Saturday, January 8, 2011

23ம் இலக்க கம்பனித் திருத்தச் சட்டமும் குமிழ்த் தலைமைகளும்

(கற்பனைக்காகவே எழுதப்பட்ட இந்தக்கதையிலே வரும் பெயர்களையோ, இடங்களையோ,சம்பவங்களையோ வேறுயாருடனுமோ அல்லது இடங்களுடனோ அல்லது சம்பவங்களுடனோ பொருத்தி நீங்களே செய்தி கொள்ளும் சுய கற்பனைகளுக்கு நான் பொறுப்பல்ல.இந்தக் கதையை கதையாகவே எடுத்துக் கொள்ள்வீர்கள் என்று பதிவரால் திடமாக நம்பப்படுகிறது)


வில்லங்கை என்ற பெயருடன் விசாலமான அந்த நகரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் அமைந்திருக்கின்றது இந்தக் கதையில் வருகின்ற கம்பனியும்.இதற்கருகில் விந்தியா,போக்கிஸ்தான்,வீனா,பஸ்யா,சுமெரிக்கா என மல்ற்றிநாஸனல் கம்பனிகளும்(Multi National - பல்தேசியக் கம்பனிகள்) உள்ளன.ஓரளவு சிறிய இந்தக் கம்பனியில்(மற்றக் கம்பனிகளுடன் ஒப்பிடும் போது) அண்ணளவாக 10,000 பேர் வரை வேலை செய்கின்றார்கள். அந்த நிறுவனம் திமிங்கிலம்,குமிழ்,வசலீன்,முறங்கி என நான்கு திணைக்களங்களாக(Departments) பிரிக்கப்பட்டுள்ளது.திமிங்கிலத் திணைக்களத்தில் ஒரு அண்ணளவாக 7000 பேரும்,ஏனைய திணைக்களங்களில் சராசரியாக ஆயிரம் பேரும் பணிபுரிகின்றனர்.




கம்பனிக்காணியின் வடக்கு,கிழக்கு பகுதியில் குமிழ்,வசலீன் திணைக்களங்களும் மிகுதியில் பெரும்பாலான இடங்களில் தனித் திமிங்கிலத் திணைக்களப் பகுதியும் திமிங்கிலத்தோடு சேர்ந்ததாகவே முறங்கித் திணைக்களத்தின் அலுவலக சொத்துக்களும் காணப்படுகின்றன.அந்தந்த திணைக்களங்களில் பணிபுரிபவர்கள் நிறுத்துவதற்காக அந்தந்தத் திணைக்களங்களுக்கு அருகிலேயே அவரவர் திணைக்களங்களுக்குப் பிரத்தியேகமாக வாகனத் தரிப்பிடங்களும் அதற்கு மேலதிகமாக எரிபொருள் நிரப்புநிலையங்களும் காணப்படுகின்றன.சில வீடுகளுக்கு "கோகுலம்","தாருஸ்லாம்,"தாஜ்மகால் என்று பெயர் இருப்பது போல,இந்த வாகனத் தரிப்பிடங்களுக்கும்,"கிரிகோணமலை", "குழம்பு","சுலுவில்" என்று பெயர் கூட இட்டிருந்தார்கள்.



கிரிகோணமலை வாகனத் தரிப்பிடம்/எரிபொருள் நிரப்புநிலையம், குமிழ் திணைக்களத்திற்கருகிலும்,"சுலுவில்",வசலீன் திணைக்களத்திற்கருகிலும்,"குழம்பு" திமிங்கிலத் திணைக்களத்திற்கருகிலும் முறையே அமைந்திருந்தன.இதிலே கிரிகோணமலை எரிபொருள் நிரப்பு நிலையம் சுற்றியும் மேலேயும் மூடப்பட்டு ஒரே ஒரு வாசலைக் கொண்டு இயற்கையாகவே ஒரு குகையைப் போன்ற தோற்றமுடையது.அதனுள்ளேயிருந்து கொண்டு யார் யார் எங்கெங்கு வருகிறார்கள் போகிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியாமலே கண்காணித்துக் கொண்டிருக்கமுடியும்.இயற்கையாகவே அமைந்த வாகனத் தரிப்பிடமாக்கப்பட்ட குகை அது.



அதற்குள்ளே இருந்து மறைந்திருந்து கொண்டு யார் யார் துறை சார் ஆலோசகர்கள்(Consultants),வெளிநாட்டு வாடிக்கையாளர்கள்(Clients)சக போட்டிக் கம்பனிகளுக்கு வந்து போகிறார்கள் என்பதையும் அந்தக் கம்பனிகளுக்கும் அந்த ஆலோசகர்கள்,வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமலே நோட்டம் விடக்கூடிய இடம் என்பதால் தான் விந்தியா,வீனா,சுமேரிக்கா,பசியா போன்ற பல்தேசியக் கம்பனிகளும் தங்கள் வாகனங்களையும் கிரிகோணமலையில் தரிக்க அனுமதிக்குமாறோ அல்லது எரிபொருள் நிரப்புகிற சாக்கிலாவது சிறு சிறு நோட்டங்களைவிடலாம் என்ற அங்கலாய்ப்பிலே எரிபொருள் நிரப்பவாவது அனுமதிக்குமாறு வில்லங்கைக் கம்பனியை வற்புறுத்துவதுண்டு அல்லது கெஞ்சுவதுண்டு.




