Sunday, August 29, 2010

கள்ளிக்காட்டுப் பிள்ளைத்தாச்சி நல்லாப் பெத்த கவிஞனடா...!!!

"இது ஒரு பொன்மாலைப் பொழுது" என்ற பாடலில் தொடங்கிய வைரமுத்துவின் திரையிசைப் பாடலெழுத்தாளர் பயணம் அண்மையில் வந்த "உசிரே போகுது..." வரைக்கும் மிகவும் வெற்றிகரமாகவும்,தமிழ் சினிமாப் பாடலாசிரியர்களிடையே வைரமுத்துவுக்கு ஒரு சிம்மாசனத்தையும் கொடுத்து,தொடர்ந்தும் முன்னோக்கி,இன்னும் மேல்நோக்கி வீறுநடைபோட்டுக் கொண்டிருக்கின்றது.



இந்தியாவின்,தமிழ்நாட்டின் மதுரைமாவட்டத்திலுள்ள தேனியில் பிறந்து,வளர்ந்த வைரமுத்து வரிந்த,வரைந்த வரிகள் எல்லோர் வாய்க்குள்ளும் எப்போதும் முணுமுணுக்கப்படுவதற்கு அவற்றில் காணப்பட்ட உயிரோட்டமும்,இலகு தமிழ் நடையும்,அடுக்கடுக்கான வரிக்கோர்வைகளும் காரணங்களில் சிலவாக அமைகின்றன.


எனக்கு மட்டும் தான் வைரமுத்துவைப் பிடிக்கும் என்பது போலவும்,வேறு எவருக்கும் வைரமுத்துவைத் தெரியாது என்பது போலவும்,அல்லது நான் தான் வைரமுத்துவைக் கண்டுபிடித்து மற்றவர்களுக்கு அறிமுகப்ப்படுத்திவைப்பது போலவும் அல்லது ஐந்து முறை தேசிய விருதுபெற்ற வைரமுத்துவுக்கு நான் அளிக்கும் இந்த அங்கீகாரத்தால் தான் அவர் வெளியே தெரியப் போகின்றார் என்பது போலவும் எண்ணி நான் பதிவிடுவதாக தப்பாக நினைக்கவேண்டாம்.அதை ஏற்கனவே பலர் தேவைக்கும் அதிகமானவளவு என்னைவிட மிகச் சிறப்பாக,நன்றாக வைரமுத்துவை வாழ்த்தி,வரவேற்று,செய்துவிட்டார்கள்.நான் என் மனதில் பட்ட,எனது குருட்டுப் பார்வைக்கு,இருட்டிலே தெரிகின்ற கறுப்புபு வைரமுத்துவைப் பற்றி சிறிது பதியலாம் என்று தான் நினைக்கின்றேன்.அவ்வளவு தான்.




காதல் ததும்பிவழிகின்ற,காதல் சொட்டும் வரிகளோடு காதலை,உறவுகளின் சேர்க்கையை,காதல் பிரிவை,காதல் சோகத்தை,இளைஞர்களுக்கு அறிவுரையை,சமூகநீதியை முன்னிறுத்தி என்று ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சினிமாப் பாடல்களிலும் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சுவை ஒழுக,வகைவகையாய் தந்துவிட்டார் வைரமுத்து.
ஒவ்வொரு பாடலையும் ஆறி அமர்ந்து,ஆராய்ந்து ஆறேழு பதிவே எழுதிப் போடலாம்.ஆனால் அவற்றைவிட வைரமுத்துவின் கவிதையைப் பற்றிப் பேசவே இந்தப்பதிவு.


