Sunday, January 24, 2010

நான் கண்ட சுனாமி பகுதி 2

கடந்த பதிவிலே நான் சனத்துக்குள்ளாலே கஸ்ரப்பட்டு கடலுக்கண்மையிலிருந்த எமது தோட்டத்தை அடைந்ததாகக் கூறி அதிலே விட்டுச் சென்றிருந்தேன்.வாசிக்காதவர்கள்
http://vadaliyooraan.blogspot.com/2010/01/blog-post_23.htmlஐ சொடுக்கிப் பாருங்கள்.இன்று அதிலிருந்து தொடர்ந்து செல்கின்றேன்.

போய்ப் பார்த்தால் தோட்டத்துக்கை கடல்த் தண்ணி வந்து,வடிந்து போயிருந்தது. பயம் என்னை மேலும் ஒரு இறுக்கு இறுக்கியது.ஓடிப் போய் கிணத்தை எட்டிப் பார்க்க மனம் சொல்லியது. நான் கடவுளிடம் வேண்டியபடியே கிணத்துக்கை எதுவும் இருக்கவில்லை.எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை.கொஞ்ச நேரம் கிணத்துக் கட்டிலை இருந்து யோசிச்சுப் போட்டு,சரி மற்ற தோட்டங்களுக்குப் போய்ப் பார்ப்பம் எண்டு சைக்கிளையும் எடுத்து உழக்கிக் கொண்டு போய் வல்லூட்டி, ஆவலம்பிட்டி, பருத்தியோலைப்(முதலிரண்டும் தோட்டங்களினதும் கடைசி காணியினதும் பெயர்)பக்கமாப் போனேன்.எங்கும் இல்லை.



ஐந்தும் கெட்டு,அறிவும் கெட்டது போல சைக்கிள் போன பாட்டிலை உழக்கிக் கொண்டு வந்து வீட்டை வந்தால் வீட்டை மூண்டும் நிக்குதுகள்.குப்பை கூழங்களை,வள்ளங்களை அள்ளியவாறு பனையளவு எழும்பி வந்த அலை பார்த்தவுடனேயே பெட்டியள்,மம்பெட்டியளைப் போட்டிட்டு இவையள் மூன்று பேர் உட்பட தோட்டத்துக்கை நின்ற எல்லாச்சனமுமே ஒடி தப்பிவந்திட்டுதுகள்.கடலிலிருந்து ஒன்று,ஒன்றரை மீற்றர் உயரமான கடற்கரை வீதியும் முருகைக் கற்களுமே மற்ற இடங்களுடன் ஒப்பிடும் போது பெரியளவு இழப்புகளிலிருந்து எம்மயலூரைக் காப்பாற்றியிருந்தது.


ஒரு சில உயிரிழப்புக்களும் கரையிலிருந்த வள்ளங்களின் அழிவு,வீடுகள், சொத்துக்களின் சேதம், தோட்டங்களினுள் உப்புநீர் புகுந்து பயிரிடமுடியாமல் போனமை என்று மற்ற இடங்களுடன் ஒப்பிடும் போது குறைவாகவே இழப்புக்கள் ஏற்பட்டன.ஆனால் எம்மயலூர் மக்கள் வாழ்வில் என்றும் எதிர்பார்க்காதவாறு திடீரென்று கடல் ஊரினுள் வந்த பயத்தாலும்,தமது வீடுகள் சிதைந்து சின்னாபின்னமாகியிருந்ததாலும் எம்மூர்ப் பாடசாலைகளிலும் தஞ்சம் கோரியிருந்தனர்.அவர்களைப் பராமரிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு எம்மவர் தோள்களில் விழுந்திருந்தது.