வில்லங்கையின் மிகப்பெரியதும்,வசதிகள் மிக்கதும், திமிங்கிலத் திணைக்களத்தில் பணிபுரிவோர் வாகனங்களை நிறுத்தப் பயன்படுவதுமான "குழம்பு" வாகனத் தரிப்பிடம், செயற்கையாக அமைக்கப்பட்டதாலும், யார் யார் வருகிறார்கள், போகிறார்கள் என்று வெட்ட வெளிச்சமாக ஏனைய பல்தேசியக்கம்ப்னைகளுக்குத் தெரியவந்துவிடும் என்பதனாலும் தான் அதன் முக்கியத்துவம் குறைவு.ஒரு படத்தில் வடிவேலு," யூ புறம் இந்தியா,இந்தியன்(You from India,Indian),"யூ புறம் டமில்நாடு,டமிலன்" (You from Tamil Nadu, Tamilan)," ஐ புறம் இங்க்லான்ட், இங்க்லிஸ்மான்(I from England,Englishman )என்று சொல்லியது போல இந்தக் கம்பனியிலும் திமிங்கிலத் திணைக்களத்தில் பணி புரிபவர்களை திமிங்கிலவர் என்றும் மற்றையவர்களையும் முறையே குமிழர்,வசலீனர்,முறங்கியர் என்றும் இந்தப் புள்ளியிலிருந்து மேற் கொண்டு செல்லும் போது அழைக்கலாம்.



இது ஒரு பொதுக் கம்பனி.தனிப்பட்ட ஒருவருக்கும் உரித்துடையாகமல்,இங்கே வேலை செய்யும் அனைவருக்கும் சம உரிமை உடையது இந்தக் கம்பனி.ஆனால் இங்கு தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கங்கள்,தொழிலாளர் நல அமைப்புக்கள்,கம்பனி ரீதியிலும்,திணைக்கள ரீதியிலும் தலைவர்கள் பலர் தாராளமாக உள்ளார்கள்.மொத்த ஊழியகளின் 50 % இற்கும் அதிகமானவர்களின் ஆதரவைப் பெற்றவர் கம்பனியின் செயற்பாட்டுத் தொழிற்சங்கத் தலைவராகலாம்.அவருக்கு தொழிலாளர்களின் இடமாற்றத்தை தான் விரும்பியபடி வழங்க,திணைக்களத் தலைவரால் வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்தாக்க என்று பல அதிகாரங்களோடு,கம்பனியை வெளியில் பிரதிநிதித்துவப் படுத்தும் பொறுப்பும் உண்டு.



அத்துடன் கம்பனியின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் சபை என்ற தொழிலாளர் நல சபைக்கும் கம்பனி முழுவதும் இருந்து,ஊழியகளிடையே கூடுதல் விருப்பைப் பெற்ற 225 பேர் தெரிவு செய்யப் படுவார்கள். பழமைமிக்க இந்தக்கம்பனியின் தொழிற்சங்கத் தலைவார்களாக முன்னைய காலங்களில் வெள்ளைக்காரத் துரைமார்களும்,பிரபுக்களும் இருந்துள்ளார்களாம்.பின்னர் தொழிற்சங்கத் தலைமை கம்பனிக்குள்ளே பணிபுரியும் சுதேசிகளுக்குள்ளேயிருந்தே தெரிவு செய்யப் படவேண்டும் என்ற தொழிலாளார்களின் ஒன்றிணைந்த,தொடர்ச்சியான போராட்டங்களின் பின்னர் வெள்ளைக் காரத் துரைமார் தொழிற்சங்கத் தலைமைப் பொறுப்பை இந்த நாட்டைச் சேர்ந்த துரைமார்களுக்கே 1948 ம் ஆண்டளவில் கையளித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டனர்.




சேனனாயகம் என்பவர் தான் முதலாவது சுதேசியத் தொழிற்சங்கத் தலைவாரானார்.பின்னர் சிறிதுசிறிதாக திமிங்கிலவர்களுக்கும்,குமிழர்களுக்கும் இடையே சிறு சிறு உரசல்கள் வரத் தொடங்கின.துரைமாரின் காலத்தில் விந்தியக் கம்பனியிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த ஊழியர்களை தங்கள் கம்பனி ஊழியர்களாக ஏற்கமுடியாதென்றும்,அவர்கள் தொழிற்சங்கத் தலைவரையோ,நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையைத் தெரிவு செய்யும் தேர்தல்களிலோ வாக்களிக்கமுடியாதென்றும்,அவர்களுக்கு கம்பனியின் அடையாள அட்டையை வழங்கமுடியாதென்றும்,அவர்கள் இந்தக் கம்பனியைச் சாராதவர்கள் அதாவத "கம்பனியற்றவர்கள்" என்றும் அவர்கள் தங்கள் முந்தைய விந்தியாக் கம்பனிக்கே செல்லவேண்டும் சேனானாயகம் சொன்னபோது தான் முதலாவது முறுகல் வந்தது.





தங்கள் திணைக்கள இலச்சினையைத் தான் நீங்களும் பாவிக்கவேண்டும் என்று குமிழரை வற்புறுத்தியதால் 1956 இலும் தொடர்ந்து 1958,1978,1981,1983 இல் திமிங்கிலத்தவர்களது ஒற்றை றூட்டான,குறுகிய நோக்கான சிந்தனைகளால் சிறு சிறு சலசல்ப்புக்கள் இரு திணிக்களத்தாரிடையேயும் ஏற்பட்டு,இரு சாராருக்கும் சிறு சிறு காயங்கள்,சேதாரங்களுடன் முடிந்தன. கம்பனியிலே திறமையாகப் பணிபுரியும் ஊழியர்களைத் தெரிந்தெடுத்து, அவர்களை பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு அதிகளவு குமிழர் திறமையடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவதை அப்போதிருந்த தொழிற்சங்கத் தலைமை அறிந்து திறமையடிப்படையிலிருந்த முறையை வஞ்சனையோடு கோட்டாவுக்கு 1972 ம் ஆண்டு மாற்றியதால் குமிழர் சீறி எழுந்தனர்.