அதுவும் வைரமுத்துவே அவற்றை வாசிக்கும் போது அதிலுள்ள கம்பீரமும்,சந்தி பிரித்து,சத்தம் ஏற்றி இறக்கி,வந்திருப்பவர்களை வயிறு நிறைய வைப்பதில் வைரமுத்துவுக்கு நிகர் வைரமுத்துவே.முறுக்கிய மீசையுடன்,கறுத்தச்சிங்கம் கர்ச்சிக்கின்றபோது அந்த கர்ஜனையிலே,கம்பீரத்திலே, தமிழின் வலிமை தெரியும்,பெருமை புரியும்.தமிழ் திக்கத் திகட்டி சுவைத்து இனிக்கும்.அவர் எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம்,கருவாச்சி காவியம்,காதலித்துப் பார் என்ற பல கவிதைத் தொகுப்புக்களிடையே முழுமையாக எனக்கு வாசிக்கக் கிடைத்தது ஆனந்தவிகடனில் தொடராக வந்து கொண்டிருந்த கருவாச்சி காவியம்.


அப்பா என்ன வரிகள் அது.அந்த மாட்டுக் கொட்டிலுக்குள் கருவாச்சிக்கு பிள்ளைபிறந்த விதத்தை வைரமுத்து எழுதியிருந்த விதம்,இப்படியெல்லாம் பொம்பிளைகளை கஸ்ரப்படுத்தி பிள்ளையைப்பெற ஏன் கடவுள் வைத்தானோ என்று எண்ண வைத்தது.அப்பா,அவளின் வறுமை,சூழல்,அதோடு பிள்ளையைப் பெற தன்னந் தனியே அவள் பட்டவலிகளை தானே அனுபவித்தது போல,அவளாகவே மாறி,அவளின் வேதனைகளை வெளிக்கொண்டுவந்திருந்தார்.இதெல்லாம் கவிப்பேரரசுவின் கவித்துவம் என்ற மகா சமுத்திரத்தில் சிறு துளிகள் மட்டுமே.



இவற்றையெல்லாம் விட அண்மையில் தனது பிறந்தநாளுக்கு கவனிபாரற்றுக்கிடந்த மூத்த கவிஞர்களை கணக்கெடுத்துப் பாராட்டும்,பரிசும் உவந்தளித்த அந்த நல்ல குணம் உட்படப் பல குணாதிசயங்கள் அவரிடம் எனக்குப் பிடிக்கின்ற போதும் ஒரு உறுத்தல் இருக்கின்றது.கலைஞரைக் கட்டிப் பிடித்து,அவர் காலடியில் கிடப்பது.அதுவும் அரசிய்ல கலப்பற்று,கவிதைக்காய்,தமிழுக்காய்,கலைஞரின் கைபிடிப்பாராக இருந்தால், அந்தக்கைகுலுக்கலில் களங்கம் இல்லாமல் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்ப்து என் சின்னதொரு அவா.



கள்ளிக்காட்டுப் பிள்ளைத்தாச்சி நல்லாப் பெத்த கவிஞன் உண்மையில் கவனமாகாப் பாதுகாக்கப்படவேண்டிய கன்னித் தமிழின் சொத்தே.

வைரமுத்துவின் கவிதைகளில் எனக்குப் பிடித்த/உங்களில் பலருக்கும் பிடித்த,எழுதவோ படிக்காவோ தெரியாதென்பதால் எழுதாமல் விடப்பட்ட வைரமுத்துவின் அம்மா பற்றிய காணொளியை இங்கு பகிர்ந்துள்ளேன்.பார்த்து ரசியுங்கள்.

Saturday, August 7, 2010

மோட்டுச் சிங்களவன் - 25 வது பதிவு

எமது சமூகத்தில் பல பழக்கவழக்கங்கள் இருக்கின்றன.அவ்வாறு புரையோடிப் போயிருக்கின்ற பழக்கவழக்கங்களில் சிலவற்றை , ஏன் நாம் பின்பற்ற வேண்டும்? என்ன நோக்கத்திற்காக பின்பற்ற வேண்டும்?அதில் ஏதாவது தவறுகள் உள்ளதா?அல்லது காலத்திற்கேற்றாற் போல அதில் நாம் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்தவேண்டுமா?இவ்வாறெல்லாம் நாம் ஆராய வேண்டுமா? அல்லது ஆராய்ந்தும் அதே பழக்கவழக்கத்தையே கண்மூடித்தனமாக செய்துகொண்டேயிருக்கின்றோமா?அல்லது ஒருவன் அப்பிடி யோசித்தால் கூட அவனை அப்பிடி யோசிக்க விட்டிருக்கிறோமா?ஏன் யோசிக்க விட மறுக்கிறோம்?ஏன் கண்ணாடிக்கூண்டுக்குள்ளேயே தொடர்ந்தும் இருந்தும் யோசித்துக் கொண்டிருக்காமல்,வெளியே வந்து யோசித்தால் என்ன? என்பது போன்ற ஒரு சில கேள்விகளை நாங்கள் எப்போதாவது எம்மை நோக்கி கேட்டிருக்கிறோமா என்றால் இல்லை என்பதே விடையாகும்.அப் பழக்கவழக்கங்களில் சிலவற்றில் எனக்கு தவறாக பட்டவற்றை,உங்களுடன் பகிர்ந்து கொள்வதே எனது நோக்கம்.