நொடிப் பொழுதில் அனைவரும் படையணிகளாகப் பிரிந்தனர்.களத்தில் குதித்தனர்.ஒரு படைய்ணி கடற்கரைக்கு செல்லும் வீதியை மறித்து,"புதினம்" பார்க்கப் போகிறோம் என்று சொல்லிக் களவிலீடுபட முனைந்த கும்பல்களைத் தடுத்தது.மற்றைய படை ஊரவர்களிடம் காசு சேர்த்து,அத்தியாவசியப் பொருட்கள் வாங்கப் புறப்பட்டது.பெண்கள் படையணியோ சமைக்க,அதற்கு உதவி ஒத்தாசையாக இன்னொரு படையணி களத்தில் குதித்தது.இன்னும் ஒன்று சம்பவ இடத்தில் மீட்புப் பணியிலும் மற்றுமொன்று பாடசாலைக்குச் சென்று அவர்களின் உடனடித் தேவைகளைப் பார்த்துக் கொண்டது.அரச, அரச சார்பற்ற உதவிகள் கிடைத்த மூன்றாம் நாள்வரை முழுக்க முழுக்க எம்மூரவர்களாலேயே அவர்கள் பராமரிக்கப் பட்டிருந்தன்ர்.



எது எப்பிடியோ இந்த உலகம் முழுக்க அழியாத வடுக்களை ஏற்படுத்திய சுனாமி என் வாழ்விலும் மறக்க முடியாத் அனுபவத்தைப் பதித்துச் சென்றிருந்தது.எம்மக்களைப் பெரும் அழிவின்றுங் காத்த முருகைக் கற்கள் அந்தச் சுனாமியின் பின்னரும் இன்றுவரை சிதைவடைந்தாவாறே, அதைத் திருத்தி மீண்டும் ஒரு அணையாகப் போடப் படாமல் கவனிபாரற்றுக் காணப் படுகின்றன.இன்னுமொரு சுனாமிவருமாக இருந்தால் நேரே அது உள்ளே புகுந்துவிடக் கூடிய நிலையில் தான் அந்த முருகைக்கற்கள் ஆங்காங்கே சிதறுண்டு, கடற்கரையில் கால் நனைக்க வருபவர்களையும் குத்திக் கொண்டு கிடக்கின்றன.இலங்கையிலும் அதன் கோர தாண்டவத்திற்குப் பலியான எம் உறவுகளை நினைவு கூர்வதோடு,அந்த அனர்த்தத்தில் உறவுகளைத் தொலைத்து, சொத்துக்களை இழந்து, இன்றும் கொட்டில்களிலும், கூடாரங்களிலும் எத்தனையோ இடர்களுக்கு மத்தியிலும் சீவிக்கும் உறவுகளுக்குமாகப் பிரார்த்திப்பதோடு கடல் தாயிடம்,"நீ மீண்டுமொரு முறை உள்ளே வருவதாகவிருந்தால் ஒன்றில் எம் எல்லோரையும் அள்ளிச் செல் அல்லது சுனாமி வந்து ஐந்து ஆண்டுகள் கழிந்த பின்னரும் பூரண நிவாரணங்களோ, வீடுகளோ, வசதிகளோ,முருகைக் கல்லணைகளோ கட்டித்தரப்படாத பாவிகளான எம்மிடம் வராதே " என்று விண்ணப்பித்து முடிக்கின்றேன்.

Saturday, January 23, 2010

நான் கண்ட சுனாமி

சுமாத்திராத் தீவுகளில் கருக்கொண்ட சுனாமி சத்தம் சந்தடியின்றி வந்து, எம் கரையை முட்டி மோதி,பொங்கி எழுந்து,சுற்றிச் சுழன்றடித்து ஆயிரமாயிரம் உறவுகளையும், கோடானுகோடி சொத்துக்களையும் சின்னாபின்னமாக்கி ஆண்டுகள் ஐந்து கரைந்தோடிவிட்டன. சிரித்து மகிழ்ந்து,சிறு கதை பேசி,மலை போல் தடைகள் வரினும் மசிந்துவிடோமெனும் வைராக்கியத்துடன் தாமுண்டு,தம்பாடுண்டு என திளைத்திருந்த தம் பிள்ளைகளை கடலன்னை அள்ளி ஆண்டுகள் ஐந்து உருண்டோடிவிட்டது.