இந்தப் பாகுபாடுகள்,புறக்கணிப்புக்கள்,பக்கச்சார்புகளெல்லாத்துக்கும் எதிராக குமிழர்களின் தொழிற்சங்கத்தலைவராக இருந்த எஸ்.ஜே.வீ. நல்லநாயகம், கம்பனிக்கு உள்ளேயும் வெளியேயும் ஆட்களைத் திரட்டிப் போராடினாலும் ஓரவஞ்சனைகள் தொடரத்தான் செய்தது.புறக்கணிப்பின் வலியுணர்ந்த குமிழர் தங்களது திணைக்களத்தை தனியான கம்பனியாக உருவகித்து,அதை உருவாக்க திடசங்கற்பம் பூண்டனர்.கறுவியவர்கள் முறுகவும் தயங்கவில்லை.83 ம் ஆண்டு வீதியால் சென்று கொண்டிருந்த 13 திமிங்கிலவர்களை முகமூடி அணிந்து மறித்த குமிழர் அணி புளியங் கம்பு,பூவரசங்க் கம்பு,துவரங்க் கம்பால் சரமாரியாக போட்டுத் தாக்கிவிட்டது.




அடி வாங்கிய அவர்களும் இது போன்றதொரு சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தவர்கள் போல,சொல்லி வைத்தாற் போல,வழியில் கண்ட குமிழர்களையெல்லாம் வாட்டியெடுத்தார்கள்.சில கார்களின் கண்ணாடிகளும் உடைத்து நொருக்கப்பட்டன.அதன் பின் திணைக்கள ரீதியிலான திமிங்கில - குமிழ் பாகுபாடு மேலும் உக்கிரமானது.திமிங்கிலத் திணைக்களத்திலே பணிபுரிந்த குமிழ் தொழிற்சங்கவாதிகளுக்கு நெருக்கமானவர்கள் குமிழ்த் திணைக்களத்துக்கு இடமாற்றித் தூக்கி எறியப்பட்டனர்.இடைவெளிகள் தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டே போயின.அதற்கேற்றவாறு சந்தர்ப்பங்களும் வாய்த்தன.குமிழர்களும் தங்களது திணைக்களம் தனிக் கம்பனியாவதே இதற்கு ஒரே தீர்வாகும் என மேலும் உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டனர்.




இந்த நேரத்தில் அண்மையிலிருந்த விந்தியாக் கம்பனி,குமிழ்த் திணைக்களத்திற்கு பக்கபலமாக நிற்பது போல் அவர்களுக்குக் காட்டி கொண்டு,வில்லங்கையில் தனது பிடியை இறுக்கி தனது ஆளுகைக்குள் வில்லங்கையைக் கொண்டு வர முயன்றது.அதனால் திமிங்கிலவருடனும்,குமிழருடனும் பேசி 23 ம் இலக்க கம்பனித் திருத்தச் சட்டத்தை அமுல்ப்படுத்த வில்லங்கையை நிர்ப்பந்தித்தது.தாங்கள் எதிர்பார்த்தது தமக்கு கிடைக்கவில்லையே என்று குமிழர்கள் வெதும்ப,எங்கள் கம்பனியின் இந்த வசதிகளையெல்லாம் இவர்கள் அனுபவிப்பதுவோ என்று திமிங்கிலவர் புழுங்க,விந்தியாவோ வேறு கம்பனிகள், வில்லங்கையில் தங்கள் கையை இறுக்கமுதல் தான் முந்தவேண்டும் என்றெண்னி,கிரிகோணமலை வாகனத் தரிப்பிடத்தை தன் கைகைளில் விழுத்த காய்களை நகர்த்தியது.




திணைக்களங்கள் தங்கள் வேலைகளுக்கு தாங்களே ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை(மனிதவள முகாமையாளார் பதவி - Human Resource Manager),தங்கள் திணைக்களம் அமைந்துள்ள காணியின் பராமரிப்புரிமையைக்(அதுதான் அந்தத் திணைக்களத்தின் பகுதிகளை கூட்டி,துப்பரவாக்கும் பணிகளை மேற்கொள்ளுவதோடு திணைக்களத்துக்குட்பட்ட பகுதியில் முழு ஆளுகையைக் கொண்டிருந்தல்) மற்றும் பொலிஸ் அதிகாரம்(அது தாங்க பாது காப்பு உத்தியோகத்தர்களை நியமித்தல்,கையாளல்),தங்கள் ஊழியர்களுக்கு எந்தவகைப் பயிற்சியை(கல்வி அதிகாரம்)வழங்குவது,நிதி முகாமைத்துவத்தில்சில உரிமைகள் என மிகச் சில ஏற்பாடுகளை செய்து 23 வது கம்பனித் திருத்தச் சட்டமாக அறிமுகப்படுத்தியது.




ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் திணைக்களங்கள்,கம்பனிக்கு எதிராக(இறைமை..?) செயற்படுவதாக கம்பனி உணருமாக இருந்தால் கம்பனியின் தொழிற்சங்கத்தலைவரின் உத்தரவுக்கமைய அவரால் நியமிக்கப்பட்ட அவரின் கைப்பொம்மையான திணைக்களத்தலைவர்(Department Head) திணைக்களத்தை அதன் தன்னிச்சையான செயற்பாடுகளிலிலிருந்து நிறுத்தி கம்பனியின் நேரடிக்கண்பாணிப்பில் கொண்டுவர முடியும் என்ற ஏற்பாட்டை விந்திய சொருகியது.குமிழ்த்திணைக்களம் தனிக்கம்பனியானால்,தன்னிடம் இருக்கும் 28 திணைக்களங்களுக்கும் தனித்தனி கம்ப்னியாகப் பிரிந்து செல்லத் துணிச்சலை அது ஏற்படுத்திவிடும் என்று பயந்து குமிழரின் கோரிக்கையைக் குப்பையில் போட்டது விந்தியா.இது ஒரு கையால் கொடுத்து மறு கையால் வாங்குவது போலாகும் என குமிழ்த் தொழிற்சங்கத் தலைவர்கள் கொதித்தெழுந்தார்கள்.




எல்லாருடைய நோக்கமும் ஒன்றாக இருந்த போதும் ஆளுக்கொரு திசையில் யார் தலைமைவகிப்பது என்று தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு திமிங்கிலத் திணைக்களத்தவர்க்களை சரமாரியாக எதிர்க்கத் தொடங்கினார்கள்.இப்படித் குமிழ்த்தொழிற்சங்கவாதிகளை ஒன்றாக சேரவிடாமல் பிரித்தாளுவது கூட விந்தியாவின் நிர்வாகமேயென சாதாரண குமிழ்த்தொழிலாளர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.இதனால் திமிங்கில,குமிழர் தரப்புக்களிடையே கைகலப்புக்கள்,கார் உடைப்புக்கள்,சாதரண அலுவலக நேரங்களிலையே நடைபெறத் தொடங்கின.



அதிலும் வேலுத்தம்பி என்ற குமிழ்த் தொழிற்சங்கத் தலைவ மீதுதான் கொஞ்சம் பயம் .தான் நினைத்ததை,எடுத்த காரியத்தைக்,எவருக்கும் விலை போகாமல் வீரியமாகவே செய்து கொண்டிருந்தார் அவர்.அவருக்கும் ஒரளவு குமிழர்கள் ஆதரவளித்ததனால் குமிழர்களின் தொழிற்சங்கத் தலைவராகி,தன் செயற்பாடுகளை மேலும் மெருகூட்டி தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்.இதைப் பார்த்த விந்தியா அவர்கள் தனிக்கம்பனியானால் தனது 28 திணைக்களங்களும் தனித்தனியாகுவதை அது தூண்டுமெனபதாலும் கிரிகோணமலை வாகனத் தரிப்பிடத்தை சுமேரிக்கா சுவீகரித்துக் கொள்ளலாமென்பதாலும் வேலுத் தம்பியையும் அவரது கைகலப்புக்களையும் முடிவுக்குக் கொண்டு வர,வில்லங்கை கம்பனிக்கு, அவர் மீது பொய்குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவரையும் அவருடன் தீவிரமாகச் செயற்பட்ட பலரையும் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க ஆலோசனை வழங்கியது.



அவரது பணிநீக்கலுடன் அவர்களது தனிக் கம்பனிக்கான போராட்டமும் பெரும்பாலும் நீர்த்துப் போய்விடுமென இரு கம்பனிகளும் மிகவும் நம்பின.இவையெல்லாம் அந்தக் கம்பனி கடந்து வந்த பாதை.அதன் வரலாறு நெடுகலும் சண்டைகள்,சச்சரவுகள்,பலவற்றை கடந்து வந்ததாலும்,அவற்றை கடந்தாலும் அதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் முருங்கை மரமேறியதாலும் அதைப் போல சிறியதாகவிருந்த ஏனைய கம்பனிகள் எங்கேயோ செல்ல இந்தக் கம்பனியோ இன்னும் கீழேயே சென்றது.வேலுத் தம்பியின் வெளியேற்றத்தின் பின் குமிழர்களின் தொழிற்சங்கங்களை சிரா.சம்பந்தன், நெக்லஸ் பவானந்தா,நித்யானந்த சங்கரி, மந்திரகாந்தன், பித்தார்த்தன்,ஸ்னோ கணேசன்,பஜந்திரகுமார்,லாவோஜி லிங்கம், சோறுமுகம் கண்டமான்,சந்தனதேவீ,பீதாம்பரம்,கு.ரங்கா எனப் பலர் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.




இருந்தபோதும் அவர்களுக்கிடையே எந்த அளவிலே தமது திணைக்களத்துக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது என்பது தொடர்பிலே கொள்கைரீதியில் குழப்பங்களும்,உடன்பாடின்மையும் காணப்படுகின்றது. பட்டுவேட்டித் தலைமைகள் பலவிருந்தும் பாடாய் தங்கள் பிரச்சினைகளை ஒன்றாக ஒற்றுமையாக, எடுத்துச் சொல்லமுடியவில்லையே என்பதே அனேகமான குமிழ் ஊழியர்களின் ஏக்கமாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.இணைந்திருந்து இயலுமானவரை நடைமுறைச்சாத்தியாமனவற்றைப் பெறுவோமென ஒருவரும், இல்லையில்லை இந்தளவும் எங்களுக்கு வேண்டுமென இன்னுமொருவரும்,ஒரு ஆரம்பபபுள்ளியாக 23 ம் திருத்தச் சட்டத்திலிருந்து தொடங்கி தொடர்ந்து செல்வொமென மற்றொருவரும்,அப்பிடித் தொடங்கினால் உலக்கை தேய்ந்து உளிப்பிடியானது போல ஆகிவிடுமென இன்னுமொருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் பழியைப் போட்டுத் தப்பிக்கப் பார்க்கின்றனர்.