அது சிலரது பார்வைகளில் சரியாக இருக்கலாம்.இது தனியே எனது பார்வை மட்டுமே.சமூகத்தை நோக்கி விரலை நீட்டுவதற்கு நான் யோக்கிதையானவனா, அந்த யோக்கிதை எனக்கு இருக்கிறதா என்று நீங்கள் கேட்கலாம்.சரி எனக்கு அந்த யோக்கிதை இல்லை என்றே வைத்துக் கொள்வோம்.ஆனால் நானும் இந்த சமூகத்தின் ஒரு அங்கத்தவன்.சரியோ தவறோ நானும் அதற்கு பொறுப்பாளி அல்லது நானும் அதற்கு உடந்தையாக இருந்திருப்பேன் அல்லது நானே அந்த தவற்றை செய்திருக்கலாம்.ஆகவே நான் சார்ந்த சமூகத்தில் நானும் ஒரு அங்கம் என்ற ஒரு சின்ன உரிமையிலேயே நான் எனது சமுகத்தின் மீதான எனது விமர்சனங்களை முன்வைக்கின்றேன்.இதற்கு எதிர் விமர்சனங்கள் இருப்பின் நான் அவற்றை திறந்த மனதோடு தாராளமாக வரவேற்கிறேன்.



தலைப்பை பார்த்தவுடன் என்னை ஒரு துணிந்த கட்டை என்றெல்லாம் தப்பாக எண்ணவேண்டாம். நானும் உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி ஒப்பிக்காத,ஒப்பிக்கத் தெரியாத,ஒப்பிக்க முடியாத ஒரு சாதாரண,சராசரியான எழுததாளன் அல்லது பதிவர் தான்.ஆனால் எனக்கு உதை விட்டால் வேறு ஒரு பொருத்தமான தலைப்பு கிடைக்கவில்லை.அதனால் மேற்சொன்னவாறே தலைப்பிட்டுள்ளேன். மேற்படி சொல்லை நான் எனது ஊர்களிலும்,பிரதேசங்களிலும் பல பேர் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன்."அவங்கள் உப்பிடித்தான் பின்னே ஏன் மோட்டுச்சிங்களவர் எண்டு சொல்லுறது" எண்டு எல்லாம் கதைக்கக் கண்டிருக்கிறேன்.நீங்களும் உதைப்போல் கேள்விப் பட்டிருப்பிர்கள் அல்லது கண்டிருப்பீர்கள் அல்லது நீங்களே பேசியும் இருப்பீர்கள்.அதை விடுவோம்.அதற்கும் த்லைப்புக்கும் பெரிதாக ஒரு சம்பந்தமும் இல்லை.அவர்கள் மோடர்களாய் இருந்தார்களோ,இருக்கிறார்களோ அல்லது இருப்பார்களோ என்பதை ஆராய்வது எனது கட்டுரையின் நோக்கம் அல்ல.அவர்கள் எப்பிடியும் இருந்துவிட்டிட்டு போகட்டும்.பிரச்சினையில்லை. நாங்கள் அவர்களை மோடர்கள் என்று சொல்லிக் கொண்டு நாங்கள் எங்கே நிற்கிறோம் என்பது பற்றி அலசுவதே எனது நோக்கம்.