தன் குழந்தைக்கு சோறூட்டிகொண்டிருந்த தாய்க்கும்,உண்ட சேய்க்கும் வாய்க்கரிசி போட்ட கடலன்னை, கணவன், மனைவி, குழந்தை குட்டி சுற்றம் முற்றம் என குடும்பங் குடும்பமாக எல்லாரையும் ஒரு சில நொடிகளில் ஒரே குழியில் படுத்தியது. எனக்கும் இந்த சுனாமியால் நேரடி அனுபவம் இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஒரு அனுபவம் உள்ளது.அதனை உங்களுடன் பகிர்வதற்கே இந்த பதிவு.ஒரு மாதத்திற்கு முன்னரே சுனாமி வந்த 26 ம் திகதியன்று போட்டிருந்திருக்க வேண்டியதொரு பதிவு.ஆனால் முடியவில்லை.அதனால் இப்போது தான் பதிவிடுகின்றேன்.அதுவும் நீண்டு விட்ட படியால் அதை இரண்டாய் உடைத்துத் தருவதாய் உத்தேசம்,சிரமம் பாராது வாசிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்



எங்களுக்கெல்லாம் சோறு போடுகின்ற லக்ஷ்மிகள்,நாங்கள் அள்ளுகின்ற அட்சயபாத்திரங்களான எமது தோட்டங்கள் தான் எங்களது ஊரின் வடக்குப் பக்க எல்லை.பரந்து விரிந்து பச்சைப் பசேலென நீண்டு கிடக்கும் எம் அன்னபூரணிகளைத் தாண்டி ஒரு கரையோரக் கிராமம்.கடாரம் என்ற சோழனவன் கப்பலில் சென்ற இந்துமகா சமுத்திரம் அந்தக் கிராமத்தை முத்தமிட்டுச் செல்லும்.எங்கள் அயல்கிராமமான அவர்களுடன் எங்களுக்கு அன்னியோன்னியமான உறவே எப்போதும் இருந்து வந்தது.


எங்கன்ரை ஊர் பெண்டுகள் மீன் வாங்க கடற்கரைக்கு போனால்,தாங்கள் வியாபாரிகளுக்கு மீனை வித்துக் கொண்டு நிண்டாலும் இவையளைக் கண்டவுடனை "இஞ்சை வாங்கோ பறுவதமக்கா ஏன் அங்கேயே நிக்கிறியள்.இதைக் கொண்டு போய் கொஞ்சம் வடிவாப் பெடியளுக்கு காய்ச்சிக் குடுங்கோவன்.பாவம் வளர்ற பெடியள்.சும்மா வெள்ளிக் கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் பாத்து பூசனிக்காயையும்,கத்தரிக் காயையும் காய்ச்சிக் குடுத்துக் கொண்டிருக்காமல்." எண்டு சொல்லி கொஞ்சம் உண்டன அள்ளிக் குடுப்பினம்.


இவையளும் பிறகு தங்கடை வெங்காயங்க்ள் கிண்டிக் கொண்டு வரேக்கை 4,5 ,பிடி வெங்காயத்தையும் பூசனிக்காயள்,கத்தரிக்காயளையும் கொண்டு போய்க் குடுத்து "எணேய் சின்னவன் பெஞ்சாதி சும்மா நெடுக உந்த மீனுகளைத் திண்டால் இப்ப உந்தக் கண்டறியாத வருத்தங்களெல்லாம் வருகுதாமல்லே.உந்த மீனுகளைத் நெடுகத் தின்னிறதை விட்டிட்டு கொஞ்சம் மரக்க்றியளையும் தின்னுங்கோவனடியப்பா." எண்டு சொல்லிக் கொண்டு போய்க் குடுப்பினம்.அதோடை எங்கடையாக்களின் மாட்டுப் பாலை பெருமளவு இறக்குமதி செய்து எங்கடையாக்களுக்கு கொஞ்சம் "பொக்கற் மணியைத்"தாறதும் அவையள் தான்.இப்பிடியாகத் தான் ஒட்டியுறவாடி இருந்தன ஊர்களிரண்டும்.