இவர்கள் எல்லாரும் தங்களின் தலைவர்கள் என்றால் ,தங்களுக்காக,தங்களை பிரதிநிதித்துவப் படுத்துவர்களாக இருந்தால்,ஏன் எங்களுக்காக ஒன்றாக,ஒற்றுமையாக, பேசி இது தான் எங்களுக்கு வேண்டும் என வெட்டு ஒன்று துண்டு இரண்டு என எடுத்துக் கூறி இழுபட்டுப் போய்கொண்டிருக்கின்ற எங்கள் பிரச்சினைகளுக்குப் தீர்வைப் பெற்றுத்தரமுடியாது என்பதே குமிழகளின் கேள்வியாகும்.எங்களது பிரச்சினைகள் தீர்ந்து போனால் உங்கள் காலத்தை,தலைமைப் பதவியை, கொண்டுநடத்தமுடியாது என்பதாலோ பிரச்சினைகளை நீட்டுகிறீர்கள் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.திமிங்கிலவருடன் சமாதானமாகப் போகமுதல் இவர்களுக்குள்ளே ஒற்றுமை அவசியம் என்பது அங்குள்ள குமிழ் ஊழியர்களின் ஒருமித்த கருத்தாகும்

Wednesday, January 5, 2011

அது ஒரு அழகிய மழைக்காலம்

மழை எல்லாருக்கும் பிடிக்கும்.மழையில் நனைய மனம் துடிக்கும்.ஆனால் சளி வந்திடும் எண்டு மூளை அலாம்(Alarm) அடிச்சுப் போடும்.பிறகென்னன்டு நனையிறது...?ஆனால் தமிழ்ப் படங்களிலை மட்டும் ஹீரோவும் ஹீரோயினும் தடிமனெல்லாம் வராமல் எப்படித் தான் மழையிலை நனைஞ்சு லவுசு பண்ணினமோ எண்டு தெரியேல்லை.அதிருக்க,இண்டைக்கு உங்களையும் சேத்து ஒருக்கால் நனைய வைப்பம் எண்டு சின்ன ஒரு பிளான்.பாப்பம்.


வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி மழை,தென் மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை எண்டு இரண்டு காலப்ப்பகுதிகள் தான் இலங்கைக்கு மழையை வழங்குகின்ற காலப்பகுதிகள் எண்டு சின்னனிலை உந்த சமூகக்கல்வியும் வரலாறும் எண்ட புத்தகத்திலை படிச்சதா சின்னதொரு ஞாபகம்.அதிலையும் வடகீழ்ப்ப்பருவக்காற்று மட்டும் தான் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கு மழை வழங்குகின்ற காலம்.பொதுவாக ஐப்பசி தொடக்கம் மார்கழி வரை தான் இந்தக்க்காலம்.இயற்கை கூட எங்களை புறக்கணிக்கிறதா..?நாடெங்கும் வருடமெல்லாம் மழை கொட்ட எங்களுக்கு மட்டும் இரண்டு மாத மழை. மழையில்லை,மலையில்லை,நதியுமில்லாமல் நாதிய்ற்ற சனமான ஈழத்துத் தமிழ்ச்சனம்.ம்ம்ம்ம்.




பொதுவாக கும்பத்துக்கை(நவராத்திரி) மழை தொடங்கி, கந்தசசட்டி, பெருங்கதை, திருவெம்பா போன்ற விரதங்களுக்கெல்லாம் கொட்டி,தைப்பொங்கலோடை வெளிச்சிடும் எண்டு பெரியாக்கள் சொல்லுவினம்.அவர்களது அனுபவக் கணிப்பு பெரும்பாலும் பொய்க்காது.சிலவேளைகளிலை முந்திப்பிந்தி, காலந்தப்பிப் பெய்யும். மழை வருமட்டும் எல்லாரும் எப்பாடா மழை வரும் எண்டு பாத்துக்கொண்டிருப்பினம்.என்னடா இன்னும் மழையைக் காணேல்லை,இந்தமுறை வராதோ எண்டு எல்லாரும் மழைக்குத் தவங் கிடப்பினம்.ஐப்பசி மழை வந்தால் தானே வெங்காய நடுகையோ,நெல் விதைப்பையோ தொடங்கலாம்.ஆனால் வந்த பிறகெண்டால் அது வாங்கிற பேச்சு உலகத்திலை ஒருத்தரும் வாங்கியிராத பேச்சாயிருக்கும்."இழவு விழுந்த மழை","அரியண்ட மழை",பெய்ஞ்சால் பெய்ஞ்சு போட்டுப் போகோணும்.இது ஒரு வேலையுஞ் செய்ய ஒரு வழியில்லை.அடுப்பெரிக்க விறகுமில்லை.தெருவாலை போக வழியில்லை,உடுப்புத் தோய்ச்சுக் காயப்போட வழியில்லை,மாடுகளை மேய்ச்சலுக்கு அவிட்டு விடேலாதாம்,கூலி வேலையுமில்லை, அடியோ பிடியோ எண்டு,அது தாராளமாகத் திட்டுவாங்கும்.அந்த மழை பற்றிய பதிவொன்று தான் இது.