இவ்வாறு கூறிக்கூறியே அவர்களை குறைத்து மதிப்பிட்டதும்(Under Estimation) எம்மை நாமே இறுமார்ந்து கூட்டி மதிப்பிட்டதுமே(Over Estimation) இன்று எமது சமூகம் நடுத் தெருவில் நிற்பதற்குரிய காரணங்களில் ஒன்று என்பது எனது கணிப்பு.அந்தக்காலத்திலிருந்தே(50,60 களில் இருந்து)இதைச் சொல்லிக் கொண்டு நாங்கள் இன்றும் அங்கேயே நிற்கிறோம் அல்லது அதை விடவும் கீழே போய் விட்டோம்.இன்று அவர்கள் எங்கேயோ சென்று விட்டார்கள். கல்வியில், தொழில்நுட்பத்தில்,கலாசாரத்தில்,சமூக அபிவிருத்தியில், பொருளாதாரத்தில்,சமூக அந்தஸ்த்தில்,வாழ்க்கைத் தரத்தில் எல்லாவற்றிலும் அவர்கள் எங்கேயோ சென்று விட்டர்கள்.



நான் தகவல் தொழில்நுட்பம் சார்ந்தவன் என்ற வகையில் கூறுகிறேன். இந்தத் துறையில் அவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள விகிதாசாரமானது அவர்களது சனத்தொகைக்கும் எங்களது சனத்தொகைக்கும் உள்ள விகிதாசாரத்திலும் மிக அதிகமானது.தொழில்நுட்பம் மட்டமல்ல இன்னும் எல்லா துறைகளிலும் நாம் இன்னும் அதிகமாகவே அவர்களை விடப் பின் தங்கியிருக்கிறோம்.கல்வியில்(அன்று கோட்டா அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதியை எதிர்த்துப் போரிட்ட எமது சமூகம் இன்று அந்தப் புண்ணியத்தாலே தான் கொஞ்சம் எம் சமூக மாணவர்களைப் பல்கலைக்கழகம் அனுப்பிக் கொண்டிருக்கிறது),விளையாட்டில்,பொருளாதாரத்தில்(வெளிநாட்டு வருமானம் இல்லாத நிலையில் எம்மவர்களின் நிலையைப் பார்த்தால் விளங்கும் வண்டவாளம்),சமூக அபிவிருத்தியில்(ஒரு ஆணும் பெண்ணும் கதைத்தால் எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் கீத் முந்தியொரு பதிவிலே சொன்னது போல புணர்ந்து கொண்டிருக்கின்ற நாயைக் கல்லால் எறிந்து துரத்துவதைப் போல "கூ..." அடித்து குழப்புவது தான்),சினிமா பொழுது போக்குகளில்(தமிழக சினிமாவைத் தவிர்த்து ஈழத்து சினிமாவை கற்பனை பண்ணிப் பாருங்கள்),சமூக அந்தஸ்த்தில்(எங்களில் படித்தவனெல்லாம் படித்தவன் மாதிரியா நடந்து கொள்கின்றான்? படித்தவனெல்லாம் அபிவிருத்தியடையாதவன் மாதிரி நடந்து கொள்ளும் போது சமூகம் எப்படி அபிவிருத்தியடையும்?),வாழ்க்கைத் தரத்தில்(எங்களட்டை காசு எவ்வளவு தான் இருந்தாலும் எங்கள் வாழ்க்கையின் தரம் இப்போதும் ஆதிகாலத்திலேயே இருக்கின்றது)என பல துறைகளிலும் நாம் பின் தங்கியிருக்கிறோம்.நாங்கள் 50,60 களில் சொன்னதையே இப்போதும் சொல்லிச் சொல்லி இன்னமும் குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்.ஆனால் அவர்கள் எட்டிப் பிடிக்கமுடியாத அளவு தூரத்துக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்(இந்த எட்டி பிடிக்கமுடியாதவளவு தூரத்தை அடைவதற்காக ஏற்படுத்தப் பட்ட நாடகம் தான் இந்த பிரச்சினையெல்லாம்)