அப்போது எனது உயர்தரப் பரீட்சை முடிவுகள் வந்து பல்கலைக் கழகம் கிடைத்திருந்த படியால் எனது விடியற்காலை நித்திரைகளை நான் எதுவித நம்பிக்கையில்லாத் தீர்மானங்களும் கொண்டுவந்து இடையிலை குழப்பாமல் 7.30, 8.00 எல்லாம் தாண்டி நீட்டிக் கொண்டிருந்த காலமது.ஒருமாதிரி எழும்பி பல்லை விளக்கிக் கொண்டு நிற்க,"அம்மம்மா ஏற்கனவே ஐயந்தெணிக்கு(எமது தோட்டங்களில் ஒன்றின் பெயர்) போட்டா.நானும் அப்பாவும் இப்ப போறம்.புட்டு அவிச்சு வைச்சுக் கிடக்குது.கறியும் கிடக்குது.போட்டுச் சாப்பிடு நாங்கள் போறம்" எண்டு அம்மா சொல்லிப் போட்டு அப்பாவோடை தோட்டத்துக்குப் போட்டா.தம்பி,தங்கச்சியும் எங்கேயோ ரியூசனக்கு எண்டு நினைக்கிறன்.நான் பல்லை விளக்கிப் போட்டு,அப்ப சன் ரீவியில போய்க் கொண்டிருக்கிற வெண்ணிற ஆடை மூர்த்தியின் "மீண்டும் மீண்டும் சிரிப்பு" நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.



ஒரு 9.20 தாண்டியிருக்கு.கடலிலை ஏதோ சத்தம் கேட்டுது.நான் அது வழமையா நேவியின்றை டோறாக்கள் கரைக்கு கிட்ட ரோந்து வரேக்கை அலை கூட அடிக்கிறதாலை கேட்கிற சத்தம் தான் எண்டு நினைச்சுப் போட்டு என்ரை பாட்டில புட்டையும் சாப்பிட்டுக் கொண்டு,ரீவியையும் பார்த்துக் கொண்டிருந்தன்.ஒரு 5,10 நிமிஷம் போயிருக்கும்."என்ரை ஐயோ.... அம்மா..." எண்டு கத்திக் கொண்டு எங்கடை ஊரின்ரை மெயின் றோட்டாலை சனம் கத்திக் கொண்டோடிக் கொண்டிருக்கிற சத்தம் கேட்டிச்சுது.கோப்பையை அதிலை வைச்சுப் போட்டு ஓடி வந்து கேற்றடியிலை நிண்டு பார்த்தன்.சனம், "கடல் ஊருக்கை வந்திட்டுது" எண்டு சொல்லிக் கொண்டு பள்ளிக்கூடப் பக்கம் ஓடிக் கொண்டிருந்துதுகள்.


கொஞ்ச நேரம் அதில நிண்டு பார்த்துக் கொண்டு நிக்கேக்கை தான் அம்மா, அப்பா, அம்மம்மா மூண்டு பேரும் தோட்டத்துக்கை எண்டது ஞாபகம் வந்தது.தோட்டம் கடலிலையிருந்து ஒரு 75 m இல்லை எண்ட படியாலை பயம் என்னைத் தொற்றிக்கொண்டது.டக்கென்று சேட்டொன்றைக் கொளுவிக் கொண்டு சைக்கிளையுமெடுத்துக் கொண்டு வீச்சா உழக்கிக் கொண்டு வெளிக்கிட்டன். கடற்கரையிலையிருந்து வாற றோட்டாலை நியாயமான சனம் வந்து கொண்டிருந்துதுகள்.நான் சனம் வந்து கொண்டிருந்ததுக்கு எதிர்த் திசையில கடற்கரையை நோக்கியதான றோட்டலை போறதுக்கு முயற்சித்துக் கொண்டிருந்தன்.