"என்ன நேற்றுப் பெய்ஞ்சது காணாதெண்டு இண்டைக்கும் வரப்போகுது போல கிடக்குது.இப்பவே கோலங் கட்டுது.நேற்றையான் மாரி(மாதிரி) பராதியிலை விறகுகளை எடுத்துவைக்க அயத்துப் போகாமல் இப்பவே அதிலை கிடக்கிற கொக்காரையள், மட்டையள், பழம் மூரியள்,பன்னாடையள் கொஞ்சத்தைக் கொண்டு போய் அடுப்பு மாடத்திலை காயப் போடு,அடுப்பு வெக்கைக்கு நேற்றையான் ஈரமெல்லாம் காய்ஞ்சு போடும்.மிச்சத்தைக் கொண்டு போய் குசினிக்குப் புறத்தாலை இருக்கிற பட்டடையிலை அடுக்கி வை.பேந்து நாளைக்கு,நாளையிண்டைக்கு தேவைப்படும் " எண்டு அம்மாவுக்கு, அம்மம்மா ஓடர் போடுறா.



"இஞ்சை முத்தத்திலை காயவைச்ச கொட்டை எடுத்த புளியையும் பினாட்டையும் எடுத்து சைற் அறைக்கை வைச்சுப் போட்டு பினாட்டுப் பாயைச் சுத்திக் கொண்டு போய் சின்னறைக்கை வை பாப்பம்" எண்டு மழை வரவை எதிர் பார்த்து, தம்பி தங்கச்சியோடை பழங்கொப்பியொற்றையிலை கடதாசிக் கப்பல் கட்டும் பணியில் கரிசினையோடை ஈடுபட்டுக் கொண்டிருந்த என்னை அம்மா குழப்பிறா.. நான் ஆஆய்ய்ய்ய்.. எண்டு இழுக்க......., இப்ப உதிலை கிடக்கிற ஈக்குப்பிடியாலை வாங்கப் போறாய்..சொன்னதைச் செய்து பழகு பாப்பம்.. ... பழகிறியள் பழக்கம் இப்பவே......எண்டு அம்மம்மா என்னை உறுக்குறா...நானும் வாய்க்குள்ளை வந்த எதையோ சொல்லிக் கொண்டு சொன்ன வேலையைச் செய்யிறன்...



வானம் இப்ப இன்னும் கொஞ்சம் இருட்டத் தொடங்கீற்றுது.அப்பர் மாலந்தெணித் தோட்டதுக்கை கட்டியிருந்த மாட்டை அவிட்டுக்கொண்டு வாறதுக்கு ஓடிறார்.இப்படி எல்லாரும் ஆளாலுக்கொரு திசையிலை ஓடி ஒவ்வொரு வேலையாப் பாத்துமுடிக்கவும் மழை வரவும் சரியாக்கிடக்குது.மழை கொஞ்சம் கொஞ்சமாத் துமிக்கத் தொடங்கி,கொஞ்ச நேரத்திலை கொட்டத் தொடங்குது.நாங்கள் மூண்டு பேரும் ஆ.. அய்ய்ய்ய் மழை... எண்டு துள்ளிக் குதிக்கிறம்.என்ரை ஒராம் ஆண்டு கொப்பியெல்லாம் கப்பலாக உருமாறி ஒண்டுக்குப் பின்னாலை ஒண்டா போய்க் கொண்டிருக்குது.



எங்கட்டை வீட்டிலை இரண்டு முகடுகள் செங்குத்தாச் சந்திக்குது.அதிலை ஒரு பீலி ஒண்டும் இருந்தது.அந்தப் பீலியாலை மழைத் தண்ணி பயங்கர force ஆ வந்து விழும்.அந்தப் பீலித் தண்ணி வந்து விழுகிற இடத்துக்கு கொஞ்சம் தள்ளித் தான் எங்கடை கப்பலுகள் தங்கன்ரை கன்னி அணி வகுப்பைத் தொடங்கி அணி வகுத்துச் செல்லும்.பீலித் தண்ணி விழுகிறதாலை ஏற்படுகின்ற அலைகளாலை எங்கடை கப்பலுகள் ஓரளவு கொஞ்சத் துர்ரத்துக்குப் போகும்.சிலதுகள் உந்தக் குப்பையள் ஏதாவது தடக்கி கொஞ்சத் தூரத்திலேயே நிண்டிடும்.சிலது பிரண்டு,கவிண்டு,தாண்டு போகும்.இதையெல்லாம் தாண்டி ஆற்றை கப்பல் கனதூரம் போகுதெண்டு எங்கள் மூண்டு பேருக்கும் போட்டியாய் இருக்கும்.கொஞ்சம் கடும் மழையெண்டால் ஓட்டுகுள்ளாலையும் அங்கை இஞ்சையெண்டு வீட்டுக்குள்ளையும் ஒழுகத்தொடங்கிவிடும்.பிறகு அந்த ஒழுக்குகளுக்கும் ஒவ்வொரு யத்துகளைக் கொண்டு போய் வைக்கிறதே பெரும் வேலையாப்போடும் எங்களுக்கு.