ஆகவே இந்த சிந்தனையை நாம் மாற்ற வேண்டும்.அவர்கள் மோடர்களாக இருந்தாலென்ன, இல்லாவிட்டால் தானென்ன. நாங்கள் எங்களைப் பார்ப்போம்.அவர்கள் எப்பிடியிருந்தாலும் பரவாயில்லை.நாங்கள் எங்களை உயர்த்தியும் அவர்களை தாழ்த்தியும் மதிப்பிடும் போது இலக்கு நோக்கியதான் எமது உத்வேகம் குறையும்.நாம் இதை மாற்றி எங்களை தாழ்த்தியும் அவர்களை உயர்த்தியும் மதிப்பிடும் போது இருவருக்குமிடையேயான திறனடிப்படையிலான வித்தியாசம்(Skill Gap) அதிகரிக்கும்.அது எங்களுக்கு இலக்கு மீதான மலைப்பை தரும்.நாங்கள் இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டுமென்று புலப்படும்.அது எங்களை கடின உழைப்பை செய்ய தூண்டும்.அது எங்களுக்குள் உத்வேகத்தை ஏற்படுத்தும்.அதனால் நாங்கள் இலக்கை நோக்கி வீறு நடை போட முடியும்.



இதே சிந்தனை எமது வாழ்க்கைக்கும் பொருந்தும்.எமது போட்டியாளரை(அவரைப் பார்த்து பொறாமைப்படத் தேவையில்லை) நாம் உயர்த்தி மதிப்பிட்டும் எம்மை தாழ்த்தியும் மதிப்பிட்டால் எமது உத்வேகம் அதிகரிக்கும்.நாம் கடும் முயற்சி செய்வோம்.உழைப்பின் ஈற்றில் நாம் வெல்ல முடியும். ஆகவே மேற்படி எமது மனோபாவத்தை சற்றே மாற்றினால் நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.என்ன சொல்லுறியள்.



(என்னடா இது நாங்களெல்லாம் 50,100,200 எண்டு செஞ்சரி, டபிள் செஞ்சரியெல்லாம் அடிச்சுக் கொண்டு போகேக்கை,இவனொருத்தன் 25 வது பதிவை முக்கி,முக்கி எழுதிப்போட்டு, ஏதோ பெரிசாக் கிழிச்ச மாதிரிக் கதைக்கிறான் எண்டு நினைக்கதையுங்கோ.உண்மையாகவே நானொண்டையும் கிழிக்கயில்லைத்தான்.எண்டாலும் ஏதோ சும்மா எழுதுவம் எண்டு தொடங்கி இண்டைக்கு இருபதைஞ்சு பதிவு வரை எழுதி முடிச்சதே பெருங்காரியம் தான்.நீங்களெல்லாம் ஒரு மாதத்திற்குள்ளேயே மிகச் சுலபமாக கடந்துவந்திருக்கும் இந்த இலக்கை அடைய எனக்கு கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் வரைக்கும் தேவைப்பட்டிருக்கிறது.ஆனால் இந்த இருபத்தைந்து பதிவுகளுக்கிடையில் யாழ்தேவி என்னை நட்சத்திரமாக்கியமையும்,ஈழத்து முற்றம் என்னை அவர்களது பதிவுக்கு பதிவெழுதிப் பங்களிக்குமாறும் என்னை அழைத்தமையும் எனது பெரிய சாதனைகளாக கருதுவேன்.இது வரைக்கும் என்ரை அலுப்புகளையும் தாங்கிகொண்ட நட்புக்களுக்கு பெரிசா ஒரு நன்றியைச் சொல்லிக் கொள்ளுறதோடை தொடர்ந்தும் அலுப்பைத் தாங்கிறதுக்காக இப்பவே பிறக்ரீசுகளைத்(ப்ரcடிcச்) தொடங்குங்கோ.பிறகு ஜெயசூரியா,கங்குலி போறதும் வாறதுமா வாறமாதிரி என்றை பதிவைப் பாத்து 'டக்' அவுட்டாகிப் போயிடக் கூடாது கண்டியளோ.அது தான் முன்னெச்சரிக்கையாச் சொல்லி வைச்சனான்.