சனமெல்லாம் அழுது குழறிக் கொண்டு "பனையளவுக்கு கடல் எழும்பி வந்து எல்லாத்தையும் கொண்டு போட்டுது" எண்டு சொல்லிப் புலம்பிப் புலம்பி வந்து கொண்டிருந்துதுகள். ஒரு 45, 50 வயசு அம்மா மேலே ஒரு துணியுமில்லாமல் ஓடி வந்து கொண்டிருந்தா.(சுனாமி கன பேரது துணிகளைக் களைந்து சென்றதை நான் பின்னர் பத்திரிகைகளில் படித்திருந்தேன்)சனம் என்னை உள்ளே போக விடாமல் தடுத்தது."தம்பி.. ராசா.. உள்ளை போகாதையணை" எண்டு சொல்லிக் கெஞ்சி மறித்தனர்.ஆனால் எதையும் கேட்கும் மனநிலையில் நான் இருக்கவில்லை.நான் அச் சனத்துக்குள்ளாலை வளைச்சுக் கிளைச்சு,வெட்டியாடி ஒரு மாதிரித் தோட்டத்துக்குப் போய்ச் சேர்ந்தன். போய்ப் பார்த்தால் தோட்டத்துக்கை கடல்த் தண்ணி வந்து,வடிந்து போயிருந்தது. பயம் என்னை மேலும் ஒரு இறுக்கு இறுக்கியது.ஓடிப் போய் கிணத்தை எட்டிப் பார்க்க மனம் சொல்லியது.நானும் போய் எட்டிப் பார்த்தேன்... பதிவின் நீட்சி கருதி இத்தோடு இந்தப் பகுதியை நிறுத்தி தொடர்ந்து என்ன நடந்தது என்பதை அடுத்த் பதிவிலே பதிவிடுகின்றேன்.நன்றி.

Wednesday, January 13, 2010

ஆலங்காய்ப் புட்டும் அகலத் திறந்த வீதிகளும்

என்னடா இது மொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறது மாதிரி ஆலங்காய்ப் புட்டைக் கொண்டு வந்து பாதையோடை முடியுறான் எண்டு நீங்கள் நினைக்கிறது எனக்கு விளங்குது.இரண்டுக்கும் மொட்டந்த்லை,முழங்கால்ப் பொருத்தம் தான்.ஆனால் என்ன ஒரு றைமிங்காய் இருக்கெட்டுமெண்டு தான் வைச்சுக்கிடக்குது.ஏன் அதைப் பற்றி அலட்டிக் கொண்டு நிக்கிறியள்.அது கிடக்கட்டும்.அதை விட்டிட்டு விசயத்துக்கு வருவம்.



புதுவருச லீவுக்கு ஒரு மாதிரி வீட்டை போய் வந்தாச்சுது.இந்தமுறை லீவில் என்ரை ஸ்பெசலென்னண்டால் ஆலங்காய்ப் புட்டுத்தான்.கனகாலஞ் சாப்பிட்டு,வெளிக்கிட முந்தி யாரோ ஒருத்தன் ஞாபகப் படுத்திப் போட்டான்,பேந்தென்ன போன கையோடை "நாண்டு கொண்டு" நிண்டு சாப்பிட்டாச்சுது.சமாதான காலத்தில பாதை திறந்ததிலிருந்து, பல்வேறு காலகட்டங்களில பஸ்ஸால,கப்பலால,பிளேனால, பிறகும் பஸ்ஸால,ஹயசால எண்டு பலவேறு காலகட்டங்களில்,பலவேறு கஷ்ரங்களைப் பட்டு யாழ்ப்பாணம் போய் வந்த ஆக்களில் நானும் ஒருவன்.என்னத்தை தான் மலையிலை ஏறி,அந்தர் அடிச்சுக்,கடலிலை குதிச்சுக்,கப்பலிலையுங் கவிட்டுத் தான் யாழ்ப்பாணம் போக வேண்டியிருந்தாலும் ஊருக்குப் போப் போறம் எண்ட உடனை எங்களுக்கெல்லாம் உது பின்னங் காற்சட்டையிலை பட்ட புழுதி மாதிரிக் கண்டியளோ.சும்மா தட்டிப் போட்டுப் போய்க் கொண்டேயிருப்பமில்ல. அப்பிடித்தான் இந்தமுறையும் ஒரு மாதிரிப் போய் வந்தாச்சுது.