மழையோ கொட்டோ கொட்டெண்டு கொட்டிக் கொண்டிருக்கும்.எல்லாரும் ஒண்டுக்க்கு,இரண்டு,மூண்டு ஸ்வேற்றருகளையும் போட்டுக் கொண்டு கை,காலை குறட்டி வைச்சுக்கொண்டு,மழை எப்பாடா வெளிக்கும் எண்டு வெளிவிறாந்தை தாவாரத்துகு கீழை தூத்துவானம் அடிக்க அடிக்க,அதை ரசிச்சு,அந்த தூவானத்தை அனுபவிச்சுக் கொண்டிருப்பம்.ஆனால் அது விடுமே?அது மின்னல் வெட்டி,முழங்கி,கொட்டோ கொட்டெண்டு கொட்டிக்கொண்டிருக்கும்.மின்னல் வெளிச்சம் தெரியுதெண்டால் எல்லாரும் இரண்டு காதுக்குளையும் விரலை ஓட்டி இடியை எதிர்கொள்ள றெடியாகிடுவம்.



இடி எங்கடை வீட்டுக்கு மேலை விழுந்திடக்கூடாது எண்டதோடை,அது இரதை வாழை மரத்திலை விழுந்தால் அதிலியிருந்து தங்கக்கட்டி கிடைக்குமாம எண்டு அந்தக் காலத்திலை ஆரோ அவிட்டுவிட்ட ரீலை நம்பி, எங்கடை இரதை வாழையிலை இடி விழுந்தால் நல்லாயிருக்கும் எண்டு சின்னப் பிரார்த்தனையும் உள்ளுக்குள்ளாலை நடந்து கொண்டிருக்கும்.இப்ப கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு, மழை பெய்யிறது கொஞ்சம் நிண்டிட்டுது.எண்டாலும் கொஞ்சம் கொஞ்சமாத் துமிச்சுக் கொண்டிருக்கும்.எங்கனரை வீடுக்குப் பின்னலை இருக்கிற புளியங்காணி வேலிக்குள்ளாலை ஊரில் வெள்ளம் எல்லாம் எங்கடை வீட்டை ஊடறுத்த்தான் ரோட்டைப் போய்ச்சேரும்.இப்ப முழங்காலுக்கு மேலை வெள்ளம் முத்தத்தாலை ஓடிக்கொண்டிருக்கும்.




மழை விட்டவுடனை அந்த வெள்ளத்துக்கை தெம்பல் அடிச்சு, அந்தத் தெம்பல்த் தண்ணியிலை மற்றாக்களை நனைப்பிக்கிறது தான் எங்கடை அடுத்த விளையாட்டாயிருக்கும். "இஞ்சை மாட்டடி கிடக்கிற கிடையைப் பாருங்கோ.அதுகளும் மழைக்காக்கும் குளம் குளமா மூத்திரம் பெய்ஞ்சு தள்ளியிருகுதுகள்.மாட்டடியெல்லாம் சேறாக்கி வைச்சிருக்குதுகள்.உதிலை கேற்று வாசல்லை உந்த புளியங்காணிக்கிள்ளலை வந்த வெள்ளம் அள்ளிக் கொண்டுவந்த, வெள்ள மண் கொஞ்சத்தை அள்ளிக் கொண்டு வந்து போடுங்கோ பாப்பம்.பாவம் கண்டுத் தாச்சி மாடு பேந்தும் இரவு உந்தச் சக்கலுக்கை தான் படுக்கப் போகுது" எண்டு அப்பாவுக்கு அடுத்த கொமாண்ட் அம்மம்மா போடுறா. (இதெல்லாம் ஒராம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு கால ஞாபகங்கள்..இனி தமிழ்ப் படங்களிலை வாறமாதிரி வேணுமெண்டால் ஒரு " 7, 8 ஆண்டுகளுகுப் பிறகு" எண்டு வசனத்தைப் போட்டிட்டு வாசியுங்கோவன்) .



ஆம்பிளையள் எல்லாம் சைக்கிளை எடுத்துக் கொண்டோ,குடையைப் பிடிச்சுக் கொண்டோ மழைப் புதினங்களைக் கதைகிறதுக்காகவேண்டி வாசியாலையிலையோ அல்லது அரசடிச் சந்தியிலையோ கூடுவினம்.கூடி நிண்டு, "மட்டக் களப்பிலை இடுப்பளவுக்கு வெள்ளமாம்..","மலையிலை(திரிகோணமலையை மலை என்றும் அழைப்பார்கள்)காத்துக்கு வீட்டுச் சீற்றெல்லத்தையும் கழட்டிக் கொண்டு போட்டுதாம்","புத்தூர்ச் சந்தியில நிண்ட ஆலமரம் பாறி விழுந்திட்டுதாம்.","இரணைமடுக்குளம் நிரம்பீற்றுதாம்","ஓடக்கரைக்கை சைக்கிளை மேவி வெள்ளம் ஓடுதாம்" எண்டு அடியா பிடியா எண்டு நியூசுகளை அள்ளி விடுவினம்.


