொண்டார்.


படையார் சாதியும் சடையார் சாதியும் பல்லுகொழுக்கட்டை அலுத்திருந்த காரணத்தினால் மோதகத்திற்கு கையை உயர்த்தினர்.உடையார் சாதியில் பெரும்பாலானோர் சரத்குமார் அண்ணைக்கும் ஞானசம்பந்தம் அண்ணைக்கும் இடையே, படையார்களின் பகுதியிலுள்ள அவர்களின் கோவில்களில் மோதகம் பிடிக்கும் வேலையை அவர்களிடமே விட்டுத்தந்து,அவர்களே தங்களை சுயநிர்ணயம் செய்து, சுயமாக மோதகம் பிடிக்க அனுமதித்தல் என்பது போன்றதொரு ஒரு ரகசிய உடன்பாடு உள்ளதாக தவறாகக் கற்பிதம் செய்துகொண்டு,கொழுக்கட்டைக்கு கை உயர்த்தினார்கள். தயானந்தம் அண்ணை கைகளை எண்ணி, 50 % மேற்பட்டோர் கொழுக்கட்டையே நல்லது என்று தீர்மானித்துள்ளதாகக் கூறினார்.சுனில் அண்ணை கொழுக்கட்டைக்கு ஆதரவான உடையாரில் சிலர் இரண்டு கையையும் உயர்த்தி வாக்கு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறினாலும் தயானந்தம் அண்ணைக்கோ,சனத்துக்கோ கொழுக்கட்டையின் ருசி பற்றியதான் மக்கள் தீர்ப்பில் அவ்வளவாக சந்தேகம் வரவில்லை.


கொழுக்கட்டை நல்லதென்றாலென்ன மோதகம் ருசியென்றாலென்ன எமக்குப் பிரச்சினையில்லை என்றிருந்த படையார் சாதியினர் தாம் ஆதரித்த மோதகம் நல்லதென்று தெரிவுசெய்யப்படவில்லையாயினும், தாங்கள் ஓரளவாவது ஒற்றுமையாக கொழுக்கட்டை பிடிக்கவில்லையென்று சொன்னதையும், என்ன தான் இருந்தாலும் மோதகமும் கொழுக்கட்டையும் ஒன்றே எனத் தாம் பகுத்தறிந்து கொண்டதையுமிட்டு திருப்திப் பட்டுக் கொண்டே பஞ்சாயத்த்தை விட்டுச் சென்றனர்.

7 comments:

  1. ஆகா.. :) இப்படியெல்லாம் கொழுக்கட்டை,மோதகம் பிடிக்கலாமா?நல்ல சமைப்பீங்க போலிருக்கே.. ;)

    ReplyDelete
  2. ////குண்டுகளாலழிந்த பூமியிலிருந்து வரும் கந்தகப் புகையைப் போன்ற சுடுநீராவியைச் செலுத்தி உயிருடன் கொன்று(அவித்து),தேங்காயை 48,72 பல்குழல்களால்(திருவலகை)தாக்கிக் கொன்று, அந்த சடலங்களையும்(தேங்காய்ப்பூ),அவர்களின் இரத்தத்தைப் பிழிந்து(தேங்காய்ப்பால்) அதனுடன் சீனியும் சேர்த்து, சிறிது துவைத்தெடுத்துத் தான் உள்ளுடன் தயாரிக்கப்படும்.பின்னர் அரிசிமாவை எடுத்து, சுடுநீர் விட்டுக் குழைத்து, அதனை வட்டமாகத் தட்டி, அதனுள் உள்ளுடனை வைத்து,சற்று நீட்டாகத் தட்டி,அவை சந்திக்கும் இடத்தில் பல்லுப் போல் கையால் செய்வதை பல்லுக் கொழுக்கட்டையென்றும்,உருண்டையாக செய்வதை மோதகம் என்றும் அழைப்பார்கள்/////

    ஓகோ கேகவே பயமா இருக்கு இதை எப்படி சப்பிடுற..ஆனாலும் ஏதோ சாப்பிடாதானே உயிரோட இருக்கலாம்...
    நீங்கள் சொல்ல வந்த விசயம் புரிகிறது..ம்..வாழ்த்துக்கள்...தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  3. நன்றி லோசன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கு,.உங்களுக்குத் தெரியாதா நான் நன்றாக சமைப்பேன் என்று?விரைவில் உங்களுக்கும் சமைத்துத் தருகிறேன்.மறுக்காமல் என் சமையலை ஏற்றுக் கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

    ReplyDelete
  4. கருணையூரான் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.கேட்கவே பயமாயிருந்தால் எப்பிடி உதை தானே சாப்பிட்டதுகள் அந்த சனம்

    ReplyDelete
  5. நண்பரே முதல் வரியை நன்றாக வாசிக்கவும்

    கலப்படமேயில்லாத கற்பனைக் கதையான இதிலே வரும் பெயர்களையோ, ஊர்களையோ அல்லது வேறு சம்பவங்களையோ உங்கள் மூளையை ஆட்டிக் கீட்டி,கசக்கிப் பிழிந்து யோசித்து, வேறு நபர்களுடனோ, இடங்களுடனோ அல்லது சம்பவங்களுடனோ சம்பந்தப்படுத்தி யோசித்தால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல

    ReplyDelete
  6. காதலர்கள் வராதே என்றால் வா என்று அர்த்தமாம் தொடாதே என்றால் தொடு என்று அர்த்தமாம். அதைப் போல வாசகர்களிடமிருந்து எதிர்பார்ப்பது போல எனக்குத் தோன்றியது. ஒரு விஷயம் இதுக்கும் காதலைத் தான் உதாரணம் காட்டுவாயா என கேட்கக் கூடாது.

    ReplyDelete