சற்குணமண்ணையின்றை ஹையசில தான் நான் கருணையூரானோடை போயிருந்தன்.வெள்ளவத்தையில உள்ள றோட்டுக்களும் தெரியாது,எக்காய் தெக்காயை விட்டால் சிங்களமும் தெரியாது.ஆனால் ஓட்டத்துக்கு வந்த சற்குணமண்ணை ஒரு துணிஞ்ச கட்டை தான்.இடையில லைற் போட இல்லையெண்டு ஏதோ சொல்லி ஆளின்ரை லைசென்சையும் பறிச்சுப் போட்டாங்கள்.ஒரு மாதிரி ஆளும் இழுத்துக் கொண்டு போய்ச் சேர்த்துப் போட்டார். வவுனியாவைத் தாண்டி போற வழியில எங்களுக்காக சிலுவை சுமந்தவர்களின் சிலுவைப் பயணங்கள் தொடர்கின்றதைப் பார்க்கேக்கை எங்களுக்காக இவ்வளவு கஷ்ரப்பட்ட அந்த சனத்துக்கு கொழும்பிலையிருந்து கொண்டு சும்மா கூடிக் கூடி பெரிய ’பற்றாளர்கள்’ போல் கதைப்பதை விட்டி ஏதாவது செய்திருக்கிறோமா எண்டொரு கேள்வி உள்ளுக்கை ஒரு குற்ற உணர்ச்சியோடை குத்திச்சுது.U.N இன் நீலநிறக் கூடாரத்துக்குள்ளான அவர்களின் அவலம் இன்ன்மும் நீள்கிறது.

ஏ9 றோட்டின் இரண்டு பக்கமும் அவர்களால் தங்களுக்கு அன்றாடம் கஞ்சி வார்க்கும் என்றும்,மற்றவர்களிடம் பிச்சையெடுப்பதிலும் பார்க்க சுயமாக உழைத்து வயிற்றைக் கழுவுவம் என்ற நம்பிக்கையிலும் சண்லைற் சவுக்காரம்,சேர்ப் எக்சல்(Surf Excel)பக்கற்,கூல் இல்லாத சோடா, பல்லி முட்டாஷ் என்று கொஞ்ச சாமான்களை வைச்சு அமைக்க்ப்பட்ட சின்னஞ் சிறு கொட்டில்களில் யாராவது வருவார்களா என்ற எதிர்பார்ப்போடு காத்துக் கிடக்கும் அந்த சிலுவையாண்டவர்களின் நிலையை நேரில் பார்த்தால்த் தான் விளங்கும்,அந்த கொடுமையை.ஆனால் சூப்பர் மார்க்கற்றில் சாமான் வாங்கி ,கூல் சோடா குடிச்சு,ஹையசில போற எங்களுக்கு அதிலையெல்லாம் நிண்டு சாமான் வாங்கினால் ஒரு முழம் குறைஞ்சிடுவம் என்று ஒரு கவலை பாருங்கோ. என்ன தான் இருந்தாலும் அண்ணை சத்தியமா உந்த முறிகண்டியில போய் பல்லை விளக்காட்டாலும் பரவாயில்லை,ஒருக்கா வாயைக் கொப்பளிச்சுப்போட்டு சாப்பிடுற அந்த முறிகண்டி ரோல்ஸ் மாதிரி ரோல்ஸ் நான் வேறை ஒரு இடமும் சாப்பிட்டதில்லை.அதே மாதிரித்தான் எத்தினையை இழந்தாலும்,இண்டைக்கும் அந்த வன்னி மக்கள் இழக்காத அந்த வெள்ளை உள்ளத்தையும்,வெள்ளந்தித்தனத்தையும் வேறையொரு இடத்திலையும் காணயேலாது பாருங்கோ.இண்டைக்கும் அதால போகேக்கை முந்தியெல்லாம் த.போ.க. பஸ்களில் முறிகண்டியில ஏறி கச்சான் விக்கிற அந்த பல்லு கொஞ்சம் காவியடித்த ஒரு சின்ன அண்ணை உடப்ட கனபேர் எம் கண்முன்னே இருந்து போகமறுக்கிறார்கள்.