CNN, BBC க்காரரெல்லாம் நாங்கள் பேசாமல் தம்பசிட்டியிலையை ஒரு றிப்போட்டரை வசிச்சிருந்திருந்தால் எங்கடை சோலி,ஈசியா முடிஞ்சு போயிருக்கும் எண்டு நினைக்கிற அளவுக்கு கதை களை கட்டும்.ஆனால் அரைவாசிக்கு மேலை அப்பிடி இப்பிடி வாற கதை தானேயெண்டு எங்களுக்கு நாங்களும் அதிலை நிண்டு கதைக்கிற அளவுக்கு வயசுக்கு வந்தாப் போலை தான் விளங்கிச்சுது. சிலவேளைகளிலை எங்கடை வெங்காயப் பயிர்ச்செய்கை தொடங்கினாப்போலை வந்து எங்கடை வாழ்வை நாசமறுத்தும் இருக்குது இந்த மழை.. விடாமல் நாட்கணக்கில் கொட்டித் தீர்த்து வெங்காயம் எல்லாம் வெள்ளத்திலை மூழ்கினாப்போல அந்த வெள்ளத்தை மிசின்(வோட்டர் பம்) வைச்சு இறைச்சு விடவேண்டிய துன்பிய்ல அனுபவமெல்லாம் எங்களுக்கெல்லாம் வந்திருக்குது.வெள்ளத்துக்கு வெங்காயமெல்லாம் அழுக, போட்ட முதலெல்லாம் தோட்டத்துக்கையே தாண்டுபோன சோகங்களும் எங்கள் வாழ்வில் உண்டு.விடாது கொட்டி,எங்கள் வெங்காயங்களை அழுகவைத்து,எங்கள் வெங்காயங்களின் நாற்றம் தாங்காமல் நாங்களே மூக்கைப் பொத்திக்கொண்டோடவேண்டிய துர்ப்பாக்கியநிலைக்கெல்லாம் ஆளாக்கியிருக்கிறது இந்த மழை.ஏன் இந்தமுறையும் கோடைக்காய் செய்யிற நேரம் கொட்டுகொட்டெண்டு கொட்டி,பயிரெல்லாத்தையும் அழிச்சுப் போட்டுது.இப்பவென்னடாவெண்டு பாத்தால் வழமையா வைகாசிப் பறுவத்துக்கே ஒரு அந்தர் ஐயாயிரத்தைத் தாண்டாத வெங்காயம்,இந்தமுறை மாரிக்காய் நடுகைக்கே எண்ணாயிரம்,ஒம்பதாயிரம் விக்குதெண்டால் பின்னைப் பாருங்கோவன்.

என்ன இருந்தாலும் ஊரிலை மழையெண்டால் அந்த மாதிரித் தான் இருக்கும்.அது ஒரு அழகிய மழைக்காலம் தான்.

முத்தம் - இந்த முத்தம் காதலர்கள் பரிமாறிக்கொள்வதல்ல.முற்றத்தின் ஈழத்துப் பேச்சு வழக்கு

பாறி - வேரோடு சாய்ந்து அல்லது வேர் அழுகி, இத்துப் போய் பெரு மரங்கள் விழுவதைக் குறிக்கப் பயன்படும்

பீலி - இரண்டு கூரைகள் சந்திக்கும் போது ஏற்படுத்தும் நீரோட்டத்தை ஏந்துவதற்குப் பயன் படுத்தப் படுகின்ற அமைப்பு. அத்தோடு பனக் கிழங்கின் தண்டும் பீலியென்றே அழைக்கப் படுவதுண்டு.

தாவாரம் - வீட்டு,கொட்டில் நிலத்துக்கும், கூரைக்கும் இடைப்பட்ட நிலப் பகுதி என்றும் சொல்லலாம்.

தூத்துவானம்/தூவானம் - மழைத்துளிகள் காற்றுக்கு சிறிதாக பறந்து வருதல்

அயத்துப் போதல் - மறந்து போதல்
யத்து - பாத்திரம்
பட்டடை - விறகுகள், பாத்திரங்கள்,வைக்கோல் போன்றவற்றை பக்குவமாக அடுக்கி வைக்கப் பயன்படும் அமைப்பு

மாடம் - இடம் என்றும் சொல்லலாம்.அடுப்புக்கு பின் பக்கம் உள்ள பகுதி தான் அடுப்பு மாடம் எனப்படும்.இதே போல் படமாடம் என்ற சொல்லும் உண்டு

வெக்கை - வெப்பம்
சக்கல் - சகதி
கிடை - நிலை என்றும் சொல்லலாம்.என்ன கிடை இது?அலங்கோலமாகக் கிடக்கும் போதுதான் இது பெரும்பாலும் பாவிக்கப்படும்

மழைக்காக்கும் - மழை என்ற படியால் தான் போலிருக்குது என்று விரித்து விளங்கிக்கொள்ளலாம்

தெம்பல் - வெள்ளத்தினுள் துள்ளிக் குத்த்து விளையாடுதல்
பராதி - வேலைப் பளுவில் கவனிக்காமல் விட்டு விடுதல் கொக்காரை,மூரி,மட்டை,பன்னாடை - பனையிலிருந்து கிடைக்கப்பெறும் விறகுப் பொருட்கள்

பிறத்தாலை - பிறகாலே/பின்னாலே
பேந்து - பிறகு
குறட்டி - உள்ளுக்குள் இழுத்து கை கால்களை மடித்து குளிரிலிருந்து தற்காத்துக் கொள்ளுதல்

நாளையிண்டை -நாளை மறுநாள்
கண்டுத்தாச்சி - கர்ப்பந்தரித்த மாடு
ஆற்றை - யாருடைய
ஒண்டுக்க்கு,இரண்டு,மூண்டு ஸ்வேற்றருகளையும் - வழமையாகப் போடுகின்ற ஒரு சுவேற்றருக்குப் பதிலாக இரண்டு,மூன்று சுவேற்றைகளைப் போடுதல் என்று விரித்து விளங்கிக் கொள்ளப்படலாம்

அவிட்டுவிட்ட ரீலை - புழுகு
பறுவம் - பூரணைதினம்
மேவி - மேலால் என்று தான் இங்கே பொருள் படும்.இன்னொரு பொருள் அவன் மேவி இழுத்திருக்கிறான் என்று அவனது தலை சீவப்பட்டிருக்கும் முறையையும் குறித்துநிற்கவும் பயன்படும்