வசந்தம் வீசிக் கொண்டிருக்கும் மண்ணின்,வரவிருக்கும் தலை நகரத்தில்,ஒண்டுக்குப் போவதற்கு 'ஒபென்' இலை போகவேண்டிய நிலைமை கண்டியளோ.(பொம்பிளையள் பாடு என்னெண்டு வடிவா தெரியாது)15,20 பஸ்சில போன சனம் ஒன்றாக இறங்(க்)கியதால் வந்த வினை தான் உது.வெட்ட வெளியில போறது ஒண்டும் பெரிய விசயமில்லை.அங்கனைக்கை வந்து நிண்டு கொண்டு அங்கால தள்ளிப் போ இஞ்சால தள்ளிப் போ எண்டு நாய் கலைக்கிறது மாதிரி கலைச்சால்?சனம் என்ன,மனிசரோ இல்லாட்டில் நாயள்,பேயளோ? அது சரி எங்கடை சனம் இல்லையெண்டால் தலைக்குமேலையும் பெய்ஞ்சு போட்டும் போகும்.அதுக்காக வேண்டி இப்பிடிக் கலைச்சால்?முறிகண்டிப் பிள்ளையாரோடை போட்டிக்கு Business ஐத் தொடங்கிப் போட்டு உழைப்பை மட்டும் பார்த்தால்க் காணுமே.கொஞ்சம் இதுகளையும் கவனிக்கத் தானே வேணும்?இதுகளோட வழிநெடுக கண்ட கனமான காட்சிகளடோயே வீடு போய்ச்சேர வேண்டிப் போச்சுது. அங்கை கொஞ்சம் பரவாயில்லாமல் தான் போச்சுது.


எங்கட வாழ்க்கையில எங்களுக்கெல்லாம் வெடிவால் முளைச்சு நாங்களெல்லாம் கூவ வெளிக்கிட்ட, என்ர வாழ்வில் 'வசந்தம்' வீசின காலத்து ரியூசன் நட்புக்கள் இருவர் வெளியிலிருந்து வந்ததாலும் ஒன்றாக கசூரினாவுக்கு ட்ரிப் அடிச்சது,எங்கன்ரை Team பெடியளெல்லாம் கனகாலத்துக்குப் பிறகு ஒன்றாகக் கிரிக்கட் விளையாடினது,ஒன்றும் பேசாமல் பறையாமல் மாமா ஜேர்மனியிலையிருந்து வீட்டு வாசலை வந்து நிண்டது,நாங்களெல்லாம் சின்னனா இருக்கேக்க உந்த புக்கை,மோதகத்துக்கு கூடுதலா அடிபடுற திருவெம்பாவைக் கடைசிநாளான் திருவாதிரையன்று ஊரில நின்றது,என்னோட ஓராமாண்டிலையிருந்து ஒண்டாப் படிச்சு இப்ப யாழ்ப்பாணக் கம்பசில படிக்கிற நண்பியொருத்தியைச் சந்திச்சது,எங்கட தோட்டங்களை வெங்காயம் பயிரிட்டாப்போல 3,4 வருசத்துக்குப் பிறகு பார்த்தது,பனங்கிழங்கு கிண்டிச் சாப்பிட்டது,பனம் பூரான் தோண்டிச் சாப்பிட்டது,எங்களுக்காக சிலுவைசுமக்கச் சென்று ஊர் மீண்டிருந்த எம் ஊர் உறவுகளைச் சந்திச்சது,அவர்க்ளை மட்டுமில்லாமல் தம் மேட்டுக்குடித்தனத்தைக் கைவிட்டு இம்முறையும் எம்மூரவர்களால் உள் அனுமதிக்கப்பட்டிருந்த வேறு உறவுகளையும் சந்திச்சது, பட்ட சீசனென்டதாலை ஏத்தின பட்டங்கள்,படலங்களை "ஆ"வெண்டு பார்த்தது, இந்தமுறையும் ஜூனியர் பெட்டையளைச் சந்திக்கிற சந்தர்ப்பங் கிடைச்சது,எங்கடை கம்பசின்ரையும்,ஊரின்றையும் சிங்கத்தோடை ஒண்டா ஊரில 4 வருசத்துக்குப் பிறகு நிண்டது,புது வருசம் பிறக்கேக்கை வீட்டை நிண்டது,எங்களுக்கு போக அனுமதி மறுக்கப்பட்ட வீதிகள் கொஞ்சம் திறக்கப் பட்டது என்று கன விசயங்கள் இருந்தால காலில சக்கரம் கட்டிக் கொண்டுதிரிந்த மாதிரியாப் போச்சுது இந்த மூன்று நாலு நாளும்.


நாங்கள் எங்கடை சின்ன வயசுகளில் ஒடித்திருந்திருக்க வேண்டிய,எங்கடை பத்து வயசுகளுக்கு முந்தி மூடப்பட்ட பல வீதிகள் பதினாலு,பதினைஞ்சு வருசங்களுக்குப் பிறகு திறக்கப் பட்டிருக்குது.கடற்கரை வீதி,கல்லூரி வீதி,அம்மன் கோவில் வீதி,பிரதேச பிரிகேடியர் தங்கியிருந்த வீதி என்று கொஞ்சம் வீதிகள் திறக்கப்பட்டிருந்தது,இன்னும் மிச்சம் கிடக்குது. ஆனால் தாங்கள் பிறந்து, வளர்ந்து,படுத்து எழும்பிய பரம்பரை பரம்பரையாக ஆண்ட நிலங்களிலிருந்து எத்தனை உறவுகள் கூண்டோடு கலைக்கப் பட்டிருக்கிறார்கள்.அவ்ர்களின் நிலைமையையெல்லாம் இவர்கள் எப்பததான் நினைச்சு,எப்பத் தான் அதுகளெல்லாம் சொந்த வீட் போய் கூழோ கஞ்சியோ காய்ச்சிக் குடிக்கிறது எண்டு தெரியேல்லை.

'அன்னத்துக்கு' வீட்டைக் குடுக்கப் போறம் எண்டு அறிவிப்பு வந்த கையோடை ஏ9 ஐ 24 மணித்தியாலமும் திறக்கிறம் எண்டு அறிவிப்பு வருகுது.ஆனால் மாறி நாங்கள் வீட்டிலை 'வெத்திலையை' வளர்க்கிறம் எண்டு சொல்லியிருந்தால் உதுகும் வந்திருக்காது.என்னத்தை தான் செய்தாலும் செய்யாட்டாலும் பாதை திறப்புக்களோ,சண்டை இல்லாதபடியால சமாதானமாத்தான் சனம் இருக்குதுகள் எண்ட சுயகற்பிதங்களோ ஒருபோதும் நிரந்தர சமாதானத்தை ஒரு போதும் உருவாக்கப் போவதில்லை என்ற எனக்குத் தெரிந்த,ஆனால் தெரியாத இந்தத்தலைப்புக்கு சம்பந்தமில்லாத அரசியலை தொடாமல் இத்தோடு முடிக்கின்றேன்.
நண்பர்களே நான் ஒரு நிலைக்கு(stable) வந்த பின் தொடர்ந்து,சீராக அரசியல், அனுபவம், நகைச்சுவை,விளையாட்டு,சமூகம் என கலந்து ஒரு பஞ்சாமிர்தமாகக் கொடுப்பேன் என்று நம்பி,அதுவரை சற்று பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்